ஆனந்த ராகம் தொடரில் நடித்துவரும் நடிகை அனுஷா ஹெக்டே ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக காஞ்சிபுரம் சென்ற அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்துடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, அவர்களுடன் உரையாடினார். இது தொடர்பான படங்களை நடிகை அனுஷா தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகிவரும் ஆனந்தராகம் தொடரில் நாயகியாக நடித்துவருபவர் நடிகை அனுஷா பிரதாப்.
அனுஷா பிரதாப்புக்கு ஜோடியாக அழகு சுந்தரம் நடித்து வருகிறார். இந்த ஜோடியின் நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
மற்ற தொடர் போன்று இல்லாமல், ஆனந்த ராகம் தொடரில் நடிகை அனுஷாவுக்கு அடிக்கடி சண்டைக் காட்சிகள் இடம்பெறும். சிக்கலில் மாட்டும் தன் குடும்பத்தினரை எதிரிகளிடம் சண்டையிட்டு மீட்பதைப்போன்ற காட்சிகள் அடிக்கடி ஆனந்தராகம் தொடரில் இருக்கும். இதனால், நடிகை அனுஷாவுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிரடி நாயகி என்ற பெயரும் உண்டு.
இதனிடையே தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நடிகை அனுஷா பிரதாப் உள்ளிட்ட ஆனந்த ராகம் தொடரின் நடிகர்கள் கலந்துகொண்டனர்.
இதற்காக காஞ்சிபுரம் சென்ற நடிகை அனுஷாவுக்கு ரசிகர்கள் பலர் சூழ்ந்து உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ரசிகர்கள் எடுத்த செல்பி புகைப்படத்துக்கும் நின்று அவர்களுடன் நலம் விசாரித்து கலந்துரையாடினார்.
நடிகை அனுஷா நடிகையாக மட்டுமின்றி சமூக அக்கறைகொண்டவராகவும் விளங்குகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பிறந்தநாளைக் கொண்டாடுவது, முதியோர் இல்லம், மனநல காப்பகத்தில் ஓய்வு நேரங்களை செலவிடுவது என அனுஷா செய்யும் செயல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை அனுஷா அங்கு செல்லும்போது விவசாயப் பணிகளிலும் ஈடுபடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.