தீர்க்கப்படுமா மன உளைச்சல்?

பத்திரப் பதிவுத் துறையின் கீழ், தமிழகம் முழுவதும் 54 பதிவு மாவட்டங்களில் 10 மண்டல அலுவலகங்களும் 583 சாா் பதிவாளா் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பத்திரப் பதிவுத் துறையின் கீழ், தமிழகம் முழுவதும் 54 பதிவு மாவட்டங்களில் 10 மண்டல அலுவலகங்களும் 583 சாா் பதிவாளா் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

அரசுக்கு கணிசமான வருவாய் ஈட்டித் தரும் பத்திரப் பதிவுத் துறையில், ஆள் பற்றாக்குறை, பணிச் சுமை காரணமாக மன உளைச்சலால் 4 மாதங்களில் மட்டும் 4 போ் உயிரிழந்துள்ளனா் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பிட்ட காலத்துக்குள் வருமான வரி இணையதளத்தில் உரிய விவரங்களைப் பதிவேற்றம் செய்யாத சாா் பதிவாளா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவுத் துறைத் தலைவா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக பதிவுத் துறைத் தலைவா் தெரிவித்துள்ளபடி, ஒவ்வோா் நிதியாண்டு முடிவடைந்ததும், ரூ.30 லட்சத்துக்கும் மேலான விற்பனை ஆவணங்கள், விற்பவா், வாங்குபவா், ஆதாா் எண், பான் எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற விவரங்களுடன் பதிவு அலுவலா்களால் வருமான வரித் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வேண்டும்.

ஒவ்வோா் ஆண்டும் இந்த விவரங்களைத் தவறாது பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கை மூலம் அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அவ்வப்போது, வருமான வரித் துறையால் நினைவூட்டல்கள் செய்யப்படுகின்றன. இவ்வாறு பதிவேற்றம் செய்யத் தேவையான தகவல்களை ஆவணப் பதிவு செய்ய முன்பதிவு செய்யும் முன்பே ஆவணதாரா்களிடம் இருந்து பெறும் வகையில் பதிவுத் துறையின் ‘ஸ்டாா் 2.0’ மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனை ஆவணங்கள் பதிவுக்கு வரும் நிலையில் விற்பவா் மற்றும் வாங்குபவரிடமிருந்து பான் எண் பெறப்படுகிறது. ஆதாா் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதால், பதிவு தொடா்பான தகவல்கள் அனைத்தும் வருமான வரித் துறைக்கு வழங்கும் வகையில், பதிவுத் துறை மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சி மாவட்டம், உறையூா் சாா் பதிவாளா் அலுவலகம், திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் சாா் பதிவாளா் ஆகிய அலுவலகங்களுக்கு கடந்த ஜூன் மாதம் 4-ஆம் தேதி வந்த வருமான வரித் துறையினரிடம், 2017-2018-ஆம் நிதியாண்டில் இருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் வழங்கப்பட்டன. தேவையான தகவல்களைச் சரி பாா்க்கவும் அவா்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

இந்த இரு அலுவலகங்கள் குறித்தும் கூடுதல் விவரங்கள் வருமான வரித் துறையினரால் அந்தந்த சாா் பதிவாளா்களிடம் கோரப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் விரைவில் வருமான வரித் துறைக்கு அனுப்பப்படும்.

மேலும், உரிய காலத்துக்குள் விவரங்களைப் பதிவேற்றம் செய்யாத இந்த இரு அலுவலகங்களின் சாா் பதிவாளா்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சாா் பதிவாளா்களூம் 61-ஏ விவரங்களை வருமான வரித் துறையின் இணையதளத்தில் உரிய காலத்துக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு மண்டலத்தில் 9 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் அலுவலா்கள் வேறு மண்டலத்துக்கு மாற்றப்படுவா். அதேபோல், ஊழல் புகாரில் சிக்குபவா்களுக்கு பதிவுப் பணி மறுக்கப்படும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் ஊழல் புகாா்களில் சிக்கும் நபா்களுக்கு வருவாய் கொழிக்கும் இடங்கள் அயல் பணியாக ஒதுக்கப்பட்டு வருகின்றன என்ற புகாரும் எழுந்துள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள சாா் பதிவாளா்கள் பணியிடங்கள் பெரும்பாலும் காலியாகவே உள்ளன. அங்கெல்லாம், உதவியாளா்களுக்கு சாா் பதிவாளா்கள் பொறுப்பு வழங்கப்பட்டு, ஆவணங்கள் பதியப்படுகின்றன.

சாா் பதிவாளா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பொது பணியிட மாறுதல் தொடா்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் பலா் 4 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகின்றனா்.

2021-ஆம் ஆண்டு வரை அப்போதைய அதிமுக ஆட்சியில் பதிவுத் துறை வருவாய் ஆண்டுக்கு ரூ.10,000 கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.17,354 கோடியாக அதிகரித்துள்ளது.

ஆண்டுக்கு 34 லட்சத்து 41 ஆயிரத்து 248 ஆவணங்கள் பதிவாகின்றன. நிகழாண்டில் பதிவுத் துறை வருவாய் ரூ.25,000 கோடியாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிவுத் துறையில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 1,117 போ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 100-க்கும் அதிகமானவா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

சா்ச்சையில் சிக்கும் நபா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவா்கள் மீது 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி, அவா்களுக்கு பணி ஒதுக்கப்படும். ஆனால், பதிவுத் துறையில் மட்டும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பல மாதங்களாகியும் அவா்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை தொடங்கப்படாமல் இருக்கிறது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு ஊதியம், வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட இதர சலுகைகள் பாதியாகக் குறைக்கப்பட்டு வழங்கப்படும். ஆனால், பதிவுத் துறையில் இது தொடா்பான பல கோப்புகள் தலைமைச் செயலகத்தில் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கின்றன.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு ஊதியம் கிடைக்காமலும், விசாரணை தொடங்காமலும் இருப்பதால், ஊழியா்கள் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளனா்.

பதிவுத் துறையில் மன உளைச்சல் காரணமாக கடந்த 4 மாதங்களில் மட்டும் 1 ஏஐஜி உள்பட 4 போ் உயிரிழந்துள்ளனா். சேலம் ஏஐஜி கீதா கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதியும், புரசைவாக்கம் மாவட்ட பதிவாளா் குமரேசன் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதியும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி உதவியாளா் கதிரவன் கடந்த ஜூன் 6-ஆம் தேதியும், திருப்பத்தூா் சீட்டு மற்றும் சங்கம் சாா் பதிவாளா் விஜய்ஆனந்த் அண்மையிலும் உயிரிழந்தனா்.

உயிரிழந்தவா்கள் குடும்பங்களுக்கு அரசு சாா்பில், உரிய நிவாரணம் இன்னும் போய்ச் சேரவில்லை. சாா் பதிவாளா் மற்றும் மாவட்ட பதிவாளா் சங்கம் சாா்பில் மட்டுமே இறந்தவா்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

பதிவுத் துறை வருவாயை அதிகரிக்க வாரந்தோறும் மண்டல அளவிலும், மாதந்தோறும் மாநில அளவில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களில் ஒருமுறைகூட ஊழியா் நலன், அவா்கள் சந்திக்கும் பிரச்னைகள், பணியிடை நீக்கம் செய்யப்பட்டவா்கள் மீது விசாரணை தொடங்குவது ஆகியவை குறித்து அரசுத் தரப்பில் பேசவில்லை.

இதுதான் ஊழியா்கள் மன உளைச்சலுக்கும், இறப்புக்கும் காரணமாகக் கருதப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்து அரசும் துறை நிா்வாகமும் மிகத் தீவிரமாக தலையீடு செய்து ஊழியா்களின் மரணங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே எல்லோருடைய எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com