விழலுக்கு நீர் பாய்ச்சமாட்டோம்

மத்திய விழிப்பாணையம் இந்த ஆண்டு ஊழலால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஊழலை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும்
Published on
Updated on
3 min read

மத்திய விழிப்பாணையம் இந்த ஆண்டு ஊழலால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஊழலை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

 ஊழல் வேரூன்றுவதற்கு இரண்டு காரணங்கள். எந்த ஒரு நடவடிக்கை என்றாலும் ஏதாவது ஓர் அரசுத் துறையை நாடவேண்டிய நிலை. சுற்றிவளைத்து இடப்படும் அரசாணைகள், அரசுப் படிவங்களைப் படித்துப் புரிந்துகொள்வதற்கு தனி அறிவாற்றல் வேண்டும் என்றால் மிகையில்லை. இதைத்தான் ஓர் ஆளுமை நிபுணர், நடைமுறைப் படிப்பாற்றல் என்கிறார்.

 சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்தவரைப் படித்தவர் என்ற கணக்கில் சேர்க்கிறோம். ஆனால், நடைமுறைப் படிப்பாற்றல் பெற்றவர் இந்தியாவில் 30 சதவிகிதத்துக்கும் குறைவு என்று அளவிடலாம். இது ஒருபுறம் என்றால் நெளிவு சுளிவுகள் தெரிந்து சாதித்துக்கொள்பவர்கள் இருப்பதால் குறுக்குவழிதான் பிழைக்கும் வழி என்ற நிலை.

 ஒரு நாட்டின் வெளிப்படையான நிர்வாகத் திறனைக் கணிக்கும் சர்வதேச நிறுவனம் 120 நாடுகளில் நடத்திய ஆய்வில் இந்தியா 89-வது இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இரண்டு இடம் குறைந்துள்ளது.

 சத்யம் நிறுவன ஊழல் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிர்வாகம் பற்றி எழுந்துள்ள சர்ச்சைகள் இந்தப் பின்னடைவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. சீனா 77-வது இடம் இந்தியாவைவிட 10 இடங்கள் முன்னிலையில் உள்ளது.

 எவ்வளவோ சிறந்த நலத்திட்டங்கள் அரசால் மக்கள் நலனுக்காக வகுக்கப்படுகின்றன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஊழல் ஊடுருவலால் பாதிக்கப்படுபவர்கள் ஏழைமக்கள்தான். ஊழல், மக்கள் நலனுக்கு எதிரானது.

 1993-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்பில் பல உயிர்கள் பலியாயின. வெடிபொருள்கள் மறைத்துக் கொண்டு வரப்பட்ட வாகனங்களைத் தணிக்கைச் சாவடிகளில் சரியாகத் தணிக்கை செய்யாததால் அவை சுலபமாகக் கயவர்கள் கைகளுக்குச் சென்றடைந்தன என்பது விசாரணையில் வெளிவந்த உண்மை.

 தணிக்கைச் சாவடிகளில் நிலவும் ஊழல்களால் தேசியப் பாதுகாப்புக்குப் பெரும் பாதிப்பு, பயங்கரவாதம் ஊடுருவத் துணைபோகிறது என்பது நெத்தியடி உண்மை. ஊழல் தேசியப் பாதுகாப்புக்கு விரோதமானது.

 சுதந்திர இந்தியாவின் முதல் 30 ஆண்டுகள் ஒட்டுமொத்த வளர்ச்சி 3 சதவிகிதம் இருந்தது. தாராளமயமாக்கல், நவீன பொருளாதார அணுகுமுறைகளால் வளர்ச்சி 8 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது. பொருளாதார வளர்ச்சியும், வெளிநாடுகளிலிருந்து வரும் முதலீடும் வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகம் நிலவினால் மேலும் பெருகும் ஊழல், பொருளாதார வளர்ச்சிக்குத் தடைக்கல் என்பது தெளிவு.

 ஹாங்காங் என்ற சிறிய நகரம், இங்கிலாந்து நாட்டின் ஆளுகையில் இருந்தது, இப்போது சீனாவின் கைவசம். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முகப்பில் அமைந்துள்ளதால் முக்கிய வணிக நகரமாக வளர்ந்துள்ளது.

 பல ஆண்டுகளுக்கு முன் ஹாங்காங் நகரத்தில் நிர்வாகம் நிலைகுலைந்து ஊழல் எல்லா இடங்களிலும் பரவி இருந்தது. இங்கு நிலைமையைச் சரிசெய்ய ஒருங்கிணைந்த ஊழல் அழிப்புத் திட்டம் வகுக்கப்பட்டது.

 ஊழலில் உழல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை, ஊழல் தடுப்பு முறைகள் மற்றும் மக்களிடையே ஊழலை அழிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்ற மும்முனைத் திட்டம் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டது.

 மக்கள் ஒத்துழைப்பு ஒருபுறம் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களின் முழுஈடுபாடும் இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள். தனியார் துறையில் உள்ள ஊழலும் சட்டவிரோதமானது என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, தவறு செய்யும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பெறுப்பில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஹாங்காங் வெற்றியின் மற்றொரு சிறப்பு அம்சம்.

 கடுமையான தண்டனை சட்ட ஏடுகளில் இருந்தால் மட்டும் போதாது. அவை நடைமுறைக்கு வரவேண்டும். தகுந்த தண்டனை உரிய நேரத்தில் என்ற நிலைதான் குற்றங்களைக் கட்டுப்படுத்த உதவும்.

 ஐக்கிய நாடுகள் சபை அடுத்த 15 ஆண்டுகளில் அதாவது 2015-க்குள் நிறைவேற்றப்படவேண்டிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது. வறுமை ஒழிப்பு, எல்லோருக்கும் வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மனிதஉரிமைகளுக்கு முக்கியத்துவம் என்ற இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை எல்லா நாடுகளும் எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்த இலக்குகளை அடைவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது ஊழல் ஒன்றுதான் என்று குறிப்பிட்டு, அதனைக் களைய எல்லா நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று ஐக்கியநாடுகள் சபை அறிவுறுத்தியுள்ளது.

 ஊழலில் லஞ்சம் கொடுப்பவர், லஞ்சம் வாங்குபவர் இருவருக்கும் பங்கு உண்டு. சட்டம் லஞ்சம் வாங்குபவரைக் குறிவைக்கிறது. ஆனால், லஞ்சம் கொடுப்பவரும் ஊழல் தழைப்பதற்குக் காரணம் என்பதை மறுக்கமுடியாது. இதனைக் கருத்தில் கொண்டுதான் லஞ்சம் கொடுப்பவரையும் சட்டப்பிடியில் கொண்டுவருவதற்குத் திருத்தங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய விஜிலன்ஸ் கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

 ஊழலை ஒழிப்பதற்கு அரசுத் துறையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவ்வப்போது அளவிடக்கூடிய முறைகள் பற்றியும் விஜிலன்ஸ் கமிஷன் விளக்கியுள்ளது. விழிப்புத் துறையின் பணிகள் ஒரு துறையைச் சிறப்பாக இயக்க உதவ வேண்டும். தண்டனை மற்றும் தடுப்பு முறைகள் லஞ்ச ஒழிப்பில் முக்கியம் என்றாலும், நேர்மைக்கும், உண்மையான உழைப்புக்கும் உரிய கெüரவம் கொடுத்தால்தான் துறையின் மேலாண்மை உயரும். விதிமுறைகளைச் சுலபமாக்குதல் மற்றுமொரு முக்கிய நடவடிக்கை.

 விதிகளும், அலுவலக நிபந்தனைகளும் நிர்வாகம் பாரபட்சமின்றி இயங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பணியைச் செய்ய முடியாது என்பதற்கு, காரண காரியங்கள் ஆராயப்படுகின்றன. விதிகளை மேற்கோள்காட்டி தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதற்கு முன் செய்ததுண்டா? இல்லையெனில் மாற்றம் தேவையில்லை என்று ஆணையிடப்படுகிறது. முன்மாதிரியைத் தேடாதே; முன் மாதிரியை உருவாக்கும் முன்னோடியாக இரு என்று மக்களுக்கு உதவும் வகையில் விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். சமயத்துக்குத் தகுந்தாற்போல், சம்பந்தப்பட்ட பயனாளியைப் பொறுத்து விதிகள் நடைமுறைப்படுத்தலும் நிர்வாகத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.

 ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம் இயற்றப்பட்டு பொருள்கள் கொள்முதல் செய்வதில் பல வரவேற்கத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இணையதளம், நேர்முக விவாதங்கள் மூலம் வெகுவாக டெண்டர்களில் பங்குபெறும் நிறுவனங்களின் சந்தேகங்களைப் போக்கலாம். டெண்டரில் பங்குபெறும் நிறுவனங்களுக்கு, மற்றவர்கள் டெண்டரில் வெற்றி பெறுவதற்கு முறைகேடுகளில் ஈடுபடுவார்களோ என்ற சந்தேகம் இருக்கும். இந்தச் சந்தேகச் சாபக்கேட்டைப் போக்குவதற்கு ஒரே வழி வெளிப்படையான நேர்மையான அணுகுமுறை மற்றும் நடைமுறை.

 ஊழலைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து, அதற்கு உரிய ஆணைகள், மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் மக்கள் குறைகள் துறை மூலம் 2004-ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர், முறைகேடுகள் பற்றிய தகவல் நேராகவோ, மறைமுகமாகவோ அளிக்கலாம். அதன் அடிப்படையில் மத்திய விஜிலென்ஸ் கமிஷன் விசாரணை மேற்கொள்ளும். உண்மை வெளிவரும்பட்சத்தில் நேரடியாக வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ள ஆணையிடலாம். தகவல் கொடுப்பவருக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்கு முழுஅதிகாரம் விஜிலென்ஸ் கமிஷனுக்கு உள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் தவறு நேர்ந்தாலோ விதிகள் மீறப்பட்டாலோ, நடுவர் விசில் மூலம் ஒலி எழுப்பி விளையாட்டை நிறுத்தி ஒழுங்கான முறையில் விளையாட்டு தொடர வழிசெய்வார்.

 அதேபோல் ஊழல் பற்றித் தகவல் கொடுப்பவரும் ஒருவிதத்தில் நடுவராக இருந்து, முறைகேடுகளை நிவர்த்தி செய்வதில் உதவுகிறார் என்பதால் அவர் ஒலி எழுப்பி எச்சரிக்கும் நடுவராக அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.

 இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊழலிருந்து சமுதாயத்துக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை. மேலைநாடுகளில் முக்கியமாக ஐரோப்பிய நாடுகளில் ஊழல் ஒழிப்பில் வெற்றி கண்டுள்ளார்கள். அதற்கு முக்கிய காரணம் பொதுமக்களின் ஒத்துழைப்பும் ஊழலுக்கு இணங்காத துணைபோகாத நிலைப்பாடும்தான் என்பது நம்மைச் சிந்திக்க வைக்கவேண்டும்.

 ஒரு சாதாரணப் போக்குவரத்து விதிமீறினால் அபராதம் கட்டாமல் யாரை அணுகிச் சரிசெய்யலாம் என்று யோசிக்கிறோம் அல்லது பணியில் இருக்கும் காவலருக்கு ஏதாவது கொடுத்துவிட்டுச் சென்றுவிடலாம் என்று முயற்சிக்கிறோம். இவ்வாறுதான் ஊழல் பரவி வளர்கிறது.

 ஊழலை ஒழிப்பது நம்கையில். அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்த்தால் நிச்சயமாக நாம் எதிர்பார்க்கும் ஊழலற்ற சமுதாயம் உருவாகும். ஊழலுக்குத் துணைபோவது விழலுக்கு நீர்பாய்ச்சுவதைவிடக் கொடியது. விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம் என்று பெருமை பாடிய மகாகவியின் கனவு மெய்ப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com