நடிகராக கலக்கும் கிரிக்கெட்டர்!

லேபில் சீரிஸ் மூலம் கிரிக்கெட்டர் ஹரிஷங்கர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஹரிஷங்கர்
ஹரிஷங்கர்

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான ‘லேபில்’ சீரிஸில், புதுமுக நடிகராக அறிமுகமாகியுள்ள ஹரிஷங்கர் அனைவரையும் ஈர்த்துள்ளார். கிரிக்கெட்டராக ஐபிஎல் போட்டிகளில் வலம் வந்த ஹரிஷங்கர், தற்போது நடிகராகக் கலக்கி வருகிறார்.

இளம் நடிகராக வலம் வரும் ஹரிஷங்கர், ஒரு கிரிக்கெட்டராக தன் வாழ்வைத் தொடங்கியவர்.  அண்டர் 19 பிரிவில் தேசிய போட்டிகளில் விளையாடிப் புகழ் பெற்றவர். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின் விளையாடிய இறுதிப்போட்டி உள்பட பல போட்டிகளில் பகுப்பாய்வளராக பணியாற்றியுள்ளார்.

மேலும், ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாட்டு பகுப்பாய்வளராக பணியாற்றியுள்ளார். விளையாட்டில் கலக்கிய ஹரிஷங்கர்,  தன் கனவை நனவாக்கும் வகையில் திரைத்துறையில் நடிகராக நுழைந்துள்ளார்.

முதலில், தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமான ஹரிஷங்கர், கலர்ஸ் தொலைக்காட்சியின் அம்மன், மாங்கல்ய சபதம், விஜய்  தொலைக்காட்சியின் காற்றுக்கென்ன  வேலி போன்ற தொடர்களில் நடித்துள்ளார். பின்னர் வெள்ளித் திரை படங்களுக்காக தன்னை முழுமையாக 2 ஆண்டுகள் தயார் செய்து கொண்டவர், மாயத்திரை, டிரைவர் ஜமுனா, பட்டாம்பூச்சி உள்ளிட்ட படங்களில் துணைக் காதாப்பாத்திரங்களில் நடித்தார்.

தற்போது வெளியாகியுள்ள லேபில் சீரிஸில் நடித்துள்ளது அவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. அவரது கதாப்பாத்திரம் தனித்துத் தெரிவதுடன், அவரது நடிப்பை, பலரும் பாராட்டி வருகிறார்கள். திரைத்துறை பிரபலங்களிடம் பாராட்டுக்களைக் குவித்து வரும் ஹரிசங்கருக்கு, பல புதிய வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இது குறித்து நடிகர் ஹரிஷங்கர் கூறியதாவது:

"படிக்கும் காலத்திலிருந்தே நடிப்பு மீது எனக்கு தீராத ஆர்வம் இருந்தது. விளையாட்டில் சிறப்பாகச் செயல்பட்டதால் அதில் கிடைத்த வாய்ப்புகளை முழுக்க பயன்படுத்திக் கொண்டேன். கிரிக்கெட் நம் எதிர்காலம் இல்லை, பகுப்பாளராக எனக்கு சரியான உதவிகள் கிடைக்கவில்லை என்று உணர்ந்த போது,  உடனடியாக என் ஆர்வம் முழுவதையும் திரைத்துறை பக்கம் செலுத்தினேன். விளையாட்டில் எனக்கு கிடைக்காத ஆதரவு திரைத்துறையிலிருந்து முழுதாக கிடைத்தது.  தொலைக்காட்சியில் என் நடிப்பை ஆரம்பித்தாலும், சினிமா என் கனவாக இருந்தது. லேபில் சீரிஸ் என் கனவை நனவாக்கியுள்ளது. கிரிக்கெட் மூலம் அறிமுகமான நண்பர் அருண்ராஜா காமராஜ், என் ஆர்வத்தைப் பார்த்து லேபில் சீரிஸில் வாய்ப்புத் தந்தார்.  சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்குப் பிறகு, லேபில் சீரிஸ் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

தயாரிப்பாளர் பிரபாகரன் ஆரம்பம் முதலே எனக்குப் பெரிதும் ஊக்கம் தந்தார். இப்போது சீரிஸ் பார்த்து விட்டு அனைவரும் பாராட்டுவது மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இயக்குநர் வெற்றிமாறன் நான் நடித்த காட்சிகளை தனித்தனியாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார். இப்போது பலரிடமிருந்து பாராட்டுகளோடு, வாய்ப்புகளும் வருகிறது. அடுத்ததாக நல்ல கதாபாத்திரங்களில் மிகச்சிறந்த நடிகராக பாராட்டுக்கள் பெற வேண்டும், வித்தியாசமான வில்லன் வேடங்களில் கலக்க வேண்டும், அதை நோக்கியே என் பயணம் இருக்கும்.” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com