இயக்குநர் மிஷ்கின் குறித்து லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதில் இயக்குநர் மிஷ்கினின் படப்பிடிப்பு முடிந்ததும் தன் டிவிட்டர் பக்கத்தில், “இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன். மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது.ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். துணை இயக்குநர்களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார்.
இதையும் படிக்க: ’ரஜினி 170’ இயக்குநர் இவர்தான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும் ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான். அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.
என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன்.
லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும். அன்புடன் மிஷ்கின்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘என் அன்பு மிஷ்கின் சார், உங்களுடன் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பிற்காகவும் அதிர்ஷ்டத்திற்காகவும் மில்லியன் முறை நன்றி சொன்னாலும் போதாது. நீங்கள் படக்குழுவில் இருந்தது முழு மகிழ்ச்சி. என்னால் போதுமான நன்றியை சொல்லவே முடியாது. இருந்தாலும் மில்லியன் நன்றி சார்” எனப் பதிவிட்டுள்ளார்.