'தள்ளிப்போகாதே' - திரை விமர்சனம்: காதலனா ? கணவனா ?

தள்ளிப்போகாதே திரைப்பட விமர்சனம் 
'தள்ளிப்போகாதே'  - திரை விமர்சனம்: காதலனா ? கணவனா ?
Published on
Updated on
1 min read

ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கியிருக்கும் தள்ளிப்போகாதே திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தெலுங்கில் நானி நடிப்பில் வெற்றிபெற்ற நின்னு கோரி படத்தின் தமிழ் ரீமேக் தான் தள்ளிப்போகாதே. இந்தப் படத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், அமிதாஷ், ஆடுகளம் நரேன், ஜெகன், வித்யுலேகா ராமன், ஆர்.எஸ்.சிவாஜி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

அதர்வாவும், அனுபமா பரமேஸ்வரனும் காதலிக்கிறார்கள். எதிர்பாராதவிதமாக அனுபமாவுக்கு அமிதாஷுடன் திருமணம் நடைபெறுகிறது. காதல் தோல்வியினால் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் அதர்வா. அவரை நல்வழிப்படுத்த அனுபமா  முயற்சிக்கிறார். அதனால் அவரது திருமண வாழ்வில் சிக்கல் ஏற்படுகிறது. அந்த சிக்கலை அனுபமா எப்படி சமாளித்தார் என்பதே தள்ளிப்போகாதே படத்தின் கதை.

காதலை உளவியல் ரீதியாக விவாதம் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பிருக்கும் கதை. அப்படி செய்திருந்தால் ஆண் - பெண் உறவு குறித்த புரிதலின்மையினால் குற்ற சம்பவங்கள் அதிகரித்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் முக்கியமான படமாக இருந்திருக்கும். ஆனால் அதனை செயற்கையான காட்சி அமைப்புகளினால் கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குநர். தெலுங்கு படமான நின்னு கோரியின் தமிழ் பதிப்பு தான் தள்ளிப்போகாதே. 

நின்னு கோரியில் நானி தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் அந்த படத்தை பெரும் சுவாரசியமாக்கியிருப்பார். உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் அவரது நடிப்பு நன்றாக இருந்தது. ஆனால் அதர்வா அதனை தமிழில் கொண்டு வர தவறிவிட்டார். 

அதர்வாவுக்கும் அனுபமாவுக்கும் எப்படி பழக்கம் ஏற்படுகிறது, அந்த பழக்கம் எப்படி காதலாக மாறுகிறது என்பது தான் படத்துக்கு அடிப்படை. ஆனால் அது மிகை யதார்த்தமாக இருப்பதால் படத்துடன் நம்மால் ஒன்ற முடியவில்லை. ஒரு பெண் இவ்வளவு முட்டாளாகவா இருப்பார் என்று அனுபமா கதாப்பாத்திரத்தை பார்த்து கேட்கத் தோன்றுகிறது. 

அவர் மட்டுமல்ல, அனுபமா குடும்பத்தினரும் அதர்வா பேசுவதை வைத்து மட்டுமே நல்லவனாக நம்பும் அளவுக்கு  ஏமாளிகளாக இருக்கின்றனர். யார் வேண்டுமானாலும் இலகுவாக ஏமாற்றி விடலாம் என்ற அளவுக்கு இருக்கும் அனுபமா, இரண்டாம் பாதியில் அறிவு முதிர்ச்சியுடன் நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ளும் படி இல்லை. அமிதாஷுக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்பிருந்தும் கோட்டை விட்டிருக்கிறார். இவர்களில் ஆடுகளம் நரேன் மட்டும் ஆறுதலளிக்கிறார். 

சண்முக சுந்ததரத்தின் ஒளிப்பதிவும், கோபி சுந்தரின் இசையும் படத்துக்கு எந்த வித பலனையும் அளிக்கவில்லை. 

நல்ல கதை இருந்தும் பொருந்தாத நடிகர் தேர்வு, செயற்கையான காட்சி அமைப்புகள் என இந்தத் தள்ளிப் போகாதே படம் நம்மையும் ஏமாற்றியிருக்கிறது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com