2023ஆம் ஆண்டின் சிறந்த தொடராக எதிர்நீச்சல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மக்கள் மனங்களைக் கவர்ந்த தொடராக எதிர்நீச்சல் தேர்வு செய்யப்பட்டதற்கான விருதை இயக்குநர் திருச்செல்வம் தனது குழுவினருடன் பெற்றார்.
சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகிவரும் தொடர் எதிர்நீச்சல். 2022 பிப்ரவரி முதல் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
2023 டிசம்பர் வரை 600 எபிஸோடுகளைத் தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிக்கும் கதாபாத்திரங்கள் தனித்துவமாகவும், அனைத்து பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் உள்ளது. இதனால், பல கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இளம் தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்களும் எதிர்நீச்சல் தொடருக்கு அதிகம்.
குறிப்பாக ஆதி குணசேகரன் (மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்த பாத்திரம்), ஆதிரை - அவரைத் திருமணம் செய்யும் கரிகாலன், நாயகியாக வரும் ஜனனி, இக்கட்டான சூழலையும் நகைச்சுவையாக மாற்றி எளிமையாக கையாளும் நந்தினி உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை.
எதிர்நீச்சல் தொடரில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை, நீலகண்டன், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும் மருமகள்களின் மூலம் பிற்போக்குத்தனங்களை கேள்வி கேட்கும் காட்சிகள் எதிர்நீச்சல் தொடரில் அதிகம் இடம்பெறுகின்றன. புகுந்த வீட்டுக்குச் செல்லும் மருமகள்கள் துயரப்படுவதையோ அல்லது புகுந்த வீட்டை தியாகம் செய்து மேம்படுத்துவதையோதான் இதுவரையான தொலைக்காட்சித் தொடர்களில் காண முடிந்தது.
எதிர்நீச்சல் தொடரை திருச்செல்வம் இயக்குகிறார். இந்த ஆண்டின் சிறந்த தொடராக தேர்வு செய்யப்பட்டதற்கான விருதை அவர் பெற்றார். அவருடன் எதிர்நீச்சல் குழுவினரும் இடம்பெற்றிருந்தனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. ரசிகர்கள் பலர் எதிர்நீச்சல் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.