ரத்த தானத்தில் தன்னிறைவு பெற...

நாட்டில் விபத்துகளும், அறுவைச் சிகிச்சைகளும் அதிகரித்துவிட்டதால் ரத்தத்தின் தேவையும் அதிகரித்துவிட்டது. ரத்தத் தேவைக்கு ரத்த தானம் மட்டுமே தீர்வு. அதனால் இன்றையச் சூழலில் ரத்த தானம் முக்கியத்துவம் வாய
Updated on
1 min read

நாட்டில் விபத்துகளும், அறுவைச் சிகிச்சைகளும் அதிகரித்துவிட்டதால் ரத்தத்தின் தேவையும் அதிகரித்துவிட்டது. ரத்தத் தேவைக்கு ரத்த தானம் மட்டுமே தீர்வு. அதனால் இன்றையச் சூழலில் ரத்த தானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

தமிழகத்தில் ரத்தத் தேவையில் தன்னிறைவு பெற தமிழக முதல்வர் ஜெயலலிதா முயற்சி மேற்கொண்டுள்ளது பாராட்டுக்குரியது.

முதல்வர் ஜெயலலிதா அண்மையில் வெளியிட்டுள்ள தேசிய தன்னார்வ ரத்த தான நாள் செய்தியில், தமிழகம் ரத்தத் தேவையில் தன்னிறைவு பெற்றிட, தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில், கல்லூரி மாணவர்களிடையே செஞ்சுருள் சங்கம் மூலமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வக் கொடையாளர்களை இணையதளம் மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம், அவசர காலத்தில் ரத்தம் தேவைப்படும் அனைவருக்கும் பாதுகாப்பான ரத்தம் எளிதில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தன்னார்வக் கொடையாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வதால், கொடையாளர்களை யார் வேண்டுமானாலும் தொடர்புகொள்ள முடியும். அரசு மருத்துவமனைகளில் தன்னார்வக் கொடையாளர்களிடம் இருந்து இலவசமாகப் பெறப்படும் ரத்தம் இலவசமாகப் பரிசோதனை செய்யப்பட்டு கிடைக்கிறது.

ரத்த தானத்தில் வேலூர் மாவட்டம் புதுமை படைத்து வருகிறது. நகர்ப்பகுதிகளில் நடைபெறும் பல திருமணங்களில் மேடையிலேயே ரத்த தான முகாம்கள் நடத்தப்படுகின்றன. மணமகன், மணமகள் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்களில் பலர் ரத்த தானம் செய்கின்றனர்.

கிராமங்களிலும் இதுபோன்ற திருமணம் நடக்கிறது. ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாத கிராம மக்கள் மகிழ்ச்சியோடு கூடும் இடத்தில் ரத்த தான முகாம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். ரத்த தானத்தில் தன்னிறைவு பெற அனைவரின் பங்களிப்பும் தேவை. அதற்குச் சரியான களம் திருமண மேடைதான்.

தமிழகத்தில் அதிநவீன மற்றும் குளிர்சாதன வசதியுடன் கூடிய 17 நடமாடும் ரத்த ஊர்திகள் உள்ளன.

தேசிய ஊரக நலக் குழுமத்தின் உதவியுடன் கிராமப்புறங்களில் ரத்தம் எளிதில் கிடைக்கும் வகையில் 231 ரத்த சேமிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் பாணாவரம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரத்த சேமிப்பு மையம் அமைக்கப்பட்டது. ஓர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த சேமிப்பு மையத்தை அமைப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை.

ரத்த தானம் செய்ய மக்கள் ஆர்வமாக இருந்தாலும் முகாமுக்கு தாமதமாக வரும் ரத்த வங்கியினராலும் ரத்தத் தேவையில் தன்னிறைவுக்குப் பாதிப்பு ஏற்படும்.

அதனால் அனைத்து ரத்த வங்கியினருக்கும் தக்க ஆலோசனைகள் வழங்குவதிலும் அரசு கவனம் செலுத்துவதன் மூலம் தமிழகம் நிச்சயம் ரத்தத் தேவையில் தன்னிறைவடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com