மக்களாட்சியில் ஆளுகை என்பது முழுவதும் அரசியல் கட்சிகள் கையில் இருப்பதாகவே கட்சிகளும் எண்ணுகின்றன, மக்களும் நம்புகின்றனர். எல்லாம் கட்சிமயமாக்கப்பட்டதன் விளைவு இன்று அனைத்துச் செயல்பாடுகளுக்கும் நாம் கட்சிச்சாயம் பூசிவிடுகின்றோம். அரசியல் கட்சிகளைத்தாண்டி பல நிறுவனங்களில், அமைப்புகளில் அரசியல் செயல்பாடுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
அரசியல் கட்சிகளின் இடத்தை வேறு நிறுவனங்களால் பிடிக்க முடியவில்லை. அரசியல் கட்சிகளும் கட்சிக்காரர்களைத் தாண்டி எந்தப் செயல்பாட்டிற்கும், பதவிக்கும் ஆற்றல்மிக்க சமூக ஆர்வலர்களை ஏன் தேடுவதில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது. அப்படியே தேடினாலும் அது எப்போதாவது ஒரு முறை நடக்கும் நிகழ்வாகவே இருக்கிறது.
அப்படிக் கொண்டுவரப்பட்டவர்தான் மன்மோகன் சிங். அவரைக் கொண்டு வந்தவர் நரசிம்மராவ். அதேபோல்தான் அப்துல் கலாம் கொண்டுவரப்பட்டார். இவரைக் கொண்டுவந்தவர் வாஜ்பாய். இதற்கு முன்னால், இந்தியாவில் தகவல் தொலைத்தொடர்பை வலுப்படுத்த அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்த சாம் பித்ரோடாவை ராஜீவ் காந்தி அழைத்து வந்ததையும் கூறலாம். காங்கிரஸ் கட்சியால் சமீபத்தில் அழைத்து வரப்பட்டவர் நந்தன் நிலேகனி. இவ்வளவு பெரிய நாட்டில் சமூக ஆர்வலர்களுக்குப் பஞ்சமே இல்லை. இருந்தும் நம் அரசியல் கட்சிகள் அவர்களை பயன்படுத்திப் புதிய வழித்தடத்தில் அரசியலைக் கொண்டு செல்ல எந்தவித முயற்சியும் எடுப்பதில்லை.
நான் ஒரு முறை கனடா நாட்டிற்கு ஆராய்ச்சி செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு மிகவும் பின் தங்கிய கிராமப்புறங்கள் அடங்கிய ஒரு பகுதிக்குச் செல்ல வேண்டும் என என்னை அழைத்த நிறுவனத்திடம் கூறினேன். அவர்கள் லெத்பிரிட்ஜ் என்ற இடத்தை தேர்வு செய்து, லெத்பிரிட்ஜ் என்ற பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தனர். நான் அங்கு தங்கி இருந்தபோது ஒரு நாள் அந்த ஊரில் நகரசபைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் கூட்ட நடவடிக்கைகளை அப்படியே தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்.
அந்த விவாதத்தை லெத்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பல மாணவர்களும் சில ஆசிரியர்களும் மாணவர்களுக்கான செயல்பாட்டு மையத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து அமைதியாக ஆழ்ந்த சிந்தனையோடு பார்த்துக்கொண்டிருந்தனர். அங்கு இருந்தவர்கள் அதைப் பார்த்துகொண்டு மட்டும் இருக்கவில்லை, அந்த விவாதம் பற்றி மாணவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த நகரசபைக் கூட்டம் மாலை மணி 6 வரை சென்றது. அன்று அந்த நகரசபை லெத்பிரிட்ஜ் நகர விரிவாக்கம் குறித்து விவாதம் செய்தது. அங்கு கூச்சலோ, குழப்பமோ, ஆர்ப்பரிப்போ, ஆரவாரமோ, புகழாரமோ இல்லை. அறிவார்ந்த வாதம் மட்டுமே நடந்தேறியது. அந்த விவாதம் முடிந்தவுடன் மாணவர் சங்கத்தலைவர் தலைமையில் அந்த நகரசபை விவாதம் பற்றி கலந்து பேசி மாணவர்கள் அந்த மன்றத்திற்கு அனுப்பி வைக்க ஒரு அறிக்கை தயார் செய்தார்கள். நகரசபைக் கூட்டத்தில் பங்கேற்பவர்களும்சரி, பார்வையாளர்களும் சரி அனைவருமே ஒரு உயர்ந்த நிலையில் அதாவது ஒரு பக்குவமான நிலையில் இருந்து செயல்படுவதை புரிந்துகொள்ள முடிந்தது.
அதைப் பார்த்து அந்த விவாதத்தையும், விவாதத்திற்குப் பதிலளித்த நகர மேயரின் திறமையையும் உணர்ந்தபோது அவரைப் பார்க்க வேண்டும், அங்கு உள்ளாட்சியின் செயல்பாடுகளைப் பற்றி கேட்க வேண்டும் என்று தோன்றியது.
மறுநாள் நான் சென்று அவருடைய அறையில் சந்தித்தபோது அவர் தன்னை என்னிடம் அறிமுகம் செய்துகொண்ட விதமே என்னை வியக்க வைத்தது. நான் ஒரு பொருளாதாரப் பேராசிரியர் என்றார். இந்தப் பதவிக்கு எப்படி நீங்கள் வந்தீர்கள் என்று கேட்டேன். நான் உள்ளாட்சி பற்றி அதுவும் உள்ளாட்சியின் பொருளாதாரம் பற்றி ஆராய்ச்சி செய்து அடிக்கடி கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன். சென்ற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது, அந்தத் தேர்தலில் நீங்கள் ஏன் நிற்கக்கூடாது என ஒரு அரசியல் கட்சித்தலைவர் என்னிடம் கேட்டார். மக்களுக்குத் தொண்டு செய்ய இது ஒரு வாய்ப்பு என எண்ணி சம்மதித்தேன். நான் பணியாற்றிவந்த உயர்கல்வி நிறுவனத்திற்கு விடுப்பு வேண்டி விண்ணப்பித்து, விடுப்பு பெற்று தேர்தலில் போட்டியிட்டு வென்றேன் என்றார்.
இது ஒரு சாதனைதான் என்றேன். உடனே அவர் இது ஒரு சாதனையும் இல்லை, புதுமையும் இல்லை. எனக்கு முன் இதுபோல் இந்தப் பதவியில் ஆசிரியர்கள் இருந்துள்ளனர். தற்போதும் பல இடங்களில் என் போன்றோர் பலர் பதவிகளில் இருக்கின்றனர். பல துறைகளிலிருந்தும் இப்படி இதுபோன்ற பதவிகளுக்கு வந்து பணியாற்றிவிட்டுச் செல்வது இங்கு வழக்கமாக உள்ளது என்று கூறினார்.
தற்போது இந்த நகரத்தை விரிவாக்கம் செய்வது பற்றிய விவாதத்தை எடுத்துச் செல்கிறேன். தற்போது நடக்கும் விவாதம் அறிஞர்கள் தயாரித்த விரிவாக்கத் திட்டத்தை இந்த நகர மக்களுடன் பகிர்ந்து கொண்டு, மக்களின் கருத்தைப் பெற்று நகர் மன்றத்தில் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்து இதற்கான முடிவுகளை எடுத்து நிறைவேற்ற உள்ளோம். இது ஒரு மாபெரும் பணி, இதனை என் காலத்தில் நிறைவேற்றி முடித்துவிட்டால் அதுதான் என் வாழ்நாள் சாதனை என்று பெருமையுடன் சொன்னார்.
இந்தப் பணி முடிந்தவுடன் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். என் விடுப்பும் முடிந்துவிடும், உடனே என் ஆசிரியர் தொழிலுக்குச் சென்றுவிடுவேன் என்றார்.
அதன் பின் உள்ளாட்சிகளின் செயல்பாடுகள் பற்றி மிக விரிவான ஒரு உரையாடலை அவருடன் நடத்திவிட்டு வந்தேன். மறுநாள் அதே பொருளாதாரத் துறையின் இன்னொரு பேராசிரியரிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன். இவரால் அந்தக் கட்சிக்கு என்ன நன்மை என்பதுதான் அந்தக் கேள்வி.
"இவர் ஆற்றுகின்ற பணி மூலம் மிகப்பெரிய மக்கள் ஆதரவு அந்தக் கட்சிக்கு கிடைக்கப்போகிறது. இவரின் அறிவால், திறமையால் விரிவாகப் போகிற நகரம் ஒரு மிகப் பெரிய மூலதனமாக இந்தக் கட்சிக்கு கிடைக்கப் போகிறது. அந்த அரசியல் கட்சியின் செல்வாக்கு இதனால் பல மடங்கு அதிகரிக்கும்' என்றார் அவர். அவர்கள் எவ்வளவு ஆக்கபூர்வமாக சிந்திக்கிறார்கள் என்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது.
இதை நான் நம் நாட்டில் நடக்கும் நிகழ்வுடன் பொருத்திப் பார்த்தால் வேதனைதான் மேலிடுகிறது. இதுபோல, பேராசிரியர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், அதிகாரிகள் என்று பலரும் அரசியலுக்கு வராமல் இல்லை. ஆனால், அவர்கள் அரசியலில் நுழைந்துவிட்டால், சராசரி அரசியல்வாதியை விட மோசமான அரசியல்வாதியாக மாறிவிடுகிறார்கள். அவர்களில் யாருமே பதவிக்காலம் முடிந்த பிறகு மீண்டும் தத்தம் தொழிலுக்குத் திரும்பியதில்லை. இவர்களால் கட்சிக்குப் பெருமை என்பதைவிட சிறுமைதான் சேர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் சமீபத்தில் தமிழகத்தில் ஒரு வித்தியாசமான முயற்சி நடந்தது. அந்த முயற்சிக்கு வெற்றி பெறவில்லை. முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்திதேவியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்றத் தேர்தலிலே நிற்க வைத்தது. அந்தப் பரிசோதனையை சென்னை மாநகரத் தேர்தலில் எங்காவது நிற்க வைத்து அவரை வெற்றிபெற வைத்திருக்க வேண்டும். அப்படி அவர் நிற்க வைக்கப்படுவாரேயானால் அவரது வெற்றி வாய்ப்பு மிக அதிகம். அவர் வெற்றி பெற்றால், மாநகரில் உள்ள அத்தனை மாநகராட்சிப் பள்ளிகளும், மாநகராட்சிக்கு கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி தரமான கல்வியை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்குத் தந்திட பணிசெய்து மிகப்பெரிய சாதனையைச் செய்து புதிய வரலாற்றை உருவாக்குவார்.
சமூக சிந்தனையாளர்கள் சிலர் அரசியல் கட்சிகளில் இணைந்து சட்டப்பேரவை, நாடாளுமன்றத்திற்கு செல்கின்றார்கள். அவர்கள் அனைவரும் சமூகச் சிந்தனையாளர்களோ அல்லது செயல்பாட்டாளர்களோ அல்ல. பதவிக்காகக் கட்சியை நாடுபவர்கள். கட்சிகள் சமூகச் செயல்பாட்டாளர்களை அரவணைக்க வேண்டும் பொதுச் செயல்பாடுகளுக்கு. அப்துல் கலாம் பாரதீய ஜனதாக் கட்சியை நாடி நிற்கவில்லை. மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சியை நாடி நிற்கவில்லை, அவர்களின் திறமைக்காகக் கட்சிகள் அழைத்தன. அப்படி ஏன் உள்ளாட்சிக்கு சமூகச் செயல்பாட்டாளர்களை கட்சிகள் அழைக்கக்கூடாது என்பதுதான் கேள்வி.
அரசியல் என்பது, தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவியைப் பிடிப்பதும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டும்தான் என்கிற சிந்தனை இந்திய அரசியலில் புரையோடிப் போய்விட்டிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகள் மாநில ஆளுங்கட்சியைச் சார்ந்துதான் செயல்பட்டாக வேண்டும் என்கிற நிர்பந்தம், பஞ்சாயத்துச் சட்டம் வந்த பிறகும்கூட தொடர்கிறது என்பதுதான் உண்மைநிலைமை.
சமூக சிந்தனையாளர்களை, துறை சார்ந்த நிபுணர்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களாக நிறுத்தி, அவற்றை பலப்படுத்துவதன் மூலம் கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்த முடியும் என்பதை நமது அரசியல் கட்சிகள் புரிந்துகொண்டால், இந்தியாவின் தலையெழுத்தையே புரட்டிப் போட்டுவிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.