தைப் பொங்கல் திருநாளில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தொடங்கிய ஜல்லிக்கட்டு, கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பல்வேறு கிராமங்களில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. பாரம்பரிய ஜல்லிக்கட்டு கிராமங்களில் மட்டுமின்றி இந்த ஆண்டு முதன் முறையாக ஜல்லிக்கட்டை நடத்திய கோவை உள்ளிட்ட இடங்களிலும் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. இடையில் ஏற்பட்ட தடை நீங்கிய பிறகு கடந்த ஆண்டு காலதாமதமாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஆண்டு வழக்கமான குறிப்பிட்ட நாள்களில் ஜல்லிக்கட்டு நடந்தேறியது கிராம மக்களிடையே ஆண்டாண்டு காலமாக நிலவி வரும் 'வளமான வாழ்வு'க்கான நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 13 முதல் 31-ஆம் தேதி வரையில் 84 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நாள்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆறேழு பேர் வரை இறந்துள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டுமே மாடுபிடி வீரர் ஆவார். மற்ற அனைவரும் பார்வையாளர்கள். உயிரிழப்பினால் ஜல்லிக்கட்டுக்கு எதிராக சிலர் எதிர்மறை பிரசாரத்தை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். ஆனால், உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட தேசிய விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அண்மையில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஜல்லிக்கட்டை நடத்த தனியார் செல்லிடப்பேசி நிறுவனம் ஒன்று முன்முயற்சி மேற்கொண்டது. தென்காசியில் ஜல்லிக்கட்டு காளைகளும் கிடையாது, மாடுபிடி வீரர்களும் கிடையாது. அப்படி இருக்க அங்கே ஜல்லிக்கட்டை நடத்த காரணம் என்ன? என்பது புரியாத புதிராக உள்ளது. காளைகளையும், வீரர்களையும் 'இறக்குமதி' செய்து போட்டியை நடத்தப் போவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
போட்டி ஏற்பாட்டாளர்களின் நோக்கத்தில் சந்தேகமடைந்த அங்குள்ள ஜல்லிக்கட்டுக்கான தடையை எதிர்த்து போராடிய இளைஞர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இங்கு ஜல்லிக்கட்டை நடத்த தேர்வு செய்யப்பட்டிருந்த இடம் குறுகலானது என்றும், அங்கு நடத்தினால் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பாதுகாப்பு கிடையாது என்பதும் உள்ளூர் மக்களின் கருத்து. பிரச்னை நீதிமன்றம் வரை சென்றுள்ளதால் இப்போது ஜல்லிக்கட்டு நடைபெறாது என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டை தடை செய்ய நேரிடையாக போராடிப் பார்த்து தோல்வி கண்டவர்கள் இப்போது மறைமுகமான வழியை கையாளுகிறார்களோ என்ற ஐயம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. சிக்கலான இடத்தில் ஜல்லிக்கட்டை நடத்தி அதனால் ஏற்படும் விபரீதங்களை சுட்டிக்காட்டி தடை கோர மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
எனவே, இதுபோன்று தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ நடத்தும் ஜல்லிக்கட்டுகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டியது அவசியம்.
கிரிக்கெட் விளையாட்டில் வர்த்தக நிறுவனங்கள் தலையிட்ட பின்பு அதன் பண்பு, நேர்மை, கண்ணியம் எல்லாம் பறந்து போயிற்று.
விளையாட்டு வீரர்களை உயிரற்ற சந்தைப் பொருளைப் போல கோடிகள் கொடுத்து விலை கொடுத்து வாங்கி விளையாட வைக்கும் அவலம் அரங்கேறி வருகிறது. வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி ரசிகர்களும் அவர்களுக்கு தெரியாமலேயே விலை பேசப்படுகிறார்கள். 'விளையாட்டுக்கு ஊக்கம் அளிப்பு' என்ற பெயரில் நடைபெறும் இந்த வர்த்தகத்தை தடுத்து நிறுத்த யாருக்கும் திராணியில்லை.
பொதுமக்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் கொண்டாட்டங்களில்தான் வர்த்தக நிறுவனங்களின் கவனம் பதியும். அந்த வகையில் தமிழ்நாட்டில் இப்போது இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களிடமும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது ஜல்லிக்கட்டு. எதிர்காலத்தில் இந்த ஜல்லிக்கட்டையும் வர்த்தகமாக்கும் முயற்சிகள் நடைபெறலாம்.
அப்போது, ஜல்லிக்கட்டு காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் விலை கொடுத்து வாங்கி ஒரு வர்த்தகமயமான ஜல்லிக்கட்டை நடத்த பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்வரக் கூடும்.
அப்போது, கிரிக்கெட்டில் புரளும் கோடிகள் புரளுகிறதோ இல்லையோ, புகார்கள் கிளம்பும். அசிங்கங்களும் அரங்கேறும். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு என்ற நிலை மாறி அதுவும் விற்பனைக்கு உகந்த சந்தைப் பொருளாகிவிடும்.
எனவே, ஜல்லிக்கட்டுக்கான தடையை தகர்க்க காட்டிய அதே வீரத்தையும், தீரத்தையும் அதன் பாரம்பரியத்தைத் தொடர்ந்து காப்பதிலும் இளைஞர்கள் மட்டுமின்றி அனைவரும் காட்ட வேண்டியது அவசியம். அப்போதுதான் ஜல்லிக்கட்டை என்றென்றும் கொண்டாட முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.