தமிழகத்தைத் தலைகீழாகப் பெருவெள்ளம் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தபோது, தப்பிப்பதற்கு வழியாகச் சுந்தரர் தேவாரத்தைத் தேட நேர்ந்தது. பெய்யு மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்து (பாடல் 561) எனத் திருப்புன்கூர் வெள்ளத்தைத் தடுப்பதற்குச் சுந்தரர் பாடிய தேவாரம் கைகொடுத்தது. அவ்வாறே, வேறு யாராவது வெள்ளத்தைத் தவிர்ப்பதற்கு - தடுப்பதற்கு முயன்றிருக்கிறார்களா எனச் சிந்தித்தபோது, பாரசீக நாட்டுப் பெருங்கவிஞன் பிர்தெளசியின் அருமை மகள் தென்பட்டாள்.
பாரசீகத்தின் தேசியக் கவிஞனான பிர்தெளசி (கி.பி. 935 - 1020) ஈரானின் கடைக்கோடி நகரமாகிய தூஸ் நகரத்தில், ஒரு நிலக்கிழாரின் மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் அப்துல் காஸிம் ஹசன் அலி ஆகும். இவருடைய அசாத்தியமான - அபரிமிதமான கவித்துவத்தில் தன்னை மறந்த பேரரசன் சுல்தான் மகம்மது, அப்பெயரை நீக்கிவிட்டுப் பிர்தெளசி என்னும் பெயரைச் சூட்டினான். அதற்குப் பொருள் "சொர்க்கத்திலிருந்து வந்தவன்' என்பதாகும்.
மாணவப் பருவத்தில், விளையாட்டில் விருப்பம் மிகக் கொண்டிருந்த பிர்தெளசி நதிக்கரை ஓரத்தில் நாளும் விளையாடுவார். ஆனால், அந்நதியில் அடிக்கடி வெள்ளம் பெருக்கெடுத்து நகரத்தை அழித்து வந்தது. அந்நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த மேம்பாலத்தைத் தாண்டியும் வெள்ளம் பெருக்கெடுப்பதைக் கண்ட பிர்தெளசி, அந்நதியில் ஓர் அணையைக் கட்டுவதை வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு, "என் கவி வெள்ளத்தைப் பெருக்கெடுக்கச் செய்து, அதன் மூலம் வரும் வருவாயில் இந்நதியின் வெள்ளத்தைத் தடுப்பேன்' எனச் சூளுரைத்தார்.
அந்நேரத்தில், கஷானவைத் தலைநகராகக் கொண்டு கொரஸ்தானத்தை ஆண்ட பேரரசர் சுல்தான் முகம்மது, பாரசீகத்திற்கு ஓர் ஆதிகாவியம் படைக்க, பேராற்றல் படைத்த கவிச்சக்கரவர்த்தி ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தார். அவருடைய அரசவையிலேயே புகழ்பெற்ற அன்சாரி, ஆஷாதி, பரூக்கி ஆகிய முப்பெரும் அரசவைப் புலவர்கள் இருந்தபோதும், அவர்கள் ஒரு மகா காவியத்தை எழுதுவதற்குத் தகுதியானவர்கள் என்று அவர் நம்பவில்லை. அன்சாரி என்ற அரசவைக் கவிஞர், பிர்தெளசியைப் பற்றி வியந்துரைத்ததால், சுல்தானும் அவரை அழைத்தார்.
"பிர்தெளசி உன் பேராற்றலைக் கேள்விப்பட்டேன். பாரசீகத்தின் பெருங்காப்பியத்தை நீ பாட வேண்டும். பாரசீகத்து மன்னர் பரம்பரையின் மகத்துவத்தை எழுத வேண்டும். அதுவொரு வரலாற்றுக் காப்பியமாக இருக்க வேண்டும். நீவிர் எழுதும் ஒவ்வொரு ஈரடிப் பாவிற்கும் ஒரு தங்கக்காசு வழங்கப்படும். ஆயிரம் ஈரடிப் பாக்கள் எழுதி முடித்தவுடன், ஆயிரம் காசுகளை வழங்கி விடுவேன்' என்றார்.
அதற்குப் பிர்தெளசி "இடையிடையே வேண்டாம். காவியத்தை முடித்தவுடன் வழங்கினால் போதும்' என்றார். ஏனென்றால், வெள்ளத்தைத் தடுக்கும் பணிக்கு அது போக வேண்டும் என்பதால்தான். சுல்தான், பிர்தெளசி தங்குவதற்கு அரண்மனையிலேயே ஓர் ஆடம்பரமான அறையை ஒதுக்கினார். அந்த அறையில் போர்க்காலத்தில் பயன்படுத்திய ஆயுதங்கள் அடுக்கப்பட்டிருந்தன. அறையின் சுவர்களில் கற்பனைக்குத் தீனிபோடும் வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஆற்றங்கரையிலே பிறந்த பிர்தெளசி, 33 ஆண்டுகள் அரண்மனை வாழ்க்கை வாழ்ந்தார்.
முப்பத்து மூன்று ஆண்டுகள் எழுத்துத் தவம் பூண்டதில், ஷாஹ்நாமா எனும் பாரகாவியத்தைப் படைத்தார். ஷாஹ்நாமா என்றால், இராஜபாரம்பரிய வரலாறு என்று பொருள். அவருடைய கவித்துவத்தில், கல்லறைக்குள்ளிருந்த மகாமனிதர்கள் அனைவரும், மீண்டும் சிம்மாசனத்தில் வந்து அமர்ந்தார்கள். சொராஸ்டிர மதகுருமார்களின் வாய்மொழியாக இருந்த பாரசீகப் பாரம்பரியம், பிர்தெளசியின் ஓலைச்சுவடிகளில் தேசிய வரலாறு ஆயிற்று.
பஹ்லவி எனும் திருந்தாத மொழியிலும், சிறுசிறு கதைப்பொதி பாடல்களிலும் பதுங்கிக் கிடந்த பாரசீக மொழிக்குச் செம்மொழித் தகுதியைத் தேடித் தந்தார் அந்த மகாகவி. காலங்காலமாக மத்திய கிழக்கு நாடுகளில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த அரபு மொழியைச் சற்று விலகியிருக்கும்படிச் செய்தது, ஷாஹ்நாமா.
62 காதைகளில், 990 அத்தியாயங்களில், 60,000 ஈரடிப் பாக்களில், அந்த இதிகாசத்தைப் படைத்தார் பிர்தெளசி. படித்தவர்கள் அதனைப் பாரசீகத்தின் குரான் எனப் பாராட்டினர். ஹோமரின் இலியத் காப்பியத்தைப் போல் ஏழு மடங்கு பெரிய காப்பியம், ஷாஹ்நாமா.
என்றாலும், பிர்தெளசியின் வாழ்க்கையில், உச்சநிலைக் காட்சியில் ஏறுமுகத்திற்குப் பதிலாக இறங்குமுகமே தென்பட்டது. சுல்தான் மகம்மதுவிடம் 60,000 ஈரடிப்பாக்களை ஒப்படைத்தபோது, அவர் மகிழ்ந்துபோய் 60,000 தங்கக் காசுகளைத் தரத் தயாராக இருந்தார். ஆனால், அவரிடத்தில் நிதி அமைச்சர் என்ற பெயரில் இருந்த துர்மந்திரி, ஒரு முட்டுக்கட்டை போட்டார். இந்தத் திமிரி பிடித்த கவிஞனுக்கு என்ன தங்கக்காசுகள்? வெறும் 60,000 வெள்ளிக்காசுகள் அளித்தால் போதும் என்றார்.
புலமைக்காய்ச்சல் படைத்த அரசவைக் கவிஞர்களும் சுல்தான் மகம்மதுவுக்குத் தூபம் போட்டனர். அதனால், மன்னனும் கொடுத்த வாக்கை மறந்து, துறந்து, 60,000 வெள்ளிக்காசுகளைக் கொடுத்து அனுப்பினார்.
பிர்தெளசி மசூதியையடுத்த திருக்குளத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது அவரிடத்தில் சிப்பாய்கள் 60,000 வெள்ளிக்காசுகளைச் சேர்க்க வந்திருந்தனர். வெள்ளத்தைத் தடுக்க நினைத்திருந்த பிர்தெளசி, நேரடியாக ஒரு வெள்ளத்தில் மூழ்குவதுபோல் ஆகிவிட்டாரி. பக்கத்திலிருந்த மதுக்கடைக்குப்போய் ஒரு கோப்பை மது அருந்தினார். அந்த வெள்ளிக்காசுகளின் தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் குளத்துக் காவல்காரனிடம் ஒப்படைத்தார்.
இரண்டாவது மூன்றில் ஒரு பங்கை மதுச்சாலைக்காரனுக்கு வாரி வழங்கினார். மூன்றாவது மூன்றில் ஒரு பங்கை, அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் வாரி இறைத்துவிட்டு, மசூதிச் சுவற்றை நோக்கி ஓடினார்.
அறத்தை மறந்த அராஜகனின் ஆட்சி விரைவில் வீழட்டும் என்று அறம் வைத்துப்பாடி, அதனை அந்தச் சுவற்றிலும் எழுதிவிட்டுத், தாம் தங்கியிருந்த அரண்மனை அறையிலும் பொறித்துவிட்டுத் தலை மறைவு ஆனார் பிர்தெளசி. ஒரு பக்கீரைப்போலாகி, நாடுவிட்டு நாடு ஏகினார்.
கவிவேந்தனுடைய அவமரியாதையால் கடுங்கோபம் கொண்ட புவிவேந்தன், பிர்தெளசியின் தலைக்கு விலை வைத்தார். அதிகாரத்தின் கெடுபிடிகளுக்குப் பயந்த பிர்தெளசி, ஹீரத் நகரத்தில் ஆறு மாதம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அங்கிருந்து இடம்பெயர்ந்து பாக்தாத் மன்னரிடம் சரண் புகுந்தார். பாக்தாத் மன்னனுக்கும் பாரசீக மன்னனுக்கும் பரம்பரைப் பகைமை உண்டு. அங்கிருந்த நேரத்தில் மன்னர் சுல்தான்மீது சாபமிட்டு நூறு கவிதைகளைப் பாடினார். அந்தக் கவிதைகளின் மையப்பொருள் சுல்தானின் இரத்தம் சுத்தமில்லை என்பதாகும்.
கவிதை வருமாறு:
சுல்தானே ஷாஹ்நாமாவை எழுதி
முடிப்பதற்கு
அல்லும் பகலும் யான் பட்ட பாடுகளை ஏடறியும் எழுத்தறியும்
சொல்லிய வண்ணம் நீட்ட வேண்டிய வெகுமதி எங்கே?
சொல்லிய நாக்கு எங்கே? கொடுத்த வாக்கு எங்கே?
-என் கவிமாலையை அரச பரம்பரையில் வந்தவர் சூடியிருந்தால்
என் தலை அரச மகுடத்தால்
அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
உன்தாய் அரச பாரம்பரியத்தில்
வந்திருப்பாளானால்
என் கால்களில் வெள்ளியும் தங்கமும் குவிந்திருக்கும் என்றொரு நிந்தனைக் கவிதையினை எழுதி, அரண்மனைக் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த ஷாஹ்நாமாவின் முன்னுரையில் சேர்க்கும்படியாகச் செய்துவிட்டார் கவிஞர்.
வெள்ளம் தலைக்குமேல் போவதையுணர்ந்த பாக்தாத் மன்னர் 1000 திராம்களைக் கவிஞர் கையில் கொடுத்து, அரண்மனையை விட்டு அனுப்பிவிட்டார். பல ஊர்களில் பக்கீராகத் திரிந்து, கடைசியில் உருக்குலைந்த நிலையில் தூஸ் நகரத்திற்கே வந்து சேர்ந்தார், பிர்தெளசி.
இதற்கிடையில், ஆசியாக் கண்டம் மட்டுமன்றி, மேற்குக் கிழக்கு நாடுகளிலும் ஷாஹ்நாமாவின் செல்வாக்குக் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. பாரசீக மக்களுடைய நாக்குகள், ஒரு புறத்தில் ஷாஹ்நாமாவின் கவிதைகளை உச்சரித்தன. மறுபுறத்தில் மன்னனின் மமதையை எச்சரித்தன. கவிஞனின் சாபத்திற்கு உள்ளான மன்னர் சுல்தான், மக்களுடைய ஏளனத்திற்கும் உள்ளானதால், கவிஞருக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தயாரானார்.
சுல்தான் தான் பயணிக்கும் ஒட்டக வரிசைகளின்மீது 60,000 தங்கக் காசுகளையும், அரண்மனை சீர்வரிசையாகிய ஆடை, ஆபரணங்களையும், கவிஞருக்குப் பிடித்த வாசனைத் திரவியங்களையும் ஏற்றி, கவிஞர் வாழும் தூஸ் நகரத்திற்கு அனுப்பினார்.
தூஸ் நகரம், ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கின்றது. அது கொண்டை ஊசி வடிவத்தில் அமைந்த சிறு நகரம். சுல்தானுடைய சீர்வரிசைகள் ஒட்டகங்களின்மீதும், யானைகளின்மீதும் ஆரோகணித்துக் கொண்டை ஊசி வடிவில் அமைந்த நகரத்தின் ஒரு வாசல் வழியாக உள்ளே நுழைகின்றபோது, மறுவாசல் வழியாகப் பிர்தெளசியின் இறுதி ஊர்வலம் வெளிவந்து கொண்டிருந்தது.
இப்பொழுது தூஸ் நகரம் தண்ணீர் வெள்ளத்திற்குப் பதிலாகக் கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தது. தண்ணீர் வெள்ளத்தைத் தடுக்க நினைத்த கவிஞர், கண்ணீர் வெள்ளத்தில் கரைந்து போனார்.
பிர்தெளசிக்கு ஒரே மகள். அவளிடத்தில் சீர்வரிசைகளை அரண்மனைக் காவலர்கள் ஒப்படைக்க முயன்றனர். அவள், "என் தந்தை கைகளால் வாரி இறைத்த பணத்தை நான் கால்களால்கூடத் தீண்டமாட்டேன், எடுத்துக்கொண்டுப் போங்கள்' என்றாள்.
ஆத்திரத்தில் அப்படி அவள் பேசினாலும், அடுத்த நொடி தன் தந்தையின் இலட்சியம் அவளுக்கு நினைவு வந்தது. தன் தந்தையின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை எடுக்கத் தீர்மானித்து, சீர்வரிசைகளைப் பெற்றுக்கொண்டாள்.
தூஸ் நகரத்தை அடிக்கடி சீர்குலைத்த நதியில், ஒரு பேரணையையும், பெரும் பாலத்தையும் கட்டினாள். பக்கத்தில் வழிப்போக்கர் தங்கிச் செல்வதற்கு ஓர் ஒட்டகச்சாலையையும் கட்டினாள். தந்தை சொல் மிக்கதோர் மந்திரமில்லை என்பது, ஒரு பாரசீகப் பெண்வழியும் சாத்தியமாயிற்று; சத்தியமாயிற்று.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.