இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி மாலை சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள ஆதித்யராம் பேலஸ் பகுதியில் நடக்கவிருந்தது. ஆனால், மழை காரணமாக அந்த இசைக்கச்சேரி தள்ளி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, சில நாள்களுக்கு முன் செப்.10 (இன்று) ஞாயிறு மாலை நிகழ்ச்சி நடைபெறும் என மறுதேதி குறித்த அறிவிப்பை ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருந்தார்.
அதேபோல், இன்று சென்னை கிழக்கு சாலையில் உள்ள பனையூருக்கு அருகே நடைபெற்றது. இதற்காக வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என ரூ.2000 முதல் ரூ. 15 ஆயிரம் வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் இசைக்கச்சேரி நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.
ஆனால், அங்கு ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். காரணம், சரியான பார்க்கிங் வசதி இல்லாததால் பல மணி நேர காத்திருக்குப் பின்பே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் சென்றுள்ளனர். ஆனால், ரூ.5,000 மதிப்புள்ள டிக்கெட் இருந்தும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை. மேலும், கூட்டத்திற்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பலரும் திணறி உள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில், “காசை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஏமாற்றிவிட்டார்கள். பல மணிநேரமாக டிராஃப்பிக்கில் சிக்கி ஒருவழியாக உள்ளே வந்தால் டிக்கெட் இருந்தும் இருக்கைகள் இல்லை என்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். இவ்வளவு மோசமான ஒரு அனுபவத்தை நாங்கள் அடைந்ததில்லை” என்பதைப்போல் பதிவிட்டு வருகின்றனர்.