பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டி இறுதி வாரத்தை எட்டியுள்ள நிலையில் வெற்றியாளரை காண பார்வையாளர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6-வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுவரை சாந்தி, அசல், செரினா, மகேஸ்வரி, நிவாசினி, ராபர்ட், குயின்ஸி, ராம், ஜனனி, ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டா, ரச்சிதா, ஏடிகே ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜி.பி. முத்து தனிப்பட்ட காரணங்களால் தானாகவே போட்டியைவிட்டு விலகினார்.
இதையும் படிக்க | ஸ்ருதி ஹாசன் நடித்த 2 படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல்!
இந்நிலையில், ஆறு போட்டியாளர்கள் இறுதி வாரத்தில் காலெடுத்து வைத்துள்ளனர். இதில் ஒரு வெற்றியாளர் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படுவார். அவருக்கு ரூ. 50 லட்சமும், இரண்டாவது வெற்றியாளருக்கு ரூ. 25 லட்சமும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
தற்போது வீட்டிலிருக்கும் ஆறு போட்டியாளர்களில் யாராவது ஒருவர் விருப்பப்பட்டால் இந்த வாரம் அறிமுகமாகும் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டைவிட்டு உடனடியாக வெளியேறும் வாய்ப்பும் அளிக்கப்படும்.
அஷீம் மற்றும் விக்ரமனுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமுள்ள நிலையில் இவர்கள்தான் முதல் இரண்டு இடங்களை பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவின் மூன்றாவது இடமும், மைனா, அமுதவாணன் முறையே நான்கு, ஐந்து இடங்களை கைப்பற்றுவார்கள் என்றும் கதிரவன் பணப்பெட்டியுடன் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாகவும் கருத்து நிலவுகிறது.
எனினும், மக்களின் வாக்குகள் அடிப்படையிலேயே வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், கடைசி நிமிடத்தில்கூட கணிப்புகள் மாற வாய்ப்புள்ளது. இன்னும் 5 நாள்களில் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும்!