விவாகரத்தா? உயிருள்ளவரை அவளுக்கு ஆதரவாக இருப்பேன்.. வில் ஸ்மித் பதிலடி!

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தன் மனைவி குறித்து மனம் திறந்துள்ளார்.
விவாகரத்தா? உயிருள்ளவரை அவளுக்கு ஆதரவாக இருப்பேன்.. வில் ஸ்மித் பதிலடி!

நடிகர் வில் ஸ்மித் ‘கிங் ரிச்சர்டு' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை 2022 ஆம் ஆண்டு பெற்றார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவி ஜடா ஸ்மித்தை கிண்டலடிக்கும் விதமாக கருத்து தெரிவித்தார். 

இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். பின்னர்,  'என் மனைவி குறித்து இனி நீ பேசக் கூடாது' என ஆவேசமாக பேசினார். இதனையடுத்து உலகளவில் வில் ஸ்மித்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன.

பின், அதற்காக வில் ஸ்மித் மன்னிப்புக் கேட்டார். இந்நிலையில், சில நாள்களுக்கு முன் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார்.

அப்போது, “2022 ஆஸ்கர் விருது நிகழ்வில், ‘வில் ஸ்மித்தின் மனைவி’ என அறிமுகப்படுத்தியது அதிர்ச்சியாக இருந்தது. கிறிஸ்ஸை அறைந்ததும் நான் வில் ஸ்மித் என்மீது வைத்திருந்த அன்பை உணர்ந்தேன். அது, எங்களை இன்னும் ஆழமான உணர்வுக்குள் கொண்டு சென்றது. அந்நிகழ்வில், ஸ்மித்தின் மனைவியாகக் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அங்கிருந்து வெளியேறும்போது இந்தப் பிரச்னைப் புயலை இருவருமாக சேர்ந்து கடப்போம் என மனைவியாக ஆதரவாக இருந்தேன்.” எனத் தெரிவித்திருந்தார். 

ஆனால், ‘மனைவி’ என அழைத்தது அதிர்ச்சியாக இருந்ததா? உங்களுக்காகத்தானே வில் ஸ்மித் ஒருவரை அடித்தார். இப்படிப் பேச எப்படி மனம் வருகிறது? என பலரும் ஜடாவை விமர்சித்து வருகின்றனர்.

தொடர்ந்து, வில் ஸ்மித் அளித்த நேர்காணலில், “நாங்கள் கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதால், கணவன் - மனைவி என அழைத்துக்கொள்வதில்லை. ஆனால், வாழ்க்கை துணைகளாக நினைக்கிறோம். அந்த சுதந்திரத்தை நீங்கள் அடையும்போது இறுதிவரை நீங்கள் யாரோ ஒருவருடன் இருக்கிறீர்கள் என்பதை உணரலாம். இதில், ஒப்பந்தத்தை எவரும் முறிப்பதில்லை. எங்கள் உறவை முறிப்பதற்கான எதையும் அவளால் செய்ய முடியாது. நான் சாகும் வரை, என் ஆதரவு அவளுக்கு உண்டு.” எனக் கூறி விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

வில் ஸ்மித்தும் ஜடா பிங்கெட்டும் கடந்த 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, 2016 முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதேநேரம், ஜடா தன் கணவர் வில் ஸ்மித்தை இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள முயன்று வருவதாகக் கூறுகிறார். விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு இருவரும் அளித்த பேட்டிகளைப் பார்த்தால், ‘அடித்துக்கொள்வோம், விலகிக்கொள்வோம். ஆனால், ஒருபோதும் பிரிய மாட்டோம்’ என்பதுதான் பதிலாக இருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com