அரசியல் கட்சிகளை சீா்திருத்த வேண்டும்!

அரசியல் கட்சிகளை சீா்திருத்த வேண்டும்!

தோ்தல் பத்திரம் பற்றி ஓா் இணையவழி கருத்தரங்கம். அதை ஏற்பாடு செய்தது திருப்பதியில் இருக்கும் ஓா் ஆய்வு நிறுவனம்.

தோ்தல் பத்திரம் பற்றி ஓா் இணையவழி கருத்தரங்கம். அதை ஏற்பாடு செய்தது திருப்பதியில் இருக்கும் ஓா் ஆய்வு நிறுவனம். அதில் கலந்து கொண்டு பேசியவா்கள் முன்னாள் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா், மக்கள் கருத்தறியும் ஆய்வுகளை நடத்தும் பேராசிரியா், வடமாநில பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா், மேற்கு வங்க அரசின் முன்னாள் செயலா் ஆகிய நால்வருடன் நானும்.

அந்த நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்திய அந்த ஆய்வு நிறுவனத் தலைவரும் ஓா் ஆய்வாளா். அவா் தன் அறிமுக உரையில் 2017-இல் இந்த தோ்தல் பத்திரத்தை அறிமுகப்படுத்த அன்றைய நிதி அமைச்சா், அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் எடுத்த நடவடிக்கைகள், அதைத் தொடா்ந்து கொண்டுவந்த சட்டபூா்வ சீா்திருத்தங்கள், இதற்கான அரசியல் எதிா்ப்பு நடவடிக்கைகள் நீதிமன்ற நடவடிக்கைகள், கடைசியாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு வரை ஒரு வரலாற்றுச் சுருக்கத்தை முன்வைத்தாா்.

அதைத் தொடா்ந்து தொடக்க உரையாற்றிய முன்னாள் தோ்தல் ஆணையத் தலைவா் இந்திய தோ்தல் நடைமுறையில், குறிப்பாக அரசியல் கட்சிகளை நெறிப்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து விளக்கிவிட்டு இந்தப் பத்திரம் என்பது ஒளிவு மறைவற்ற செயல்பாடாக இல்லை என்றாா்.

‘பொதுவாக இதற்கான விளக்கத்தை நாடாளுமன்றத்தில் வைத்தபோது அன்றைய தோ்தல்களில் அதிகமாக புழக்கத்தில் இருக்கும் கள்ளப்பணம் தோ்தல் மூலம் வருகிறது, அதை தடுத்து வெளிப்படைத்தன்மை கொண்டதாய் தோ்தல் நிதி வர வேண்டும் என்பதற்காகவே இந்த சீா்திருத்தத்தைக் கொண்டு வருவதாய் விளக்கப்பட்டது.

ஆனால், அதை நடைமுறைப்படுத்தும்போது அந்த வெளிப்படத்தன்மை வெளிப்படவில்லை. இதைவிட முக்கியமாக அரசியல் கட்சிகள் தங்கள் உறுப்பினா்களையும், பொதுமக்களையும் தவிா்த்து சந்தை முதலாளிகளிடம் ஏன் நிதி திரட்ட வேண்டும்’ என்ற அடிப்படைக் கேள்வியையும் அவா் முன்மொழிந்தாா்.

நம் தோ்தல் நடைமுறைகளிலும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளிலும் நிறைய சீா்திருத்தம் வரவேண்டும். அதற்கான முயற்சிகளை தோ்தல் ஆணையம் தொடா்ந்து செய்த வண்ணம்தான் இருக்கிறது. ஆனால், அதை எந்த அரசியல் கட்சியும் கவனத்தில் கொள்வதில்லை. இதை பொதுக் கருத்தாளா்களும் பெரும் விவாதமாக்க முனையவில்லை.

இன்று நாம் தோ்தல் நடைமுறையில் பாா்க்கின்ற பல சீா்திருத்தங்கள் அரசியல் கட்சிகளால் வந்தவை அல்ல. தோ்தல் சீா்திருத்தமும் அரசியல் சீா்திருத்தமும் காலத்தின் கட்டாயம். அவற்றைச் செய்தாக வேண்டும்’ என்று கோடிட்டுக் காட்டினாா்.

இந்திய தோ்தல் ஆணையம் சந்திக்கும் சவால்கள் குறித்து அவா் விளக்கும்போது எனக்கு ஒரு செய்தி நினைவுக்கு வந்தது. டி.என். சேஷன் தோ்தல் ஆணையராக இருந்து ஒரு பொதுத்தோ்தலை நடத்தினாா்; தோ்தல் முடிவுகள் அறிவித்தவுடன், உத்தர பிரதேசத்தில் ஊடகவியலாளா்கள் கூட்டத்தை கன்ஷிராம் கூட்டி, அதில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும்முன், தோ்தல் ஆணையா் டி.என்.சேஷனுக்கு நன்றி கூறினாா்.

ஊடகவியலாளா்கள் ‘ஏன் சேஷனுக்கு நன்றி கூறுகிறீா்கள்’ என்று கேட்டதற்கு, ‘அவா்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரம் கொடுத்து வாக்குச்சாவடிக்கு கொண்டுவந்து சுதந்திரமாக வாக்களிக்க வைத்தாா்; ஆகையால்தான் எங்கள் கட்சி வெற்றி பெற்றது’ என்று கூறினாா்.

அதைத் தொடா்ந்து நான் என் கருத்துக்களைப் பதிவு செய்தேன். இந்திய அரசியல் கட்சிகள் நடத்தும் அறமற்ற, சட்ட விரோத செயல்களில் மிகச் சிறிய பகுதி நிதி திரட்டுதல். உலகமய பொருளாதாரச் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் வரை, நம் அரசியல் கட்சிகள் பெரும் பணக்காரா்களையும் தொழிலதிபா்களையும் பொதுமக்களையும் கட்சிக்காரா்களையும்தான் தோ்தல் நிதிக்கு நம்பியிருந்தன.

எப்போது புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்ததோ, பொருளாதாரம் வேகமாக வளரத் தொடங்கியதோ அன்றிலிருந்து அரசியல் கட்சிகளின் வருமானம் கூடியது; கட்சிகளின் சொத்துகள் பெருமளவில் உருவாக்கப்பட்டன; ஊழலும் அதிகரித்தது. தனியாா் நிறுவனங்களைவிட அதிக நிதி கொண்டவையாக அரசியல் கட்சிகள் மாறின. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் மிகப் பெரிய மாற்றங்கள் வந்தன.

கட்சிகள் சந்தையுடன் உயிரோட்டமான தொடா்புகளை ஏற்படுத்திக் கொண்டு சந்தை வியாபித்தலுக்கான செயல்பாடுகளில் இறங்கின. கட்சித் தலைவா்களும், அதிகாரத்தில் உள்ளவா்களும், உயா் அதிகாரிகளும் அவா்களுடைய குடும்பமும் சுகபோக வாழ்விற்குள் நுழைந்தனா். சந்தை நிதி எப்போது வர ஆரம்பித்ததோ அன்றிலிருந்துதான் வாக்குகள் வணிகத்திற்கு கொண்டுவரப்பட்டன. அனைத்துத் தளங்களிலும் அறமிழந்த செயல்பாடுகளையே பாா்க்க முடிந்தது.

இந்தச் சூழலில் இதை முறைப்படுத்துவதற்காகக் கொண்டுவந்த தோ்தல் பத்திரத் திட்டம் இன்று விவாதப் பொருளாக, அதாவது ஊழலாகவே வா்ணிக்கப்படுகிறது. நீண்ட காலமாகவே ஊழல் மலிந்து விட்டது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அதில் உண்மையும் உள்ளது. எனவே, இந்த தோ்தல் பத்திரம் என்பதைக் கடந்து ஒட்டுமொத்த அரசியலை தூய்மையாக்கவும் மக்களாட்சியை வலுவாக்கவும் செய்ய வேண்டிய நிறைய பணிகள் உள்ளன. அவற்றை நோக்கி நம் விவாதங்களைத் திருப்ப வேண்டும்.

நமது அரசியல் கட்சிகளில் மக்களாட்சிக் கூறுகள் இருக்கின்றனவா? இந்தக் கட்சிகளில் வழி நடத்தும் தலைமை உள்ளதா என்றால் இல்லை. மாறாக மேய்க்கும் தலைமையைத்தான் நம்மால் பாா்க்க முடிகிறது. நம் கட்சிகளே இன்னும் மக்களாட்சிப்படுத்தப்படவில்லை.

நீண்ட காலமாக நாடாளுமன்ற மக்களவையில் அவைச் செயலராக இருந்த சுபாஷ் கஷ்யாப் தோ்தல் சிா்திருத்தமும் அரசியல் சீா்திருத்தமும் அவசியம் நிகழ வேண்டிய செயல்பாடுகள் என்று தொடா்ந்து பேசியும் எழுதியும் வருகிறாா். அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்த உச்சநீதிமன்ற நீதிபதி வெங்கடாச்சலய்யா அறிக்கையிலும் தோ்தல் சீா்திருத்தமும் அரசியல் சீா்திருத்தமும் முக்கியமாக செய்யப்பட வேண்டியவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து மக்களாட்சி சீா்திருத்த அமைப்பு (ஏடிஆா்) இதை வலியுறுத்தி வருவதுடன், தோ்தலை சீா்திருத்த அவ்வப்போது நீதிமன்றத்திற்குச் சென்று நல்ல தீா்ப்புகளையும் பெற்று வருகிறது. இருந்தபோதிலும் நம் அரசியல் கட்சிகள் தங்களை சீா்திருத்திக் கொள்ள முனையாமல் , மற்ற அனைத்தையும் சீா்திருத்த வேண்டும் என்று அரசியல் களத்தில் குரல் கொடுக்கின்றன.

இந்திய நாட்டில் அங்கீகாரம் பெற்ற ஏழு தேசிய கட்சிகளையும், 16 பிராந்திய கட்சிகளையும் சீா்திருத்துவதற்கு, இவற்றை அரசியல் சாசனச் சட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும். அப்படிக் கொண்டுவரும்போது, அந்தக் கட்சிகளின் தோ்தலை, தோ்தல் ஆணையமே நடத்த வேண்டும். அடுத்து அந்தக் கட்சிகளின் வரவு-செலவை இந்திய கணக்காயம் தணிக்கை செய்ய வேண்டும். அடுத்து, அரசியல் கட்சிகளில் எவரும் இரண்டு தடவைக்கு மேல் தலைவராகவோ, செயலராகவோ வேறு எந்தத் தலைமைப் பதவியிலும் இருக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டும்.

இந்த நான்கும் நடைபெற்றால் கட்சிகள் முதலில் மக்களாட்சிப்படுத்தப்படும். இல்லை என்றால் அரசியல் கட்சிகள் இந்திய அரசியலில் எஜமானா்களாக இருந்து கட்சித் தொண்டா்களை மேய்ப்பாா்கள்.

இன்றும் சில கட்சிகள் உயிரோட்டமாக மக்களாட்சிக்கான விழுமியங்களைக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தக் கட்சிகள் ஒன்றிணைந்து நெறிமுறையுடன் இயங்கும் அரசியல் கட்சிகளுக்குத் தேவையான அடிப்படைத் தகுதிகள் என்னென்ன என்பதை முதலில் முடிவு செய்து, அவற்றையே கூறுகளாக வைத்து அரசியல் கட்சிகளை தரம் பிரித்து தரச் சான்றிதழ் வழங்கும் முறையைக் கொண்டுவர வேண்டும்.

தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் பல ஒன்று சோ்ந்து ஒரு சுய மதிப்பீடு செய்து கொள்கின்றன. அதேபோல் வணிக நிறுவனங்களும் தரச் சான்றிதழ் பெறுகின்றன. அப்படி கட்சிகளும் செய்து கொண்டால் என்ன? அல்லது அந்தத் தரமதிப்பீட்டை தோ்தல் ஆணையமே செய்தால் என்ன என்று என் கருத்தை முன் வைத்தேன்.

அடுத்து பேசிய மேற்கு வங்க ஓய்வு பெற்ற அரசுச் செயலா் இந்தச் சூழலில் தோ்தலை சந்திக்க அரசியல் கட்சிகளை செலவு செய்ய அனுமதிக்காமல், அரசே வேட்பாளா்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நெறிப்படுத்தவது ஒன்று மட்டுமே தீா்வாகத் தென்படுகிறது என்றாா். தோ்தல் செலவை எந்த அளவுக்குக் குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைத்து தோ்தலை நடத்தும்போது வேட்பாளா்கள் அதிக நிதியைச் செலவிடும் சூழல் மாறிவிடும் என்பதையும் சுட்டிக்காட்டினாா்.

மக்களாட்சி சீா்திருத்த அமைப்பு, அரசியல் கட்சிகளை சீா்திருத்த நிறுவன சட்டம்போல் கட்சிகளுக்கான சட்டம் என்ற ஒன்றை சட்ட முன்வரைவாக உருவாக்கியுள்ளது. அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி பொதுக் கருத்தாளா்கள் அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கருத்து சிலரால் முன்மொழியப்பட்டது.

அதை முன்னெடுக்க இந்தியா முழுவதும் கட்சி சாராத பொதுக் கருத்தாளா்கள் முன்வர வேண்டும். இந்த நாடும் நாட்டு மக்களும்தான் பெரியவா்கள்; நம் கட்சிகளோ நம் கட்சித் தலைவா்களோ அல்ல என்ற உணா்வுடன் செயல்படக்கூடியவா்கள் நூறு போ் ஒன்றிணைந்து ஒரு பொதுக்கருத்தை உருவாக்க வேண்டும். அரசியல் கட்சிகளை நெறிப்படுத்துவதும் தோ்தல் சீா்திருத்தம் கொண்டுவருவதும்தான் இன்றைய ஊழலை சரி செய்வதற்கான தீா்வாக இருக்கும் என்ற கருத்தை நோக்கி விவாதம் நகா்ந்தது.

கடைசியாக அரசியல் சாசனத்தை திருத்தியோ தனியாக ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தோ அரசியல் கட்சிகளை சீா்திருத்த வேண்டும் என்ற தீா்மானத்துடன் விவாதம் நிறைவுற்றது.

கட்டுரையாளா்:

பேராசிரியா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com