நடிகை மலைக்கா அரோராவின் தந்தை தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் மலைக்கா அரோரா. 50 வயதாகும் மலைக்கா உடல் பேணலில் மிகுந்த கவனம் கொண்டவர். அன்றாடம் உடற்பயிற்சி, யோகா என இன்றும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் தோற்றத்திலேயே இருக்கிறார். அடிக்கடி, இணையத்தில் வைரலாவார்.
இவரும் நடிகர் அர்ஜுன் கபூரும் உறவிலிருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாகத் தகவல் வெளியானது.
அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் பெரும்பாலும் அனைத்து கொண்டாட்டங்களிலும் மலைக்கா கலந்துகொண்டார். அங்கு இவர் ஆடிய நடனம் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், மும்பை மேற்கு பந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மலைக்கா அரோராவின் தந்தை அனில் அரோரா இன்று காலை 9 மணியளவில் 6-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இவரது, உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்திய வணிகக் கப்பல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அனில் அரோரா நீண்ட நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இந்த சூழலில் அவர் தற்கொலை செய்துகொண்டது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, அனில் அரோரா மறைவையொட்டி அவரது வீட்டிற்கு அர்ஜுன் கபூர், மலைக்கா முன்னாள் கணவர் அர்பாஸ் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் வந்தபடியே உள்ளதால், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

