அறிவியல் ஒளிச்சேர்க்கை!

இந்த ஆண்டினை (2015) "பன்னாட்டு ஒளி ஆண்டு' என்று "யுனெஸ்கோ' அறிவித்து இருக்கிறது.
Updated on
3 min read

இந்த ஆண்டினை (2015) "பன்னாட்டு ஒளி ஆண்டு' என்று "யுனெஸ்கோ' அறிவித்து இருக்கிறது. இந்த ஆண்டில் 1001 ஒளியியல் கண்டுபிடிப்புகள் குறித்தும், அல் ஹசன் என்று அழைக்கப்படும் பின்-அல்-ஹாயத் என்னும் அராபிய இயற்பியல் அறிஞரின் "ஒளி நூல்' ("கிதாப் அல்-மனாஸிர்') என்னும் அறிவியல் புத்தகம் குறித்தும் அறிமுகக் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.

அறிவியலுக்குச் சாதி இல்லை மதமும் இல்லை என்ற கருத்தினை வலியுறுத்தும் வகையில் இந்தப் பன்னாட்டு ஒளி ஆண்டில் செப்டம்பர் 14 அன்று "அறிவு அடிப்படைச் சமூகத்திற்கு இஸ்லாமியப் பொற்காலம்' என்ற தலைப்பில் கண்காட்சிகளும் மாநாடுகளும் நடைபெற உள்ளன.

இயற்பியலுக்கு நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் மூவரில் சர். சி.வி. ராமன், டாக்டர் சுப்பிரமணியம் சந்திரசேகர், இருவருமே ஒளி சார்ந்த ஆய்வுகளால் புகழ் பெற்ற தமிழர்கள் என்பது பெருமைக்கு உரிய செய்தி.

பிரிட்டீஷ் இந்தியாவில் வாழ்ந்து பரிசு பெற்ற ஒரே அறிஞர் சர். சி.வி. ராமன் (1930). நோபல் பரிசளிப்பு விழாவில் தமது நாட்டிற்கெனத் தேசியக் கொடி இல்லையே என்று கண்கலங்கியவர்.

இவரது சகோதரியின் புதல்வரான டாக்டர் சுப்பிரமணியம் சந்திரசேகர், இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற (1983) மூன்றாவது இந்தியர். சூரியனைப் போல் ஏறத்தாழ 8 மடங்கு வரை நிறை கொண்ட கனத்த விண்மீன்கள் "சூப்பர்நோவா' (மிகைப் புது விண்மீன்) ஆக வெடித்துச் சிதறினால் "வெண்குறளை' விண்மீன் மிஞ்சும். அது ஏறத்தாழ 1.44 சூரிய நிறை உடையதாக இருக்கும்.

ஆனால், 8.30 சூரிய நிறை கொண்ட மிகக் கனமான விண்மீன்கள் வெடிப்பில் "நியூட்ரான்' விண்மீன்கள் பிறக்கும். 30 சூரியநிறை அதி கனரக விண்மீன்களில் இருந்து ஒளியை வெளியே விடாத, நிறை ஈர்ப்பு மிக்க கருந்துளை விண்மீன்கள் தோன்றும். இத்தனையும் கணித்து உரைத்த மேதை சந்திரசேகர் தான்.

பண்டைய ஒன்றுபட்ட பஞ்சாபில் தோன்றி இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற (1979) இரண்டாவது இந்தியர் அப்துஸ் சலாம். இன்று அணுவை உடைத்தால் அதனுள் மையக் கருவும் அதனைச் சுற்றி "எலக்ட்ரான்'கள் ஆகிய எதிர் மின்னணுக்களும் இருக்கும் என்பது அறிவோம்.

மையக் கருவினுள் ஒரே மாதிரியான நேர்மின் "புரோட்டான்'கள் ஒன்றை ஒன்று விலக்காமல் மின் நடுநிலை "நியூட்ரான்'களுடன் பிணைந்து இருக்க "மெசான்', "நியூட்ரினோ' போன்ற சில இம்மிகளே காரணம். இதுவே "மெலிதான அணுக்கரு விசை'.

அணுக்கருக்களை ஒன்றோடொன்று பிணைக்க உதவுவது "வலுவான அணுக்கரு விசை'. அணு உலைகளிலும் சூரியனிலும் செயல்படுவது போன்ற விசை இது. சுழலும் அணுக்களின் வெளிப்பாடு "மின்காந்த விசை'.

தொலைக்காட்சி, வானொலி, செல்லிடப்பேசி அலைகள் உள்பட, நுண்ணலை முதல் அண்டத்தின் "காஸ்மிக்' கதிர்கள் வரை அனைத்தும் இந்த வகை. நாம் காணும் ஒளிகூட மின் காந்த அலைவரிசையின் ஓர் அம்சம்தான். இந்த உண்மையை அறிவித்தவர் ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் என்னும் அறிஞர்.

அணுத் தொகுதிகள் நிறைந்து சுழலும் பொருள்கள் இடையே நிகழ்வது "நிரையீர்ப்பு விசை'. பிரபஞ்சத்தையே ஆட்டுவிக்கும் ஆதார விசை. இம்மிகள்-அணுக்கள்-பிண்டங்கள்-அண்டங்கள் இந்த நான்கு விசைகளைக் கணிதப்படுத்த முயன்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட வெற்றி பெறவில்லை.

மின்காந்த விசைக்கும் மெலிதான அணுக்கரு விசைக்கும் இடையிலான தொடர்பினை அப்துஸ் சலாம் கணித்து வெளியிட்டார். 1968-ஆம் ஆண்டு "சமாதானத்திற்கான அணுக்கள்' (அற்ர்ம்ள் ச்ர்ழ் டங்ஹஸ்ரீங்) என்கிற விருது வழங்கப்பட்டது.

"அறிவியலும் மதமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. இரண்டும் இருவேறு உலகங்கள். நம்பிக்கையின் அடிப்படையில் ஆனது மதம். காரண, காரிய பகுப்பாய்வின் அடிப்படையில் ஆனது அறிவியல். முன்னது மனித உள்ளத்தின் அக உலகம். பின்னது மனித உடலின் புற உலகம். நான் ஒரு முஸ்லிம்.

அதேவேளையில் நான் ஒரு விஞ்ஞானி. அறிவியல் கருத்தோட்டங்கள் வழி இயற்கையினை ஆட்படுத்தவும், புது அறிவு படைக்கவுமே குரான் போதிக்கிறது. புனித குரானின் ஆன்மிகச் செய்திகளை நான் நம்புகிறேன்'. இதுதான் அப்துஸ் சலாம் என்ற விஞ்ஞானியின் சமநோக்குப் பார்வை.

அமெரிக்காவின் விரிந்த வீதியில் தன்னந்தனியாக "வாக்கிங்' (நடைப் பயிற்சி) போனவரை வெள்ளைக் காவல் துறையினர் தூக்கிப் போட்டதில் முதுகுத் தண்டு ஒடிந்து மருத்துவமனையில் பரிதாபமாகக் கிடக்கிறார். அவர் செய்த ஒரே பாவம், ஒன்றரை வயதுப் பேரனைப் பார்ப்பதற்குக் கண்டம் விட்டுக் கண்டம் பறந்து சென்றதுதான்.

அமெரிக்காவில் இந்திய மதுபானக் கடையில் இன்னொருவரை கொன்றே போட்டார்கள். கவனிக்கவும், இருவருமே பாரதப் பிரதமரின் மாநிலத்தைச் சார்ந்தவர்கள்.

இத்தனையும் சாதாரண அமெரிக்கர்கள் செய்தவை அல்ல, அமெரிக்க அரசின் இயந்திர நடவடிக்கைகள். இந்த லட்சணத்தில் இங்கு சில விசுவாசிகள் எதற்கு எடுத்தாலும் "அமெரிக்காவைப் பார், இங்கிலாந்தைப் பார்' என்று கூறுகிறார்கள்.

மக்களைக் கிளறி விடுவதோடு நின்றால் பரவாயில்லை. வெளிநாட்டில் இருந்து "சைபர்' நிபுணர்கள், போராடத் தூண்டும் அறிஞர்கள், நிதி வழங்கும் முகவர்கள் எனப் பலரையும் "சுற்றுலாப் பயணி' என்ற பெயரில் இங்கு சகட்டு மேனிக்கு அழைக்கிறார்களாம்.

இங்கு வருபவர்கள் போராட்டங்கள் நடத்தவும், கணினித் தரவுகளைக் களவாடவும் அரசு சாரா அமைப்புகளுக்கு கற்றுத்தருகிறார்களாம்.

இதுகுறித்து கேட்டால், "அரசு மட்டும் அன்னியர்களை இங்கு வரவழைக்கவில்லையா' என்று பிரியத்துடன் "பிள்ளை'தனமாகக் கேள்வி வேறு. ஜனநாயக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட அரசும், பணநாயக அமைப்பாளர்களின் அரசு சாரா நிறுவனங்களும் சரிநிகராம். எந்த அரசியல் சாசனம் சொல்லுகிறதோ?

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், கனடா, இந்தோனேசியா, பிரேசில் ஆகிய இத்தனைத் தனி நாடுகளும் நம் இந்திய ஜனத்தொகைக்குச் சமம்.

நாம் அமெரிக்கா ஆவதற்கு முதலில் செய்ய வேண்டியது, அமெரிக்க ஜனத்தொகை அளவுக்கு (32 கோடி) இங்கு மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும்.

அதற்காக, 94 கோடி இந்தியர்களை அரபிக் கடலிலோ, வங்காள விரிகுடாக் கடலிலோ மூழ்கடிக்க முடியுமா?

இல்லையென்றால், இங்கிலாந்து மாதிரி (6.5 கோடி) ஆக என்ன வழி? சமூக அக்கறை மிக்கவர்கள் இந்தியப் பரப்பளவை அமெரிக்கா மாதிரி ஆறு மடங்காக விரிவுபடுத்த அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கலாம் என்றும் சொல்வார்கள்.

அந்த நாடுகளில், அறைக்கு ஒருவர் வீதம் சௌகரியமாக வாழ்கிறார்கள். இந்தியாவில் அதே அளவு அறைக்குள் குறைந்தது 10 பேர் தங்குகிறார்கள்.

நம் நாட்டில் 36 கோடிப் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வதாக வைத்துக்கொண்டாலும், மீதி 90 கோடிப் பேர் சுகமாக இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்? இது அமெரிக்க ஜனத்தொகையைப் போல 3 மடங்கு சுபிட்ச நிலை அல்லவா?

ஆண்டுதோறும் "பசுமைக்குடில்' விளைவினால் புவிவெப்பம் அடையச் செய்கிற கரியமில வாயுவை, வளிமண்டலத்தில் கலக்கும் முதல் நாடு சீனா.

உலகின் மூன்றாம் பெரும்பரப்பில் (93 லட்சம் சதுர கிலோ மீட்டர்) தொழிற்சாலைப் புகை உடைய நாடு. 23,950 லட்சம் டன் மாசுகளைக் காற்றில் கலக்கிறார்கள்.

நம் நாட்டினும் மூன்று மடங்கு விரிந்த பரப்பு கொண்ட அமெரிக்கா உலகின் இரண்டாம் "புகை நாடு'. 14,030 லட்சம் டன் கரியமில வாயுவைக் காற்றில்

உமிழ்கிறது.

உலகின் மக்கள் தொகையில் 19 சதவீதம் பேர் வாழும் சீனாவும், 4.4 சதவீதம் கொண்ட அமெரிக்காவும் கூட்டாக வெளிப்படுத்தும் மொத்த அசுத்தக் கணக்கில் ஆறில் ஒரு பங்குதான் இந்தியக் கரியமில வாயு. வெறும் 5,960 லட்சம் டன். இத்தனைக்கும் உலகின் 17.5 சதவீத மக்கள் நாம் தான்.

பாருங்களேன், உலகின் முதல் பெரும்பரப்பும் (1.63 கோடி சதர கிலோ மீட்டர்), இந்தியாவின் பத்தில் ஒரு பங்கு (14.5 கோடி பேர்) ஜனங்களும் கொண்ட நெருக்கடி இல்லாத நாடு ரஷியா.

அவர்கள் தாங்களும் எவருக்கும் இளைத்தவர்கள் இல்லை என்று 4,490 லட்சம் டன்கள் "படிமைகுடில்' வாயுவை வளிமண்டலத்தில் செலுத்தி நான்காம் இடத்தைத் தக்கவைத்து கொண்டுள்ளனர்.

தெரியாமல்தான் கேட்கிறேன். இவ்விதம் அசுர வேகத்தில் உலகத்தையே பகாசுரக் கூவம் ஆக்கிவரும் "வளர்ந்த' நாடுகள் எல்லாமே புவியின் வடபாதிக் கோளத்தில் அல்லவா இருக்கின்றன?

அது எப்படி தென் துருவ அண்டார்டிகாவில் மட்டும் அதிகப்படியான ஓசோன் ஓட்டை? நம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எப்போதாவது அமெரிக்க, ஐரோப்பியப் நாடாளுமன்றத்தில் போய் கேட்டது உண்டா?

இந்த ஆண்டு ஆற்றல் வளம், கல்வி, வேளாண்மை, தகவல் தொடர்பு, சுகாதாரம் ஆகிய ஐந்து துறைகளில் அறிவியல் "ஒளிச்சேர்க்கை'யினால் மட்டுமே பயன்மரம் உள்ளூரில் பழுக்கும்.

கட்டுரையாளர்: இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com