தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமாகிய நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆபாசமான போலி விடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகியது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா மந்தனாவின் உருவப்படம் "மார்ஃபிங்' செய்யப்பட்டு பரப்பப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தை தில்லி மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரித்தது.
தில்லி காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு 4 பிரிவுகளின் கீழ் கடந்த நவம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. மேலும், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி விடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்த கணக்கின் இணையதள முகவரியை வழங்குமாறு தில்லி காவல் துறை மெட்டா நிறுவனத்துக்கு அண்மையில் கடிதம் எழுதியது. தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக பிகாரைச் சேர்ந்த 19 வயது இளைஞரிடம் போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க: சானியா மிர்சாவைப் பிரிந்த சோயிப் மாலிக் மறுமணம்!
இந்த விடியோவை அந்த இளைஞர் முதலில் தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பின்னர் மற்ற தளங்களில் பரவலாகப் பகிர்ந்துள்ளார். அவரது கணக்கில் இருந்து சமூக ஊடகங்களில் விடியோ முதலில் பதிவேற்றப்பட்டதால், விசாரணையில் சேர அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நவம்பர் 10-ஆம் தேதி இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 465 (போலி செய்ததற்கான தண்டனை) மற்றும் 469 (நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்திற்காக மோசடி செய்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66சி மற்றும் 66இ ஆகியவற்றின் கீழ் உளவுத் துறை இணைவு மற்றும் வியூக நடவடிக்கைகளின் கீழ் தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு எஃப்ஐஆர் பதிவு செய்தது.
இருப்பினும், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில், தில்லியைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியைக் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். இவரே, ராஷ்மிகாவின் டீஃப் பேக் விடியோவை உருவாக்கியவர் எனக் கூறப்படுகிறது.