AVM saravanan
ஏவிஎம் சரவணன்

5 முதல்வர்கள், 66 ஆண்டுகள்... தமிழ்த் திரைமுகம் ஏவிஎம் சரவணன்!

தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் குறித்து...
Published on

தமிழ் சினிமாவின் வளர்ச்சி மிகப்பெரிய தூணாக இருந்தவர் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன்.

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் இன்று காலை காலமானார்.

தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீக்க முடியாத ஆளுமைகளில் ஒருவர் ஏ. வி. மெய்யப்பன். 1935 ஆம் ஆண்டு சொந்த முதலீட்டில் அன்றைய கொல்கத்தாவுக்குச் சென்று, இவர் இயக்கிய முதல் திரைப்படம் அல்லி அர்ஜுனா. அப்படம் தோல்வியடைய, தொடர்ந்து அடுத்தடுத்து தயாரித்த படங்களும் பெரிதாகக் கவனிக்கப்படவில்லை.

அதன்பின், 1940 ஆம் ஆண்டு முதல் ஏவிஎம் தயாரித்த எந்த படங்களிலும் வணிக தோல்வியைப் பெரிதாகச் சந்திக்கவில்லை. முழுக்க லாபகரமான வணிகம் செய்து, பலரையும் திரைத்துறை முதலீட்டிற்குள் கொண்டு வந்த பெருமையை ஆரம்பித்து வைத்தது ஏவிஎம்.

சினிமா வளர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து தயாரிப்புகளைச் செய்து வந்தாலும் தயாரிப்பாளர் மெய்யப்பன் தன் மகனான சரவணனிடமும் ஆலோசனைகள் கேட்பவராகவே இருந்திருக்கிறார். அப்படி, ஆலோசனைகளைக் கொடுத்து பல திரைப்படங்களின் வெற்றிக்குக் காரணமாக விளங்க, ஏவிஎம்-ல் சரவணனுக்கு நிர்வாகப் பொறுப்பு வழங்கப்படுகிறது. 1959-ல் வெளியான மாமியார் மெச்சின மருமகள் திரைப்படத்திற்காக நிர்வாகத் தயாரிப்பு ஏவிஎம் சரவணன் என முதல் முறையாக டைட்டிலில் தன் பெயர் வந்ததைக் குறிப்பிடுகிறார். ஆனால், அப்படம் தோல்வியடைந்துவிட்டது.

நடிகர் சிவாஜிக்கும் ஏவிஎம் நிறுவனத்துக்கும் இருந்த மனக்கசப்பை உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் மீண்டும் நடிக்க வைத்து நீக்கியது, வளர்ந்துவரும் நடிகர்களுக்கான பரிந்துரைகளைச் செய்தது என சரவணன் நிறைய பங்களிப்பைச் செய்திருக்கிறார்.

தயாரிப்பாளர் மெய்யப்பன் கதையை மட்டுமே நம்பி திரைப்படத்துறையில் முதலீடு செய்தவர். அப்படிப்பட்ட ஏவிஎம் நிறுவனத்தால் முதன் முதலாக நாயகனுக்காக எழுதப்பட்ட கதைதான் அன்பே வா. முதலில் அன்பே வா படத்தில் நடிகர் ஜெய்சங்கர் நடிப்பதாகவே இருந்தது.

ஆனால், சரவணன் நடிகர் எம்ஜிஆரை பரிந்துரை செய்ய, கதையைக் கேட்ட எம்ஜிஆரோ, ‘இது என் படம் போல் இல்லை. முழுக்க முழுக்க இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர் திரைப்படம். எனக்குப் பிடித்திருக்கிறது, நான் நடிக்கிறேன்” என்றிருக்கிறார். தமிழ் சினிமாவில் முதல் வண்ணத் திரைப்படம் அதுதான். ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பத்தில் வெளியான அப்படம் தமிழ் சினிமாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குப் பெரிய பங்காற்றியது.

அன்பே வா படப்பிடிப்பில் எம்ஜிஆருடன் ஏவிஎம் சரவணன்
அன்பே வா படப்பிடிப்பில் எம்ஜிஆருடன் ஏவிஎம் சரவணன்

சுவாரஸ்யமாக, அன்பே வா திரைப்படம் வெளியானது 1966-ல். ஆனால், எம்ஜிஆர் கதாநாயகனாக அறிமுகமான ஆண்டு 1947. இடைப்பட்ட 19 ஆண்டுகளில் ஏவிஎம் நிறுவனம் எம்ஜிஆரை வைத்து எந்தத் திரைப்படத்தையும் தயாரிக்கவில்லை. காரணம், எங்களுக்கு கதைதான் முதல். அதன்பின்பே, நடிகர்கள் என்கிறார் ஏவிஎம் சரவணன். (சூப்பர் ஸ்டாராகவே இருந்தாலும் கதைதான் முக்கியம் என அன்று முன்னணி தயாரிப்பு நிறுவனம் நினைத்திருக்கிறது. இன்று நடக்கிற காரியமா?)

இயக்குநர்களில் ஏ. சி. திருலோகச்சந்தர் ஏவிஎம் -உடன் நல்ல உறவில் இருந்தார். இந்தக் கூட்டணியில் நிறைய திரைப்படங்களை உருவாக்கி வெற்றி கண்டிருக்கின்றன. அன்பே வா ஒரு வகை என்றால் ஆஸ்கர் வரைச் சென்ற சிவாஜியின் தெய்வ மகன் இன்னொரு வகை. ஏ.சி. திருலோகச்சந்தரின் உதவியாளரான எஸ். பி. முத்துராமனும் ஏவிஎம்-ன் ஆஸ்தான இயக்குநரானார்.

ஏவிஎம் தயாரித்த, எஸ்பி முத்துராமன் - ரஜினிகாந்த்தின் முரட்டுக்காளையை மறக்க முடியுமா? அன்றைய காலகட்டத்தில் அதிக செலவில் உருவான திரைப்படம். முக்கியமாக, இப்படத்தில் இடம்பெற்ற கிளைமேக்ஸ் ரயில் படப்பிடிப்பு காட்சி. இன்று வரை ஏவிஎம்மின் பிளாக்பஸ்டர் ஹிட் பட்டியலில் தனித்துவமான இடத்தில் இருக்கிறது.

மறைந்த முதல்வர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, எம். ஜி. ராமச்சந்திரன், என். டி. ராமாராவ், ஜெ. ஜெயலலிதா ஆகியோர் ஏவிஎம் தயாரிப்பில் சம்பளம் பெற்றவர்கள்தான்.

எம்ஜிஆருக்கும் ஏவிஎம் சரவணனுக்கும் நல்ல நட்புறவு இருந்திருக்கிறது. ஏவிஎம் தயாரித்த பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படம் வெள்ளிவிழா கண்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதும் அதற்காக எடுக்கப்பட்ட விழாவில் முதல்வராக இருந்த எம்ஜிஆர் கலந்துகொண்டு பாராட்டியிருக்கிறார். அதற்கு அடுத்த ஆண்டே இயக்குநர் பாரதிராஜா இயக்கிய புதுமைப்பெண் தோல்வியடைய அவரை எம்ஜிஆரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார் சரவணன்.

நிலைமையைப் புரிந்துகொண்ட எம்ஜிஆரோ, இப்படத்திற்கு தமிழகம் முழுவதும் வரிவிலக்கு செய்யச் சொல்லியிருக்கிறார். அப்படியே நடந்திருக்கிறது. ஆனால், ஆச்சரியமாக, வெளியான சில நாள்களில் தோல்வி எனத் தெரிந்த திரைப்படத்திற்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டு, மீண்டும் வெற்றியை நோக்கி நகர்ந்திருக்கிறது புதுமைப்பெண். தமிழ் சினிமா வரலாற்றிலேயே அப்படியொரு நிகழ்வைக் கண்டதில்லை என்கிறார் சரவணன்.

நடிகர் ரஜினிகாந்துடன் ஏவிஎம் சரவணன்
நடிகர் ரஜினிகாந்துடன் ஏவிஎம் சரவணன்

ஏவிஎம்மின் பிரம்மாண்ட பட்ஜெட் படமான சிவாஜியே முதல் ரூ. 100 கோடி வசூலைப் பெற்ற தமிழ்ப்படமாகும். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அயன் திரைப்படம் அதிக செலவில் எடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றது.

2000- வரை தமிழ் சினிமாவில் கோலோச்சிய ஒரு நிறுவனம் திரைப்படத் தயாரிப்பிலிருந்து மெல்ல மெல்ல விலகியது திரைத்துறைய நேசிப்பவர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தது.

இறுதியாக, 2014 ஆம் ஆண்டு ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. தயாரிப்பிலிருந்து முற்றாக விலகிச் சென்றது குறித்து சில ஆண்டுகளுக்கு முன் ஏவிஎம் சரவணனிடம் கேட்டபோது, “இனி சினிமாவில் எப்போது நஷ்டங்கள் ஏற்படாத நிலைமை வருகிறதோ அன்றுதான் ஏவிஎம் திரைப்படங்களை எடுக்கும். அதனால், கொஞ்ச நாள் சும்மா இருப்போம் என விட்டுவிட்டேன்” என்றார்.

ஏவிஎம் சரவணன் திரைத்துறையினரிடம் மிக நேர்மையாக பழகியவர் என்றே பலரும் கூறுகின்றனர். நடிகர் ஜெமினி கணேசன், “மூன்று மாதம் மேக்கப் போடாமல் ஊட்டியில் இருக்கிறேன்” என தனக்கு வாய்ப்பில்லாத நிலையைச் சொன்னபோது, சரவணன் அவருக்கென்ற படத்தை எடுத்திருக்கிறார். அப்படத்தால், ஜெமினி கணேசனுக்கு 8 திரைப்படங்கள் அமைந்திருக்கின்றன.

நடிகர் சிவகுமாரை நடிகராக அறிமுகப்படுத்தியதுடன் அவரது இயற்பெயரான பழனிச்சாமியை ‘சிவகுமார்’ என மாற்றியது தயாரிப்பாளர் சரவணன்தான். இந்த நன்றிக்காகவே, தன் மகன் சூர்யாவுக்கு சரவணன் எனப் பெயரிட்டதாகக் கூறுகிறார் சிவகுமார்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 66 ஆண்டுகாலமாக 178 திரைப்படங்களையும் 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்து தயாரிப்புத் துறையில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர் சரவணன்.

இன்றைய சினிமா உருவாக்கங்கள், சம்பளங்கள், படம் எடுக்கும் முறைகள் குறித்து அதிருப்தியான சூழல் இருக்கிறதே, இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, “சரி, தவறு என்பதைச் சொல்ல நாம் யார்? காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்” என்றார். தமிழ்த் திரைத்துறையின் முகங்களில் ஒருவரான தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் மறைவுக்கு இரங்கல்கள்.

Summary

veteran producer AVM Saravanan legacy in tamil cinema

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com