
நடிகர் மம்மூட்டி நடிப்பில் இறுதியாக வெளியான பிரம்மயுகம், டர்போ ஆகிய படங்கள் வசூல் ரீதியான வெற்றிப்படமாக அமைந்துள்ளன.
மம்மூட்டி கம்பெனி நிறுவனத் தயாரிப்பில் உருவான டர்போ கலவையான விமர்சங்களைப் பெற்றாலும் படத்தில் இடம்பெற்ற மம்மூட்டியின் தோற்றம் மற்றும் சண்டைக்காட்சிகள் பேசப்பட்டு வருகின்றன.
அடுத்ததாக, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், துபையில் மம்மூட்டி பங்கேற்ற நேர்காணல் ஒன்று வைரலாகி வருகிறது. டர்போ வெளியீட்டை முன்னிட்டு, பிரபல யூடியூபரான கலித் அல் அமேரி என்பவர் மம்மூட்டியை நேர்காணல் செய்தார்.
அப்போது நெறியாளர் கலித், "சினிமாவைப் பற்றியே சிந்திக்கும் மம்மூட்டியை உலகம் எப்படி நினைவு கூற வேண்டும் என நினைக்கிறீர்கள்?” எனக் கேட்டார்.
அதற்கு மம்மூட்டி, “எவ்வளவு நாள் என்னை நினைத்துப் பார்ப்பார்கள்? ஓராண்டு? 10 ஆண்டுகள்? 15 ஆண்டுகள்? அவ்வளவுதான். இந்த உலகம் முடியும்வரை நீங்கள் பிறரால் நினைவு கூறப்பட வேண்டும் என நினைக்காதீர்கள். அது யாருக்கும் நடக்காது. மிகச்சிறந்த மனிதர்களும் மிக மிகக் குறைவாகவே நினைவு கூறப்படுகிறார்கள். நினைவில் இருப்பவர்கள் மிகச்சிலரே.
ஆயிரக்கணக்கான நடிகர்களில் ஒருவனாக இருக்கும் என்னை மட்டும் எப்படி நினைவில் வைத்திருப்பார்கள்? இந்த உலகில் நீங்கள் இல்லையென்றால், உங்களைப் பற்றி எப்படி அறிந்துகொள்வீர்கள்? எல்லோரும் நாம் நினைவு கூறப்படுவோம் என நினைக்கிறார்கள். பிறர், எவ்வளவு நாள் நம்மை நினைத்துப் பார்ப்பார்கள் என்பதில் எந்த நம்பிக்கையும் இல்லை.” எனக் கூறினார்.
இந்த பதிலால் அசந்த நெறியாளர், “இது சக்திவாய்ந்த எண்ணம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.