தெலுங்கில் பிரபல நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான புஷ்பா திரைப்படம் ரூ.350 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
இந்நிலையில், தன் வீட்டில் பணிபுரியும் பெண்ணுக்கு அல்லு அர்ஜுன் ரசிக்கக்கூடிய வகையில் ஓர் உதவியைச் செய்திருக்கிறார்.
அப்பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் தன்னைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆசை இருந்திருக்கிறது.
இதை அறிந்த அல்லு அர்ஜுன், அப்பெண்ணை அருகில் நிற்க வைத்து செல்ஃபி விடியோ ஒன்றை எடுத்தார். அப்போது, அப்பெண்ணிடம் உன்னை எத்தனை பேர் பின்தொடர்கிறார்கள் எனக் கேட்கிறார். அதற்கு அந்தப் பெண் 13 ஆயிரம் என்பதுடன் 30 ஆயிரம் இருந்தால் நன்றாக இருக்கும் என வெட்கப்படுகிறார். இதைக்கேட்டு சிரிக்கும் அல்லு அர்ஜுன், ‘சரி, இந்த விடியோவால் அதை அதிகரிக்கலாம்’ என்கிறார்.
தற்போது, இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.