மும்பையில் நடந்த படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் மகன் அமீன் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பியதால், 3 நாள்களாக குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
சமீபத்தில் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் ஒரு பாடலின் படப்பிடிப்பின் போது மேடையின் மீது, கிரேனில் நிறுத்தப்பட்டிருந்த அலங்கார விளக்குகள் திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் நூலிழையில் உயிர் தப்பியதாக அமீன் இன்ஸ்டாகிராமில் அதிர்ச்சி பதிவை பதிவியிட்டுள்ளார்.
அவருக்கு எந்தப் பெரிய காயமும் ஏற்படவில்லை என்றாலும், பேரதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் நானும் எனது குழுவினரும் இருப்பதாக கூறியுள்ள அமீன், “இன்று நான் பாதுகாப்பாகவும் உயிருடனும் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவன், எனது பெற்றோர், குடும்பத்தினர், நலம் விரும்பிகள் மற்றும் எனது ஆன்மீக ஆசிரியர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களால் தான் நான் இன்று பாதுகாப்பாகவும், உயிருடனும் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
மேலும், மூன்று நாள்களுக்கு முன்பு நான் ஒரு பாடல் ஷூட்டிங்கில் இருந்தேன். என்ஜினியரிங், பாதுகாப்பு போன்றவற்றை எனது குழுவினர் பார்த்துக் கொள்ளவார்கள் என இருந்தேன்.
அதனால் நான் கேமரா முன்பு பாடுவதிலேயே கவனமாக இருந்துவிட்டேன். கிரேனில் தொடங்கவிடப்படிருந்த அலங்கார விளக்குகளில் ஒன்று திடீரென மேடையில் விழுந்தது. அப்போது நான் மேடையில் தான் இருந்தேன்.
சில அங்குலம் இங்கு, அங்கு, சில வினாடிகள் முன்போ தாமதமாகவோ விழுந்திருந்தால் அது எங்கள் தலையில் தான் விழுந்திருக்கும். இதனால் நானும், எனது குழுவினரும் பேரதிர்ச்சி அடைந்துள்ளோம். அந்த பேரதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை என அமீன் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் அறிக்கை வெளியாகி, படப்பிடிப்புத் தளங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் பேசியுள்ளார்.
இந்நிலையில், படப்பிடிப்பு தளங்களில், உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஏ.ஆர். ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில நாட்களுக்கு முன்பு எனது மகன் ஏ.ஆர்.அமீனும் அவரது ஸ்டைலிங் டீமும் பெரும் விபத்தில் இருந்து தப்பியுள்ளனர். இதனை “மேஜிக்கல் ஸ்கேப்” என்று தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், அதிசயமாக இறைவனின் அருளால் மும்பை ஃபிலிம் சிட்டியில் நடந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நாம் நமது துறையை முன்னோக்கி நகர்த்தும்போது, படப்பிடிப்பு தளங்களில், உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஏ.ஆர். ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம். இந்த சம்பவத்தை காப்பீட்டு நிறுவனம் மற்றும் தயாரிப்பு நிறுவனமான குட்ஃபெல்லாஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் விசாரணையின் முடிவுக்காக காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ஓ.கே. கண்மணி மூலம் அமீன் பின்னணி பாடகராக அறிமுகமானார். பின்னர் வெவ்வேறு மொழிகளில் தனது தந்தையின் இசையில் தொடர்ந்து பாடி வருகிறார்.