பிரபல அமெரிக்க நடிகர் ஜானி டெப் தன் முன்னாள் மனைவியிடமிருந்த பெற உள்ள 1 மில்லியன் டாலர் இழப்பீட்டு தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' படங்களில் 'ஜேக் ஸ்பாரோ' கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் ஜானி டெப். அவர் நடிகை ஆம்பர் ஹெர்டை 2015இல் திருமணம் செய்து கொண்டார். பிறகு 2 ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்துப் பெற்றனர்.
பின்னர் 2018-ல் ஆம்பர் ஹெர்ட் பிரபல பத்திரிக்கை ஒன்றில் பெண்கள் எவ்வாறு பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்கிற கட்டுரையில் தனது முன்னாள் கணவரான ஜானி டெப் மீது அவதூறுகளை எழுதினார். இதனால் ஜானி டெப்க்கு ஏராளமான அவமதிப்புகள் நடந்தது. அவருக்கு வரவேண்டிய படங்கள் தட்டிக்கழிக்கப்பட்டன. எனவே, அவர் நஷ்டஈடு கேட்டு ஆம்பர் ஹெர்ட் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதையும் படிக்க: கைதி - 2 படத்தில் சூர்யா?
3 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானதுடன் ஆம்பர் ஹெர்ட் 10 மில்லியன் டாலரை இழப்பீட்டு தொகையாகவும் , 5 மில்லியன் டாலரை தண்டனைக்குரிய இழப்பீட்டு தொகையாகவும் மொத்தம் 15 மில்லியன் டாலரை ஜானிடெப்புக்கு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
அதில் ஒரு பகுதியாக 1 மில்லியன் டாலரை வழங்க ஆம்பர் ஹெர்ட் முன்வந்துள்ளார். இத்தொகையை ஜானி டெப், 'மேக் ஏ பிலிம் பவுண்டேஷன்', 'தி பெயின்டட் டர்ட்டில்', 'ரெட் பெதர்', 'டெடியரோ சோசைட்டி' மற்றும் 'அமசோனியா பண்ட் அலயன்ஸ்' ஆகிய ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.