'கல்லுக்குள் ஈரம்’, ’மௌன கீதங்கள்’, ’படிக்காதவன்’, உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சூரியகிரண். தென்னிந்திய மொழிகளில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றவர்.
‘சத்யம்’, ’தனா 51’, ’ராஜூபாய்’ உள்பட 6 படங்களை இயக்கி இயக்கியவர். நடிகை வரலட்சுமி நடித்த ’அரசி’ என்ற படத்தை இயக்கினார். இப்படம், விரைவில் வெளியாகவுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குநராக இரண்டு மாநில விருதும் பெற்றவர்.
சமுத்திரம், காசி உள்ளிட்ட படங்களில் நடித்த கல்யாணியை (காவேரி எனப் பெயர் மாற்றம் செய்துகொண்டார்) 2010 ஆம் ஆண்டு சூரியகிரண் திருமணம் செய்தார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் வசித்து வந்த சூரியகிரண் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவரின் சகோதரி சுஜிதாவும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியகிரணின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.