இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தன்னிடம் உதவி இயக்குநராக சேர நிபந்தனைகளுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஓ மை கடவுளே, டிராகன் படங்களின் மூலம் அடுத்தடுத்த வெற்றிகளைக் கொடுத்தவர் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. இதில், பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த டிராகன் திரைப்படம் ரூ. 160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அடுத்ததாக, அஷ்வத் மாரிமுத்து நடிகர் சிம்புவின் 51-வது படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் 27-வது படத்தையும் இயக்குகிறார்.
இதில், சிம்புவின் படம் ஆகஸ்ட் மாதம் துவங்கும் எனத் தெரிகிறது. இதற்காக, உதவி இயக்குநர்கள் தேவைப்படுவதாக அறிவிப்பை வெளியிட்ட அஷ்வத், தன்னிடம் சேர என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில்,
- சிபாரிசு கிடையாது. மெரிட் மட்டும்தான்!
- உங்களுக்கான இடத்தைப் பெற முதல் மூன்று சுற்றுகளைக் கடக்க வேண்டும்.
- முதல் சுற்று உங்கள் சுயவிபரத்தின் (resume) அடிப்படையில் அமையும்.
- இரண்டாவதில் கொடுக்கப்படும் சூழலுக்கு ஏற்ப காட்சி ஒன்றை எழுத வேண்டும்.
- மூன்றாவது: என்னுடனான நேரடி நேர்காணல் இருக்கும். விடியோ கால் அழைப்பு கிடையாது (என்னிடமே proxy - ஆ? (டிராகன் திரைப்படத்தில் விடியோ காலில் பெரிய நிறுவனத்தை ஏமாற்றி நாயகன் வேலை வாங்குவதைக் குறிப்பிடுகிறார்))
- குறும்படம் எடுத்திருந்தாலோ இலக்கியத்தில் பரந்த வாசிப்பு இருந்தாலோ ஏற்கனவே நீங்கள் என் மதிப்பைப் பெற்றவராகிவிடுவீர்கள்.
- டெக்னிக்கல் திறமை வேண்டும். (எனக்கு அது தேவை)
- நேர்மையாக இருங்கள்- நான் ஒரு மோசமான காட்சியைச் சொன்னால் சூப்பர் சார் என சொல்லக் கூடாது!
- நாள்தோறும் செய்தித்தாள் வாசிக்க வேண்டும், வெறும் சினிமா வதந்திகளை மட்டும் அல்ல.
- கண்டிப்பாக ஓராண்டு பணியாற்ற வேண்டும். கதை விவாதத்திலிருந்து படம் முடியும்வரை உடன் இருந்தால் மட்டுமே நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.
- 8 பேர்தான் வேண்டும் என்பதால் தேர்வாகவில்லை என்றால் கவலைப்படாதீர்கள் வேறு இயக்குநரிடம் வேலைக்குச் சேர இந்த அனுபவம் உதவலாம்.
- கட்டாயமாக பார்ட்டி ஷூ தேவை (காரணம், நாம் அடிக்கடி ஜாலியாக இருப்போம்) எனத் தெரிவித்துள்ளார்.
அஷ்வத்தின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியதுடன் சினிமா மீதான தயக்கங்களைக் களைவதுபோல் உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சம்பளம் தருவீர்களா? என ஒருவர் கேட்டதற்கு, “என் தயாரிப்பு நிறுவனமும் நானும் நல்ல சம்பளம் கொடுப்போம். படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை உதவி இயக்குநர்களின் பங்கு இருக்கும் என்பதால் அவரவரின் பொறுப்பைப் பொறுத்து மாதம்தோறும் நல்ல சம்பளமும் பணிச்சூழலும் இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்ட ஜன நாயகன் ஓடிடி உரிமம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.