நடிகர் ரஜினிகாந்தின் 170-வது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளார். இந்த படத்திற்கும் அனிருத்துதான் இசை. படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.
இந்த படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரத்தில் செட் அமைக்கும் பணிகள் கடந்த 10 நாள்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு நேற்று சென்றார்.
இதையும் படிக்க | ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்: யாருக்கு?
இந்த நிலையில், ரஜினி 170-வது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படமாக்க உள்ளனர். அது முடிந்ததும் படத்தின் மற்ற படப்பிடிப்பை கன்னியாகுமரி, நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.