லியோ நடனக் கலைஞர்களுக்கு சம்பளம் தரவில்லையா? ஃபெப்சி விளக்கம்

லியோ படத்தின் நடனக் கலைஞர்களுக்கு சம்பளம் தரவில்லை என்று புகார் எழுந்த நிலையில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கம் அளித்துள்ளார்.
லியோ நடனக் கலைஞர்களுக்கு சம்பளம் தரவில்லையா? ஃபெப்சி விளக்கம்

லியோ படத்தின் நடனக் கலைஞர்களுக்கு சம்பளம் தரவில்லை என்று புகார் எழுந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின்(ஃபெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் லியோ. ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வருகிற அக்.19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் லியோ படத்தில் இடம்பெற்ற ‘நா ரெடிதான்’ பாடலில் பங்கேற்ற 1,300 நடனக் கலைஞர்களுக்கு முறையாகப் பேசியபடி சம்பளம் தரப்படவில்லை என காவல் ஆணையரிடம் புகாரளிக்க நடனக் கலைஞர்கள் செவ்வாய்க்கிழமை திரளாகச் சென்றுள்ளனர்.

இந்தப் பாடலின் படப்பிடிப்பு நடந்து முடிந்து 4 மாதங்கள் ஆன பிறகும் தங்களில் பலருக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை, கொடுக்கப்பட்ட சம்பளமும் முன்பு பேசியபடி தரப்படவில்லை, தயாரிப்பு தரப்பும் யூனியனும் தங்களை அலைய வைப்பதாக நடனக் கலைஞர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“சில கானொலிகளில் லியோ திரைப்படத்தில் நடன காட்சியில் பங்குப்பெற்றவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புகார்கள் அளிக்கின்ற காட்சியை பார்த்தோம்.

லியோ திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் 2,000 நடன கலைஞர்களை வைத்து பாடல் எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விருப்பப்படுவதாக அந்த பாடலுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்த நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் தெரிவித்தார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இணைந்துள்ள தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அதிகபட்சமாக 600 கலைஞர்கள் மட்டுமே இருந்தனர்.

ஏனெனில், அதிகபட்சமாக 1,000 பேர் உறுப்பினராக உள்ள சங்கத்தில் பல்வேறு படங்களில் ஏறக்குறைய 400 கலைஞர்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் 600 நடன கலைஞர்கள் மட்டுமே இருந்தனர்.
இதுபோன்று அதிகமான நடன கலைஞர்கள் தேவைப்படும்போது முன் வரிசைகளில் நடன கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களையும், உறுப்பினர் அல்லாத ஓரளவுக்கு நடனம் தெரிந்த அல்லது அழகான தோற்றம் உள்ள ஆண்கள் அல்லது பெண்களை பின் வரிசையில் நிற்க வைத்தும் படமாக்குவது வழக்கம்.  இவர்களுக்கு வழக்கமாக 3 வேளை உணவளித்து கன்வேயன்ஸ்  உள்பட 1,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.

இந்த லியோ திரைப்படத்தில் 1,400 உறுப்பினர்கள் அல்லாதவர்கள் சென்னை பனையூரில் உள்ள ஆதி ஸ்ரீராம் ஸ்டுடியோசில் கடந்த ஜீன் மாதம் 06.06.2023 முதல் 11.06.2023 வரை 6 நாள்கள் பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது. இவர்களுக்கு, உறுப்பினர் அல்லாதவர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விவாதிக்கப்பட்ட போது ஊதியம் மற்றும் பேட்டா கன்வேயன்ஸ் உட்பட ஒரு உறுப்பினருக்கு நாளொன்றுக்கு ரூ.1,750 வீதம் 6 நாட்களுக்கு ரூ.10,500 ரூபாய் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக 94,60,500 ரூபாய் மொத்தம் செலுத்தப்பட்டது. அது மட்டுமின்றி இவர்களுக்கு ரிகர்சல் அளித்து ஒழுங்குப்படுத்தும் விதமாக சர்வீஸ் சார்ஜ் தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்திற்கு தனியாக வழங்கப்பட்டது.

தற்போது, ஒரு சிலர் தங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பேட்டியளித்ததை கண்டோம். இது தவறான செய்தியாகும். தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர வேண்டிய ஊதியம் முழுமையாக அவர்களது சங்கத்தில் செலுத்தப்பட்டுவிட்டது. அதேபோல் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் தலா ரூ.10,500 வீதம் (மொத்தம் 6 நாட்களுக்கு) வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com