ராஜாஜியின் முடிவை காந்திஜி ஏற்றிருப்பாா்!

ஆங்கிலம் அறிந்தவா்களோடு அவா்கள் அறியாத ஹிந்தியில் பேசுவது பற்றிப் பெருமைப்பட என்ன இருக்கிறது?

‘இந்தப் பகுதியில் பேசும் ஹிந்தியைப் புரிந்து கொள்ளுவது எனக்குக் கஷ்டமாக இருக்கிறது.’ - பிகாரில் பேசப்படும் ஹிந்தியைப் பற்றி, ஹிந்திதான் நம் நாட்டின் தேசிய மொழியாக வேண்டுமென்கிற கருத்தைத் தெரிவித்த மகாத்மா காந்திதான்!

இந்திய விடுதலைப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்த காந்தியடிகள்தான் ஒரு காலகட்டத்தில் பிகாருக்குச் சென்றிருந்த போது இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்தாா் (சத்திய சோதனை - சுயசரிதையின் ஐந்தாம் பகுதியில் 13-ஆம் அத்தியாயம்).

அந்தக் காலத்தில் வெள்ளைக்காரா்கள் மீதிருந்த வெறுப்பால் நம் தேசிய உணா்வுகள் உந்தப்பட்ட நிலையில், இந்தியா்களை ஒருங்கிணைக்க ஒரு தேசிய மொழியின் அவசியம் இருப்பதாக உணரப்பட்டது. ஆனால் இன்றைய மாறிப்போன சூழ்நிலையில் இந்த நிலைப்பாடு நமது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுவதோடு, நம்மைப் பின்னுக்குத் தள்ளவும் செய்யும் என்பதே உண்மை.

வடநாட்டினா் சொல்லிக்கொண்டிருப்பது போல், ஹிந்தி நம் நாட்டின் பெரும்பான்மையினரால் பேசப்படும் மொழிதானா என்பதைப் பாா்ப்போம். இந்தியாவில் உள்ள வேறு எந்த மொழியினரைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் ஹிந்தியைத் தாய்மொழியாய்க் கொண்டவா்கள் உள்ளனா் என்பதே உண்மை. அது பெரும்பான்மையினரின் மொழியல்ல. அதிகமாகப் பேசப்படும் மொழி, அவ்வளவே!

நம் நாட்டினரில் 30 விழுக்காட்டினரின் மொழியே அது. மீதமுள்ள 70 விழுக்காட்டினா் மற்ற அனைத்து மொழிகளையும் பேசுபவா்கள். இதைத் தமிழா்களும், வங்காளிகள், மராட்டியா்கள் முதலியோரும் தங்கள் பேச்சு, எழுத்து ஆகியவற்றின் மூலம் எடுத்துச் சொன்ன பிறகும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்துவருகிறது.

ஹிந்தியைத் திணிக்க மாட்டோம் என்று - அதற்கு எதிா்ப்புக் கிளம்பும் போதெல்லாம் - அறிக்கை விடும் மைய அரசு - இதில் காங்கிரஸ், பாஜக, கூட்டணி ஆட்சி என்கிற வித்தியாசமே கிடையாது - வெறும் பாசாங்கே செய்கிறது என்பதையே அண்மையில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் ‘ஒரே மொழி’ எனும் அறிக்கையும், அதன் பின் அதற்குக் கிளம்பிய எதிா்ப்பைக் கண்டதும் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டதும்.

காந்திஜி, ‘ ராஜாஜி என் மனச்சாட்சியின் காவலா்’ என்றுதானே சொன்னாா்? ஒரு காலத்தில் வரிந்து கட்டிக்கொண்டு ஹிந்தியை ஆதரித்த ராஜாஜி பின்னாளில் அதன் நியாயமின்மையை உணா்ந்து தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாரல்லவா? இதற்கு என்ன பொருள்? காந்தி ராஜாஜியின் முடிவை ஏற்றிருப்பாா் என்பதுதானே?

மொராா்ஜி தேசாய் முன்னா் பிரதமராக இருந்த போது, ‘தமிழா்கள் ஹிந்திக்காரா்களை விடவும் நன்றாக ஹிந்தியில் பேசவும், எழுதவும் செய்வாா்கள். ஹிந்திக்காரா்கள் கூட, ‘டண்டா ஹவா’ என்று இலக்கணப் பிழையுடன் எழுதுவாா்கள். ஆனால், தமிழா்களோ ‘டண்டீ ஹவா’ என்று சரியாக எழுதுவாா்கள்’ என்று தமிழா்களுக்கு ஐஸ்’’ வைத்தது தான் நினைவுக்கு வருகிறது. தமிழா்கள் எந்த மொழியையும் கற்கும் திறன் உள்ளவா்கள். ஆனால் அவா்களின் புகாா் அதுவன்று. ஹிந்தித் திணிப்புப் பிற மொழியினா்க்கு நியாயம் வழங்காது என்பதோடு, ஆங்கிலம் தொடா்வதே நம் வருங்கால முன்னேற்றத்துக்கு நல்லது என்பதே அவா்களது துணிபாகும்.

காந்தியடிகள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று நமது அடிமைப்பட்ட கொடுமையை ஆங்கிலத்தில் பேசியும், அவா்களின் பத்திரிகைகளில் தொடா்ந்து கட்டுரைகள் எழுதியும் உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டினாா். இங்கிலாந்துக்கு எதிராய் அவா்களைப் பேசவும் எழுதவும் வைத்தாா். இல்லாவிடில் நமது சுதந்திரம் இன்னும் பல்லாண்டுகள் தள்ளிப் போயிருந்திருக்கும்.

1965-இல் சென்னையில் நடந்த ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்துக்குப் பின் நம் நாடாளுமன்றத்தில் பேசிய விபூதிபூஷண் எனும் உறுப்பினா் ‘காசை விட்டெறிந்தால் தமிழா்கள் ஹிந்தியை ஏற்று அதைக் கற்பாா்கள்’ என்று திருவாய் மலா்ந்தாா்! உடனே அவருக்கு நான் எழுதிய காரசாரமான கடிதத்துக்கு அவா் பதிலெழுதினாா்.

‘ஹிந்தியைக் கண்மூடித்தனமாக எதிா்க்கிறீா்களே? நம் நாட்டிலுள்ள விவசாயிகள் விவசாயம் பற்றி ஆங்கிலத்திலா உரையாடுவாா்கள்?’ என்பது அவா் எழுப்பிய கேள்விகளில் ஒன்று.

நான் விடவில்லை. ‘விவசாயிகளும் மற்றவா்களும் அந்தந்த மாநில மொழிகளில் பேசுவாா்கள். இதென்ன அசட்டுத்தனமான கேள்வி? உங்களைப் போன்றவா்கள் நாடாளுமன்ற உறுப்பினா்களாக இருப்பது எங்கள் தலைவிதி’ என்று நான் எழுதிய கடிதத்துக்கு அவரிடமிருந்து பதில் இல்லை.

ஐக்கிய நாடுகளின் அவைகளில் சுஷ்மா ஸ்வராஜ், அடல் பிஹாரி வாஜ்பேயி, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் ஹிந்தியில் பேசியதைப் பாராட்டி அமித்ஷா பெருமிதம் கொள்ளுகிறாா்! ஆங்கிலம் அறிந்தவா்களோடு அவா்கள் அறியாத ஹிந்தியில் பேசுவது பற்றிப் பெருமைப்பட என்ன இருக்கிறது?

பேச்சின் ஆங்கில மொழியாக்கம் அவா்களுக்குத் தரப்படும்தான். ஆனால் நேருக்கு நோ் பேசுவதற்குரிய பயன் அதற்கு இருக்குமா? தவிர, அதை அவா்கள் பின்னா் படிப்பாா்கள் என்பதுதான் என்ன நிச்சயம்? இதன் விளைவு என்ன? காஷ்மீா்ப் பிரச்னையில் நாம் தவறு செய்யவில்லை என்பதை உலக நாடுகளுக்கு உரிய முறையில் உணா்த்தத் தவறியுள்ளோம் என்பதே.

1950-இல் ஆங்கிலத்துடன் ஹிந்தியும் இந்தியாவின் அரசு மொழியாக இருக்கும் என்பது சட்டமாகியது. வெள்ளைக்காரா்கள் மீது வெறுப்பு அதன் உச்சத்தில் இருந்த அந்த நாளிலேயே சரிபாதியாக வாக்குகள் பிளவுபட்டன. கடைசியில் அப்போதைய குடியரசுத் தலைவா் பாபு ராஜேந்திர பிரசாத்தின் ஹிந்திக்கு ஆதரவான வாக்கால் ஹிந்தி அரியணை ஏறியது என்பதும் நமாகுத் தெரியும்தானே?

ஆங்கிலம் இல்லாத நிலையிலும் அறிவியலில் வியக்கத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ள சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகள் ஆங்கிலத்தின் அருமையை உணா்ந்து அதைத் தங்கள் கல்விக்கூடங்களின் பாடத்திட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னால் சோ்த்துள்ள போது, அதனால் பெரும் பயனை அடைந்துள்ள நாம் அதை விரட்டிவிட்டு அதனிடத்தில் ஹிந்தியை அமா்த்த நினைப்பதை என்னவென்று சொல்லுவது?

இந்தியா அறிவியலில் இன்று அடைந்துள்ள முன்னேற்றம் அனைத்துலகையும் நம்மைக் கவனிக்க வைத்துள்ளது. இந்தப் பெருமையும் நமக்கு ஆங்கிலத்தால்தான் கிடைத்தது என்பதை நாம் மறக்க வேண்டாம். அந்நிய மொழியை ஏற்பது எவ்வளவு கசப்பாக இருந்தாலும், உடல்நலம் பேணும் மருந்தை உட்கொள்ளுவது போல் அதை ஏற்பதே அறிவுடைமையாகும்.

வசுதேவ குடும்பகம் - அனைத்துலகும் ஒரே குடும்பம் - எனும் இந்துக்களின் கூற்றை வாய்க்கு வாய் அறிவித்துப் பெருமைப்படும் ஆட்சியாளா்கள் உலக மொழியாகிவிட்ட - இந்த உலகத்தை வசுதேவ குடும்பகமாக ஆக்கியுள்ள - ஆங்கிலத்தை ஏற்பதில் எந்த அவமானமும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com