கலைகளும் களைகளும்

அண்மையில் வெளிவந்த பல தமிழ்த் திரைப்படங்கள் நமது நீதிமன்றங்களுக்குக் கூடுதல் சுமைகளாக மாறியுள்ளன.
Updated on
3 min read

அண்மையில் வெளிவந்த பல தமிழ்த் திரைப்படங்கள் நமது நீதிமன்றங்களுக்குக் கூடுதல் சுமைகளாக மாறியுள்ளன.

அதற்குக் காரணம், சமூக நோக்கில் எத்தகையக் காட்சிகள் தேவையானவை? எத்தகையக் காட்சிகள் தேவையற்றவை? எத்தகையக் காட்சிகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியவை? விதி விலக்குகளையெல்லாம் விதிகளாக்கி வெளிச்சம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கலாமா? குறிப்பிட்ட ஒரு செய்தி அவ்வளவு பெரிய ஊடகத்தில் பொதுமைப்படுத்தப்படுவதற்கு உகந்த செய்திதானா? எது கருத்து? எது கருத்துச் சுதந்திரம்? கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எதுவரை என்பன போன்ற கேள்விகளும் சரியான புரிதல்களும் இன்றியே இன்றைய பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் போகிற போக்கில் தயாராகி திரைக்கு வருவதுதான்.

அத்தகையத் திரைப்படங்களை தணிக்கைக் குழுவினரால் பார்க்க மட்டுமே முடிகிறது. நமது திரைப்படத் தணிக்கைத் துறை என்பது அதன் நோக்கத்தில் தோல்வியடைந்துவிட்ட ஓர் அமைப்பாக மாறிவிட்டதால், அப்படியோர் அமைப்பே தேவையில்லை எனும் ஒரு கருத்தும் இப்போது மேலோங்கியிருக்கிறது.

ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு போன்ற தொழில்நுட்பங்களில் பெருமைப்படத்தக்க அளவுக்கு முன்னோக்கிப் பாய்ந்திருக்கும் நமது தமிழ்த் திரையுலகம், கதை, வசனம், பாடல் போன்ற பிற உள்ளடக்கங்களில் பின்னோக்கி சரிந்திருக்கிறது என்பதே உண்மையாகும்.

அவ்வப்போது ஒரு சில படங்கள், ரசிகர்களுக்கு நிறைவு தருகிற படங்களாக அமைந்துவிடுகின்றன என்பது உண்மைதான்.

ஆனால், பெரும்பாலான படங்களில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் - கொடிய வன்முறைத் தாண்டவங்களாகவும், காதல் காட்சிகள் - தரக்குறைவான உடல் ஆபாசங்களாகவும், நகைச்சுவைக் காட்சிகள் - எவரையேனும் காயப்படுத்தி மட்டம் தட்டுகிற இரட்டைப் பொருள் அரட்டைகளாகவும், கதாநாயகனின் உரையாடல்கள் - கண்கள் சிவக்க யாருக்கேனும் விடப்படுகிற சவால்களாகவும், பாடல்கள் - குத்தாட்டங்கள் நிறைந்தவையாகவும் மாறியிருப்பதை மறுக்க முடியுமா?

உச்சக்கட்டக் கொடுமையாக, சக கதாபாத்திரங்களிடம் பேச வேண்டிய கதாநாயகர்கள், பெரும்பாலும் கேமராவைப் பார்த்து, அதாவது திரையரங்கின் பார்வையாளர்களைப் பார்த்துத் தத்துவம் சொல்லுகிற, சவால் விடுகிற, தான் பெற்றிருக்கின்ற ரசிகர் கூட்டம் பற்றிய பெருமிதங்களைப் பறைசாற்றுகிற வகையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தகையப் போக்கு கதாநாயகர்களுக்கு வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தாலும், அது திரைப்படம் எனும் மாபெரும் காட்சி ஊடக அறிவியலுக்கும், அதன் அறவியலுக்கும் நேர்ந்துள்ள தோல்வி என்றே கருத வேண்டியிருக்கிறது.

சில கதாநாயகர்கள், திரை முழுவதும் பூதாகரமாகத் தோன்றி திரையரங்கின் பார்வையாளர்களைப் பார்த்துப் போங்கடி, வாங்கடி, எங்களையெல்லாம் உங்களுக்குப் புடிக்காதுடி, அவனுங்கள மாதிரி ஆளுங்க பின்னாடிதான் ஓடுவீங்கடி என்று பொதுமையிலும் பன்மையிலும் பேசுகிற வசனங்கள், ரசிகர்களைக் கவரும் வகையில் முன்வைக்கப்படுகின்றன.

இதுபோன்ற மலிவான முன்வைப்புகளும், வேட்டை உத்திகளும் உலக அளவில் பின்தங்கிய நாடுகளில் தயாராகும் திரைப்படங்களிலாவது காணப்படுகின்றனவா என்பதை ஆய்வாளர்கள்தான் சொல்ல வேண்டும்.

ஒரு திரைப்படம் திரைக்கு வந்தவுடன், அது ஒரு காட்சி ஊடக ஆவணமாகிவிடுகிறது. அத்தகைய ஆவணங்களில் அறியாமைகளும், தவறுகளும், சுய தம்பட்டங்களும் சேர்ந்தே நிலைபெறுவது என்பது பிறகு என்றைக்கும் மாற்ற முடியாத அவலங்களாகவும் உறைகின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கலை இலக்கியங்களின் வாயிலாக அறம் உரைத்து உலகையே வியக்கவைத்த ஓர் இனத்தின் இன்றைய நீட்சியானது, அறத்தை அறவே மறந்து திரைப்படம் என்கிற, அறிவியல் சார்ந்த, பெரியதொரு காட்சி ஊடகத்தைக் கையாளுகின்ற விதம் கேலிக்கு உரியதாக மாறியிருப்பது ஒரு வரலாற்றுத் துயரம்தான்.

இத்தகைய நெருடலான போக்கினை இப்போதைய "டிரெண்ட்' என்கிறார்கள் சிலர். தமிழ்த் திரையின் வரலாற்றில் பக்திக் கதைகள், மன்னர்களின் கதைகள், சமூக சீர்திருத்தக் கதைகள், குடும்பக் கதைகள், காதல் கதைகள், யதார்த்தக் கதைகள், பாடல், இசைக் கதைகள் போன்றவைகளைத்தான் "டிரெண்ட்' என்று சொல்ல வேண்டுமே தவிர, அப்பட்டமாக தடம் புரண்டுபோகிற குற்றங்களை "டிரெண்ட்' என்று குறிப்பிடக்கூடாது.

அண்மையில் வெளிவந்த ஒரு திரைப்படத்தில், கதாநாயகன் பேசுகின்ற வசனம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியின் தமிழ்ப் பயிற்றுமொழி முறையை இழிவுபடுத்துவதாகக்கூறி தொடுக்கப்பட்ட வழக்கில், தீர்ப்பளித்த நீதி

யரசர் வெ. இராமசுப்பிரமணியன், "ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் தமிழ்ப் பாடத் திட்டத்தில் படித்த மாணவனின் தகுதியை வேறு எங்கும் சென்று சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நானே ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்தவன்தான்.

சுவாமி விவேகானந்தர் 1893-ஆம் ஆண்டு ஒரு மாநாட்டில் பேசியபோது, "நான் பொறுமை, சகிப்புத் தன்மை ஆகியவற்றைக் கொண்ட நாட்டைச் சேர்ந்தவன்' எனப் பெருமையாகப் பேசினார்.

நாம் விவேகானந்தரை உண்மையிலேயே பின்பற்றுகிறவர்களாக இருந்தால், அந்தப் படத்தின் அத்தகைய வசனத்தை யாரும் பொருள்படுத்தவே வேண்டாம். அது காலப்போக்கில் மக்களது மனங்களில் இருந்து மறைந்துவிடும்.

எனவே, இந்த மனுவை ஊக்குவிக்காமல் தள்ளுபடி செய்கிறேன்' என்று தீர்ப்புரைத்தார். பாரம்பரியம் மிக்க ஒரு கல்வி நிறுவனத்தை போகிற போக்கில் தரம் குறைத்துப் பேசிவிட்டுப் போவதற்கு நமது தமிழ்த் திரைப்படங்களால் முடிகிறது.

அண்மையில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படத்தில் திருநங்கைகள் மிகவும் இழிவாகச் சித்திரிக்கப்பட்டனர். அதற்கு எதிராக மதுரையிலுள்ள நீதிமன்றம் ஒன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது. பின்னர், சென்னையில் உள்ள திரைப்படத் தணிக்கை வாரியம் முன்பாக திருநங்கையர் போராட்டமும் நடத்தினர்.

அதன் விளைவாக இனிமேல் திருநங்கையரை இழிவுபடுத்துகிற காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறாமல் பார்த்துக் கொள்கிறோம் என்று தணிக்கை வாரியம் சார்பில் உறுதி தரப்பட்டிருக்கிறது.

இன்னொரு படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறித் தொடரப்பட்ட வழக்கில், திரைப்படத் தணிக்கைத் துறையை நாடி தீர்வு காணும்படி வழி காட்டியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

வேறு இரண்டு திரைப்படங்களுக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில். தமிழ்த் திரைப்படங்கள் குறித்து நீதியரசர் கிருபாகரன் தெரிவித்துள்ள கருத்துகள் கவனிக்கத்தக்கவை:

"தற்போது வெளியாகும் திரைப்படங்களில் பாலியல் சார்ந்த பிரச்னைகள், காட்டுமிராண்டித் தனமான சண்டைக் காட்சிகள், பெண்களைக் கேவலமாகச் சித்திரித்தல், மது குடித்தல், புகை பிடித்தல், கெட்டவர்களை நல்லவர்களாகச் சித்திரிப்பது, குற்றச் செயல்களை நியாயப்படுத்துவது ஆகியவை அதிகமாக உள்ளன.

தமிழ் சினிமாவுக்கு இது நல்லதல்ல. இவற்றையெல்லாம் தவிர்ப்பது குறித்துத் திரையுலகினர் ஆலோசிக்கவேண்டும்' என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

திரைப்படங்களில் நினைவிழப்பு நோய் மிகவும் தவறாகச் சித்திரிக்கப்படுவதாக உலகப் புகழ்பெற்ற மருத்துவரும், லண்டன் கிங் கல்லூரியின் பேராசிரியருமான மைக்கேல் டி கோபல்மேன் சென்னையில் நடந்த நரம்பியல் மருத்துவ மாநாடு ஒன்றில் கூறினார்.

ஒருவருக்கு மண்டையில் அடிபட்டு நினைவு பிசகுவது என்பது சாத்தியம்தான். ஆனால், மீண்டும் அதே இடத்தில் அடிபட்டு அவருக்கு நினைவு திரும்புவது என்பது மருத்துவ அறிவியலுக்கு முற்றிலும் புறம்பானது என்று வருத்தப்பட்டுக் கொண்டார் அவர்.

இது மட்டுமல்ல, தமிழ்த் திரைப்படங்களில் இவ்வாறாக முன்வைக்கப்படுகின்ற பல தகவல்கள் அறிவியலுக்கும், சமூகவியலுக்கும் புறம்பானவையே. அவை எந்தவொரு யதார்த்தத்தையும் அதன் உண்மை இயல்பில் காட்டியதேயில்லை.

நீதிமன்றம், காவல் துறை, கல்லூரி, காதல், குடும்ப உறவுகள் எதுவாயினும் அவையனைத்தும் பொருந்தாப் புனைவுகளாகவே சித்திரிக்கப்படுகின்றன. திரைப்படப் படைப்பாளிகள் கதைக்கு வேண்டிய களங்களையும் யதார்த்தங்களையும் உரிய வல்லுநர்களோடு சேர்ந்து ஆய்வு செய்யும் முறை இங்கில்லை.

இத்தகைய ஆய்வறிவின்மையே பல அறியாமைகளைத் தமிழ்த் திரையுலகம் முன் வைப்பதற்கான காரணமாக இருக்கிறது. இதனாலேயே யதார்த்தத்திற்குக் கொஞ்சமும் பொருந்தாத வகையில் தமிழ் ஆசிரியர்களும், திருநங்கையரும், மாற்றுத் திறனாளிகளும், அடித்தட்டு மக்களும், பெண்களும் அண்மைக்காலத் தமிழ்த் திரைப்படங்களில் தரக்குறைவாகவே சித்திரிக்கப்பட்டுள்ளனர்.

புதியனவற்றைச் சிந்தித்து, மேலே உயர்ந்து நின்று எடுத்துரைக்கின்ற படைப்பாளுமை இன்மையாலும், படைப்பு அறமின்மையாலும் நேர்ந்திருக்கும் அவலம் இது. எதிர்வரும் காலங்களிலாவது இத்தகைய அவலம் களையப்பட வேண்டும்.

சமூக அவலங்களைத் திருத்துவதே கலைஞர்களின் கடமை. இல்லையேல் கலைஞர்களை சமூகம் திருத்த வேண்டிய "அவல' நிலை ஏற்பட்டு விடும்!

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com