

விஜே பார்வதி இல்லையென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியே இல்லை என முன்னாள் போட்டியாளர் நந்தினி தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டது மிகவும் தவறான செயல் என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிப்படையிலேயே மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக நந்தினி பேசியதாவது:
பிக் பாஸ் நிகழ்ச்சியால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, வேலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பணிக்குச் செல்லும் இடத்தில் என் மனநிலை நிலையாக இல்லை என்று கூறுகின்றனர். இதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சிதான் காரணம்.
ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்பது மக்களுக்கு மன அமைதி கொடுப்பதாக இருக்க வேண்டும். ஆனால், நிகழ்ச்சியைப் பார்ப்பதால் மக்களுக்கு மன அமைதி சீர்கெடும் வகையில் இருந்தால் என்ன செய்வது?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நானாகத்தான் வெளியேறினேன். ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் எனக் கூறிய அனைவரையும் வெளியேற்றவில்லை. அது ஏன்?
சான்ட்ரா தனது கணவர் ப்ரஜின் வெளியேறும்போது உணர்ச்சிவசப்பட்டு கத்தினார். ஆனால், அவரை வெளியே அனுப்பவில்லை. ஆனால், எனக்கு பைத்தியக்காரி என்ற பட்டம் கட்டி வெளியேற்றினர்.
போட்டியில் இருந்து வெளியேறுவதாக ரம்யா ஜோ விஜய் சேதுபதி முன்பு கூறினார். ஆனால் அவரை வெளியேற்றினார்களா?
இது தனிப்பட்ட முறையிலான தாக்குதல் இல்லை. புகழுக்காக நான் பிக் பாஸை குறை கூறவில்லை. மனரீதியான அமைதியை சீர்குலைக்கும் வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது. முழுக்க முழுக்க மனித உரிமைகள் சார்ந்து எனது கருத்துகளைக் கூறுகிறேன்.
நிகழ்ச்சி பார்ப்பதை மக்கள் நிறுத்தப்போவதில்லை. அதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிப்படையில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.
விஜே பார்வதி, கமருதீனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதனை தவிர்த்திருக்கலாம். பிரச்னை நடக்கும்போதே குறுக்கிட்டு தடுத்திருந்தால், இந்த அளவுக்குச் சென்றிருக்காது.
பிக் பாஸ் லைவ் நிகழ்ச்சியில் அனைத்தும் ஒளிபரப்பப்படுவதில்லை. சிலவற்றை நீக்கிவிட்டே ஒளிபரப்புகின்றனர். பணம், புகழுக்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். ஆனால், அங்கு நடக்கும் மனச்சிதைவுக்காக அல்ல.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு எந்தவொரு வேலைக்குமே நான் செல்லவில்லை. எந்தவொரு அழைப்பும் எனக்கு வரவில்லை. என் உடல்நலன் குறித்தும் எந்தவித விசாரிப்பும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வரவில்லை.
நான்கு நாள்கள் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்திருந்தாலும், அங்கு என்ன நடந்தது என்பதை சொல்லாமல் இருக்க முடியாது. தனிமனித ஒழுக்கத்தை விட்டுக்கொடுத்து விளையாட முடியாது எனக் குறிப்பிட்டார்.
ரெட் கார்டு
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 13 வது வாரத்தை எட்டியுள்ளது. குறைந்த வாக்குகளைப் பெற்றதாக கடந்த வாரத்துடன் சுபிக்ஷா வெளியேற்றப்பட்டார்.
அதற்கு முன்பு, விஜே பார்வதியும் நடிகர் கமருதீனும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். நடிகை சான்ட்ராவிடம் தகாத முறையில் பேசி, வன்முறையில் ஈடுபட்டு காரில் இருந்து தள்ளிவிட்டதால், இருவருக்கும் விஜய் சேதுபதி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.