ரக்ஷித் ஷெட்டி, ருக்மணி வசந்த் நடிப்பில் வெளியான கன்னட திரைப்படம் ‘சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ' படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
கடந்த செப்.1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தொடர்ந்து ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த பின் இந்திய அளவில் இப்படம் கவனம் ஈர்த்துள்ளது.
இதையும் படிக்க: லியோ முதல்நாள் வசூல் எவ்வளவு?
கார் ஓட்டுநரான காதலன், தன் காதலி சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என ஆசைப்பட்டு செய்யாத குற்றத்திற்காக பணத்தை வாங்கிக்கொண்டு சிறைக்குச் செல்கிறான். அங்கு, அவன் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் வெளியில் இருக்கும் காதலியின் நிலையுமாக கதை விரிகிறது. இறுதியில் ஒரு டிவிஸ்டைக் கொடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான சைட் பி-க்கு முன்கதைச் சுருக்கத்தைக் கூறியிருக்கின்றனர்.
கன்னட ரசிகர்களை மட்டுமின்றி இப்படம் பலரையும் கவர்ந்து வருவதால் அடுத்த பாகத்திற்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் பி பாகம் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான ரக்ஷித் ஷெட்டி தெரிவித்துள்ளார். முன்னதாக, அக்.27 ஆம் தேதி இப்படம் வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.