தமிழில், 'இருவர்', 'உன்னை போல ஒருவன்', 'ஜில்லா', 'காப்பான்' போன்ற படங்களில் நடித்திருந்தாலும், 'ஜெயிலர்' படத்தில் வந்த இரண்டு காட்சிகள் நிறைய கைதட்டல்களையும் விசில்களையும் மோகன்லாலுக்குப் பெற்று தந்தது.
கேரள மண்ணில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத 'தம்புரானாக' வீற்றிருக்கும் அவர், 'லாலேட்டன்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
மோகன்லால் படமென்றாலே மிகப்பெரிய கொண்டாட்டமே கேரளத்தில் நடக்கும். சமீபத்தில், அவர் நடித்த மலைக்கோட்டை வாலிபன் பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும் விமர்சகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றது. தற்போது, பிருத்விராஜ் இயக்கத்தில் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்திற்காக பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
நடிகராக மட்டுமல்லாமல் சில தொழில்களிலும் கோகன்லால் கவனம் செலுத்தி வருகிறார். சினிமா திரையரங்கம், கல்வி நிறுவனங்கள், துபையில் உணவகம் உள்பட பலவற்றையும் கவனித்து வருகிறார். பெரும்பாலான படங்களை அவரே தயாரித்து நடிப்பதால் பெரிய லாபமும் கிடைக்கிறது. மேலும், மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.18 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம்.
இந்த நிலையில், மோகன்லாலின் மொத்த சொத்து மதிப்பு ரூ.450 கோடி வரை இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.