சின்னத்திரை தொடர்களில் காற்றுக்கென்ன வேலி தொடர் விரைவில் முடியவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது காற்றுக்கென்ன வேலி தொடரின் இறுதிக்கட்ட காட்சிகளை குழுவினர் எடுத்துவருவதாக கூறப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் காற்றுக்கென்ன வேலி. இந்தத் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டுமுதல் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் ஆரம்பக்கட்டத்தில் இளம்தலைமுறை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தற்போதுவரை 760 எபிஸோடுகள் ஒளிபரப்பாகியுள்ளன.
மொஹார் என்ற வங்காள மொழித் தொடரின் மறு உருவாக்கமாக இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழில் எடுக்கப்பட்டுவரும் காற்றுக்கென்ன வேலி தொடரில் பிரியங்கா குமார், சுவாமிநாதன் அனந்தராமன் முதன்மை பாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.
கிரண் இசையமைக்கிறார். தனஞ்செயன் வசனம் எழுதுகிறார். பிரான்ஸின் கதிரவன், சந்திரசேகர், நிரவி பாண்டியன் ஆகியோர் எபிஸோடுகள் வாரியாக இயக்கிவருகின்றனர்.
இந்தத் தொடர் கடந்த சில மாதங்களாகவே வணிக ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்தது. டிஆர்பி பட்டியலில் பல புதிய நண்பகல் தொடர்கள் வரவே, காற்றுக்கென்ன வேலி பின்னடைவை சந்தித்தது.
இதனால், காற்றுக்கென்ன வேலி தொடரை முடிக்க தொலைக்காட்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்குவதில் குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கண்ணே கலைமானே, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய தொடர்கள் முடியவுள்ள நிலையில், தற்போது காற்றுக்கென்ன வேலி தொடரும் முடிவது குறிப்பிடத்தக்கது.