லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அக்.19-ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகிறது.
இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா, கவுதம், மிஷ்கின் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லியோ படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “தளபதி விஜய் அண்ணனின் லியோ தரம், லோகேஷ் கனகராஜின் சிறப்பான உருவாக்கம். அன்பறிவு மாஸ்டர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸுக்குப் பாராட்டுக்கள். எல்சியூதான். படக்குழுவிற்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டு இருந்தார்.
அதனைத் தொடர்ந்து லியோ படம் எல்சியூ தான் என இணையத்தில் ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கினர். நாளை (அக்.19) படம் வெளியாக உள்ள நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எல்சியூ எனக் குறிப்பிட்டு உதயநிதி ட்வீட் செய்தது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் அந்த ட்வீட்டிலேயே எல்சியூ-க்கு பக்கத்தில் அவர் கண்ணடித்த எமோஜி போட்டிருந்தார் பார்த்தீர்களா? லியோ நாளை வெளியாகிவிடும். படம் எல்சியூவா இல்லையா என்பதை நாளை தியேட்டருக்கு சென்று பாருங்கள் என தெரிவித்துள்ளார்.