"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'-118: புலிகளின் எதிர்த் தாக்குதல்!

அக்டோபர் 10-ஆம் தேதி மோதல் தொடங்கப்பட்டதன் நோக்கம், விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனை சிறைப்பிடிப்பது அல்லது சுட்டுக் கொல்வது என்பதே! தலைமையைக் குறி வைத்து அழித்துவிட்டால் விடுதலைப் புலிகள் அமைப்ப
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'-118: புலிகளின் எதிர்த் தாக்குதல்!
Published on
Updated on
2 min read

அக்டோபர் 10-ஆம் தேதி மோதல் தொடங்கப்பட்டதன் நோக்கம், விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனை சிறைப்பிடிப்பது அல்லது சுட்டுக் கொல்வது என்பதே! தலைமையைக் குறி வைத்து அழித்துவிட்டால் விடுதலைப் புலிகள் அமைப்பு சிதறிவிடும் என்பது திட்டம்.

  இத்திட்டப்படி, தளபதிகளைக் கைது செய்யவும் படைப் பிரிவுகளில் சிலவற்றை இறக்கியது அமைதிப் படை. அடுத்து பிரபாகரன் இருக்குமிடத்தைச் சுற்றிவளைப்பது. இவ்விரு திட்டங்களும் பெரிய அளவில் முடுக்கிவிடப்பட்டன.

  யாழ் புறநகரில், கொக்குவில், பிரம்படி பகுதியில் உள்ள தலைமையிடத்தில் பிரபாகரன் இருக்கிறார் என்று இலங்கை உளவுப் படை அளித்த தகவலையடுத்து, இந்திய அமைதிப்படை அப்பகுதியை முற்றுகையிட முடிவு செய்தது.

  அக்டோபர் 12-ஆம் தேதியன்று சிறப்பு அதிரடிப் படைப் பிரிவை ஹெலிகாப்டர் மூலம் இரவு ஒரு மணியளவில் இறக்கியது. (சேகர் குப்தா கூற்றுப்படி 70 பேர்) ""அதிரடிப் படை வீரர்களைத் தொடர்ந்து 13-வது சீக்கிய மெதுரகக் காலாட்படையைச் சேர்ந்த 30 வீரர்கள் அடங்கிய இன்னொரு பட்டாளமும் தரையிறங்கியது.

  அதிரடிப் படையினர் விடுதலைப்புலித் தலைவரைக் கைது செய்யும் பணியில் இறங்க, சீக்கியப் படையினர் தங்கள் தளத்தைக் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது என்பதுதான் ஏற்பாடு.

  அதிரடிப் படை வீரர்களைக் கொண்டு வந்த ஹெலிகாப்டர்கள் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலுக்கு உள்ளானதால், சீக்கிய காலாட் படையினர் கொக்குவில் கிராம சபைக்கு 300 அடி தள்ளி கிழக்கே இருந்த பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அருகில் தரையிறக்கப்பட்டனர். அவர்கள் அசையக் கூட முடியாமல் நாலாப்புறமும் விடுதலைப் புலிகளால் துரிதகதியில் சுற்றி வளைக்கப்பட்டுச் சுடப்பட்டனர்.

  மருத்துவ பீடத்தின் பலமான மூன்று மாடிக் கட்டடத்திற்குள் உள்புகுந்து கொண்ட விடுதலைப் புலிகள் அதன் மேல் மாடியில் பாதுகாப்பான - சுடுவதற்கு வசதியான இடங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். அதிகாலையிலேயே இரு தரப்பினருக்கும் துப்பாக்கிச் சூடு ஆரம்பமாகிவிட்டது''- என்று "முறிந்தபனை' மோதலின் ஆரம்பத்தை விவரிக்கிறது.

  இதே சம்பவத்தை தீபிந்தர் சிங் தனது நூலில் குறிப்பிடுகையில், ""பலமுறை பறந்து அதிரடிப் படையைச் சேர்ந்த 103 வீரர்களையும் சீக்கியப் படையைச் சேர்ந்த 30 வீரர்களையும் இறக்கினோம். ஆனால் நாலாபுறத்திலிருந்தும் விடுதலைப் புலிகளின் குண்டுகள் சீறிப் பாய்ந்து வந்தன. இதன் விளைவாக 3 ஹெலிகாப்டர்கள் சேதமடைந்தன. எனவே, மேற்கொண்டும் பறக்க இயலாது என விமானிகள் மறுத்துவிட்டனர். எனவே 13-வது சீக்கியப் படையணியில் எஞ்சியிருந்தவர்களை அனுப்பமுடியவில்லை. பிற படையணிகளையும் அனுப்ப முடியவில்லை என்ற செய்தியை ஏற்கெனவே திடலில் இறங்கியவர்களிடம் செய்தி தெரிவிக்கவும் முடியாதவாறு அவர்களின் "வாக்கி-டாக்கி செட்டுகள்' புலிகளால் தாக்கப்பட்டு பழுதாகிவிட்டன.

  இதற்குள் விடியும் வேளை நெருங்கி விட்டதால் அதிரடிப் படையினர் பிரபாகரன் இருக்குமிடத்தை வளைத்துக் கொள்ள முன்னேறினார்கள். ஆனால், அவர்கள் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டனர். கடும் போரின் முடிவில் ஒரேயொருவர்தான் மிஞ்சினார் (நெடுமாறனின் தமிழீழம் சிவக்கிறது மற்றும் தீபிந்தர் சிங்கின் ஐடஓஊ ஐச நதஐ கஅசஓஅ).

  இந்தச் சண்டையின்போது அந்தப் பகுதியில் இருந்த கவிஞர் காசி ஆனந்தன் கூறியதாக பழ.நெடுமாறன் நூலில் கூறப்பட்டுள்ள தகவல் வருமாறு: ""தம்மைச் சுற்றிவளைத்துப் பிடிக்க இந்தியப் படை முயலும் என பிரபாகரன் உணர்ந்திருந்தார். ஹெலிகாப்டர்கள் மூலம் படைகளைக் கொண்டு வந்து இறக்குவார்கள் என்பதையும் அவர் ஊகித்துணர்ந்திருந்தார்.

  இதன் காரணமாக அவர், பல்கலைக்கழக வளாகத்திற்குள் புலிகளை மறைவாக நிறுத்தி வைத்திருந்தார். இவர்கள் இருப்பது தெரியாமலேயே வந்திறங்கிய அமைதிப் படை வீரர்கள் புலிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாயினர். இந்த இடத்துக்கு அருகில்தான் நாங்கள் தங்கியிருந்தோம். தம்பி, தானே தலைமை ஏற்று ஆயுதமேந்தி, களத்தில் நின்று, உத்தரவுகளைப் பிறப்பித்த காட்சி, நிலவொளியில் அவர் நெருப்பாகத் தெரிந்தார்'' என்று கூறியுள்ளார்.

  இந்தப் போரில் பிரபாகரன், மாத்தையா, ஜானி, பொட்டு அம்மான், யோகி, நடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

   விடுதலைப் புலிகள் தரப்பில் பொட்டு அம்மான் வயிற்றில் குண்டு பாய்ந்து படுகாயமுற்றார். கையிலும் பலத்த காயத்துடன் தப்பித்தார்.

  இப் போர் குறித்து அடேல் பாலசிங்கம் எழுதிய "சுதந்திர வேட்கையில்' கூறப்பட்டிருப்பதாவது:

  ""இதேவேளை, பாரசூட் அதிரடிப் படையினர் சீக்கியப் படையணியிலிருந்து பிரபாகரனை அழித்தொழிக்கும் இலக்கை மட்டும் தங்கள் தனி இலக்ககாகக் கொண்டு அவர் இருந்த இடத்தைக் குறி வைத்து நகரத் தொடங்கினர். அந்த இடத்தை நெருங்குவதற்கு முன்னமே அங்கிருந்து அவர் வெளியேறி விட்டதை அவர்கள் அறிந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், ""தமக்கு பரிச்சயமில்லாத சூழலில் தாம் யாரைத் தேடிச் செல்கிறார்களோ, அவரை முன்பின் பார்த்தறியாத நிலையில், தங்களது இலக்குக்குள் அகப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை அமைதிப்படை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றது. யாழ் கோட்டையிலிருந்து புறப்பட்ட கவச வாகனங்கள் மக்கள் மீது ஏறிச் சென்றது''- என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  அமைதிப் படையின் இந்நடவடிக்கை "ஆபரேஷன் பவான்' என்றழைக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் களைவது என்று ஆரம்பித்து அவ்வியக்கத் தலைமையை அழித்தொழிப்பது என்றானது. "பவான்' என்கிற "சுத்தமான காற்று' விடுதலைப் புலிகளினதும் தமிழ்மக்களினதும் துயர்களுக்கு புயற்காற்றானது. புயலில் சிக்குண்ட மக்களின் நிலைக்கு அவர்கள் ஆளானார்கள்.

  பிரபாகரனைப் பிடிப்பது-அழிப்பது என்பது நடைபெறவில்லையென்றாலும் விடுதலைப் புலிகளின் வெளிப்படையான யாழ்ப்பாண நடவடிக்கைகள் மறைந்து போயிற்று.

நாளை: அமைதிப்படையிடம் யாழ்ப்பாணம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com