நடிகர் அர்ஜுன் தாஸுடன் பகிர்ந்து படத்தையொட்டி எழுந்த கருத்துகளுக்கு நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி விளக்கமளித்துள்ளார்.
மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி. அவர் நடிப்பில் வெளியான ‘மாயநதி’, ‘வரதன்’, ‘காணக்காணே’ உள்ளிட்ட மலையாளப் படங்கள் விமர்சன ரீதியாகவும் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தமிழில் 'ஆக்ஷன்’ ‘ஜகமே தந்திரம்’, ‘கார்கி’,பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி படங்களில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.
இதையும் படிக்க | தமிழ்நாடா? தமிழகமா? இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில்
சமீபத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி ’கைதி’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் அர்ஜுன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதனைக் கண்ட பலரும் அவருடன் காதலில் உள்ளதாகக் கருதி தங்களது வாழ்த்துகளை ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், “இவ்வளவு தூரம் இது பெரிதாகும் என எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சந்தித்தோம். புகைப்படம் எடுத்தோம். அதனை பதிவிட்டேன். அதில் விவரிப்பதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் நண்பர்கள். நேற்றிலிருந்து எனக்கு செய்தி அனுப்பிய அனைத்து அர்ஜுன்தாஸ் ரசிகர்களே அவர் எப்போதும் உங்களுக்கானவர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் காதல் தொடர்பாக பரவிவந்த கிசுகிசுவிற்கு ஐஸ்வர்யா லக்ஷ்மி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.