ஜனநாயக விரோதம்

இந்தியாவை வீட்டோ பவருடன் கூடிய ஆறாவது நாடாக ஐ.நா. சபை அங்கீகரிக்க, இந்தியா நிர்ப்பந்தம் செய்யும் நேரம் இது.  நிரந்தரமில்லாத பாதுகாப்பு கவுன்சிலில் தேர்வாவது தற்போதைய இந்திய வளர்ச்சிக்குப் பெருமையைத் த

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, ஓர் உலகளாவிய யுத்தம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஐ.நா. சபை உருவாக்கப்பட்டது.  ஆனால், ஐ.நா சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமாக இருக்கும் நாடுகள் மேற்கொள்ளும் முடிவுகளை உலகில் உள்ள சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். வியத்நாம் மீதும், ஈராக் மீதும், ஆப்கானிஸ்தான் மீதும் அமெரிக்கா போர் தொடுத்தபோது ஐ.நா. சபையால் தடுக்க முடியவில்லை.  

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலில் பின்லேடனின் அல்கொய்தா இயக்கம்தான் பொறுப்பு என்கிற முறையில், பாகிஸ்தானில் தங்கியிருக்கும் பின்லேடனை அமெரிக்க அதிரடிப் படைகள் கண்டுபிடித்து அதிகாலை வேளையில் தாக்குதல் நடத்தி பின்லேடனை சுட்டுக் கொல்லும் காட்சியை சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்தின.  

இந்தியாவில் மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருக்கிறார் என அமெரிக்காவிடம் ஆதாரபூர்வமாக எடுத்துச் சொல்லியும், பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்கிற அறிவுரையை அமெரிக்கா அளித்தது.  அதாவது, பயங்கரவாத தாக்குதல் அமெரிக்காவில் நடைபெற்றால்தான், சர்வதேச பயங்கரவாதம் என்று பெயர்பெறும். மற்ற நாடுகளில் நடைபெற்றால் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், வேண்டுமானால் தான் நடுவராகச் செயல்படுகிறேன் என்றும் அமெரிக்கா சொல்லும். இதுதான் அதன் நியதி.

அமெரிக்காவின் நியூயார்க்கில்தான் இன்றைய ஐ.நா. சபை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.  193 நாடுகள் இதில்  உறுப்பினர்களாக இருக்கின்றன. ஒவ்வொரு நாடும் தங்களின் பிரதிநிதிகளாக ஐந்து பேரை இந்த அவைக்கு அனுப்பி வைக்கலாம்.  அதாவது, உலகின் மிகச் சிறிய நாடான துனிஷியாவும், உலகில் மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவும் ஒரே மாதிரியான எண்ணிக்கையில்தான் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும்.  

ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமான முறையில் உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து நாடுகள் சிறப்பு அதிகாரத்துடன்  (வீட்டோ பவர்) வீற்றிருக்கின்றன. ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் எல்லாமே மேற்சொன்ன வீட்டோ பவர் கொண்ட நாடுகளை வலுவான முறையில் எதிர்க்க முடியாது. ஏனெனில், ஒரு நாடு ஐ. நா. சபையில் தீர்மானம் முன்மொழிந்தால், இந்த வீட்டோ பவர் கொண்ட நாடு ஒன்று ஆட்சேபனை செய்து எதிர்ப்பு தெரிவித்தால் தீர்மானம் தோல்வி அடையும். தீர்மானத்தின் மீது பெரும்பான்மை கணக்கெல்லாம் கிடையாது.

இந்த ஐந்து நாடுகளுடன்  நிரந்தரமில்லாத நாடுகள் என இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஐந்து நாடுகள் தேர்வு செய்யப்படும்.  இரண்டாண்டு வரையில் இந்த நாடுகள் நிரந்தரமில்லாத உறுப்பினராக பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கலாம்.  ஏற்கெனவே 1950, 1967, 1972, 1977, 1984, 1992, 2010 ஆகிய காலகட்டங்களில் இந்தியா இதுபோன்ற நிரந்தரமில்லாத பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ளது.  

1996-ஆம் ஆண்டில் இந்திய அரசியலில் ஏற்பட்ட நிரந்தரமின்மை, பொருளாதார பின்னடைவுகளின் காரணமாக, இந்தியா நிரந்தரமில்லாத பாதுகாப்பு கவுன்சிலுக்கு போட்டியிட்டபோது, 42 நாடுகள்தான் ஆதரித்தன.  அதனால், இந்தியா தோல்வியைச் சந்தித்தது.  அதன் பிறகு 2010-ஆம் ஆண்டில் போட்டியிட்ட போது 192 நாடுகளில் 187 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்தன.  

இந்தியாவின் இந்த செல்வாக்கை உணர்ந்த அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா, வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தரமான முறையில் பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து நாடுகளுடன் ஆறாவது நாடாக இந்தியாவைச் சேர்க்க வேண்டிய காலம் நெருங்கி வருகிறது என்று இந்திய சுற்றுப் பயணத்தின்போது குறிப்பிட்டிருந்தார்.  

ஏனெனில்,அன்றைய சூழலில் அமரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் தாக்கம் உலக நாடுகளை பெருமளவில் பாதித்தது.  ஆனால், இந்தியாவில் எவ்விதப் பொருளாதாரச்  சரிவும் ஏற்படவில்லை.  அன்றைய நிலையில் நமது  ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடையவில்லை.

இயற்கையிலேயே சேமிக்கும் பழக்கம் உள்ள மக்கள் நிறைந்த நாடு இந்தியா என்பதால், இந்த பொருளாதாரச் சுனாமியில் இருந்து தப்பியது என்றெல்லாம் உலக அளவில் புகழப்பட்டது.  ஆனாலும், ஐ.நா. சபையின் நிரந்தர பாதுகாப்பு உறுப்பினராக இந்தியாவால் இடம்பெற முடியவில்லை.

தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், நம் இந்தியப் பிரதமர் மோடியை நல்ல நண்பர் என்கிறார். இந்தியாவை ஜி 7 என்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிறார். இருந்தாலும், ஐ.நா. சபையில் ஆளுமையுடன் இந்தியா வந்துவிடக் கூடாது என்பதில் கவனமுடன் இருக்கிறார்.

உலக அளவில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பரவிய இன்றைய சூழலில், இந்தியாவில் இருந்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து வேண்டும் என்று வல்லரசுகளாக இருக்கும் அமெரிக்க, பிரன்ஸ் உள்ளிட்ட நாடுகள் கையேந்தி நின்ற காட்சிகள் மறப்பதற்கில்லை. இருந்தபோதும், வீட்டோ பவருடன் கூடிய 6-ஆவது நாடாக இந்தியா சேர்க்கப்படாமல் இருப்பது உலகளாவிய ஜனநாயக விரோதம் எனலாம்.  அமெரிக்க அதிபர் நிக்சன் காலத்தில் தைவான் குடியரசுக்கான அமெரிக்க ஆதரவு விலக்கப்பட்ட பிறகு, 1971-ஆம் ஆண்டில்தான் வீட்டோ பவருடன் கூடிய ஐந்தாவது நாடாக ஐ.நா. சபையால் சீனா  அங்கீகரிக்கப்பட்டது.

அந்த வகையில் சீனாவுக்கு நிகரான சந்தைப் பொருளாதாரம், மனித வளத்தினைக் கணக்கில் கொண்டு இந்தியாவை வீட்டோ பவருடன் கூடிய ஆறாவது நாடாக ஐ.நா. சபை அங்கீகரிக்க, இந்தியா நிர்ப்பந்தம் செய்யும் நேரம் இது.  நிரந்தரமில்லாத பாதுகாப்பு கவுன்சிலில் தேர்வாவது தற்போதைய இந்திய வளர்ச்சிக்குப் பெருமையைத் தராது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com