கோயமுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழகம், தமிழ்நாடு பெயர் தொடர்பாக கேள்விக்கு பதிலளித்தார்.
கோயமுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் தமிழகம், தமிழ்நாடு பெயர் சர்ச்சை தொடர்பான கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்துப் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “வந்திருக்கும் நிகழ்ச்சி தொடர்பாக மட்டுமே பேசலாம். எனக்கு தமிழ்நாடு என தெரிவிப்பதிலேயே விருப்பம்” எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | கால் கட்டுடன் சீரியலில் நடிக்க வந்த ஆல்யா மானசா!
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் எனக் குறிப்பிட வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பாகத் தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்னும் 10 தினங்களில் நடிகரின் விஜய்யுடன் இணைந்துள்ள படத்தின் அப்டேட்களை எதிர்பார்க்கலாம்” என்றார்.
மேலும் “உயிரை இழக்கும் அளவிற்கு கொண்டாட்டங்களில் ஈடுபடவேண்டாம். அனைத்து ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ரசிகர்கள் தங்களது பொறுப்பை உணர வேண்டும். சினிமா அவ்வளவு முக்கியம் அல்ல. வெறும் சினிமாதான். படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிடுவதே போதுமானது. ஒரு உயிரே போகிற அளவிற்கு கொண்டாட்டம் தேவையில்லை என்பது எனது கருத்து” என்றார்.