நான் நீண்ட காலம் தொடர்ந்து வாசித்து வரும் நாளிதழ் தினமணி. என் பார்வையில் இது ஒரு நடுநிலையான இதழ். தினமணியின் செய்திகளில் ஒரு நிதானம் இருக்கும், மிகை இருக்காது. இதன் தலையங்கம் நாட்டின் போக்கைத் தெளிவுபடுத்தும், நாட்டை தெளிவாக புரிந்துகொள்ள உதவும்.
உலகச் செய்திகள், இந்தியச் செய்திகள், தமிழகச் செய்திகள், நம் மாவட்டச் செய்திகள், உள்ளூர் செய்திகள் எல்லாமே அதனதன் அளவில் இடம்பெற்றிருக்கும்.
தினமணியின் சிறுவர்மணி, மகளிர்மணி, தினமணி கதிர் இவை வாரந்தோறும் வாசகர்களை உற்சாகப்படுத்தும். நடுப்பக்க கட்டுரை அறிவுக்கு விருந்து. மருத்துவப் பகுதி உடல் நலத்தைப் பாதுகாக்க உதவும். இன்னும் பல செய்திகள் வாசகர்களைக் கவரும். கல்விச் செய்திகள் அதிக அளவில் இடம்பெறும். தினமணியின் சிறப்பு மலர்கள் கருவூலங்கள். படைப்பிலக்கியத்துக்கும் தினமணியின் பங்களிப்பு பெரிது. ஆண்டு தோறும் நெய்வேலி நிலக்கரி நிறுவனமும், தினமணியும் இணைந்து சிறுகதைப் போட்டிகள் நடத்தி பரிசளிக்கும். தற்போது எழுத்தாளர் சிவசங்கரியுடன் இணைந்து போட்டி நடத்தி பரிசளிக்கிறது.
நூல் மதிப்புரைகள், புதிய நூல்கள் வருகை, வாரந்தோறும் நடக்க இருக்கும் இலக்கிய அரங்கங்கள் குறித்த செய்திகள் இடம்பெறும். மொத்தத்தில் அன்றைய செய்திகள் முதல் இன்றைய செய்திகள் வரை ஞானிகள், கவிஞர்கள், வீரர்கள், அறிஞர்கள் என எல்லா நிலையினர் பற்றியும் சுவையான செய்திகள் தரும் தினமணி பாராட்டுக்குரியது.
நாட்டின் எல்லா முக்கிய நிகழ்வுகளின்போதும், தினமணி என்னிடம் கட்டுரையோ, கதையோ விரும்பி வாங்கி வெளியிடுவார்கள். தினமணி என்னை எப்போதும் எழுதச் சொல்லி உற்சாகப்படுத்தி வருகிறது.