இலவசங்கள்-மறுபரிசீலனை தேவை!

அரசியல் செய்யும் கட்சிகள்தான் தங்கள் வாக்கு வங்கிக்காக இலவசங்களை வலிந்து திணிக்கின்றன என்பதே நிதர்ச னம்.
பிரதிப் படம்
பிரதிப் படம்
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் 2026 பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளைத் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டன. இதில் வழக்கம்போல் இலவசங்கள் என்பது பிரதான வாக்குறுதியாக இருக்கும். ஏனென்றால், இலவசத் திட்டங்களை ரத்து செய்வோம் என உரக்கக்கூற கட்சிகள் முன்வருமா என்பது சந்தேகமே.

இலவசங்களை வழங்கும் திட்டங்களுக்கு தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது என்றால் அது மிகையில்லை. 2006 பேரவைத் தேர்தலில் இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் முதல்முதலாக இலவசங்களுக்கு அச்சாரம் போட்டது. அந்தத் தேர்தலில் திமுக வெற்றியும் பெற்றது.

இதைத் தொடர்ந்து 2011 தேர்தலில் இலவச மிக்ஸி அல்லது கிரைண்டர் வழங்குவதாக திமுக அறிவித்தது. இதற்கு ஒருபடி மேலாக அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இலவச மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்குவதாக உறுதியளித்து வெற்றி பெற்றது. இடையில் பொங்கல் பரிசாக ரூ.100 வழங்கப்படும் எனவும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தப் பொங்கல் பரிசு தொகை உயர்த்தியும் வழங்கப்பட்டது. இதுதவிர மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், 2021 பேரவைத் தேர்தலில் மகளிர் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் எனவும் கட்டணம் இல்லா மகளிர் பேருந்து பயண சேவையையும் தேர்தல் அறிக்கையாக அறிவித்து திமுக வெற்றி பெற்றது.

இவ்வாறாக 'இலவசங்கள் என்ற அறிவிப்பு தேர்தல் வெற்றிக்கு முக்கியக் காரணியாக உள்ளதை அனைத்து அரசியல் கட்சிகளும் நன்கு புரிந்துகொண்ட நிலையில், தற்போது தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பிற மாநிலங்களிலும் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்' முக்கியத்துவம்பெற்றுவருகின்றன.

நடந்துமுடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி, பெண்களுக்கான மாதாந் திர உதவித் தொகையாக ரூ.2,100 வழங்கப்படும் என அறிவித்தது. இதற்குப் போட்டியாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ரூ.3,000 வழங்கப்படும் எனவும், தமிழகத்தைப் போலவே அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உறுதி செய்யப்படும் எனவும் அறிவித்தது.

இதுபோலவே தில்லி பேரவைத் தேர்தலில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டு கட்சிகளுமே தங்களது தேர்தல் அறிக்கையில் கூறின.

தமிழகத்தின் 2025-26-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதன்படி, தமிழகத்தின் மொத்த வருவாய் ரூ.3,31,569 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.3,73,204 கோடி. ஆகவே, நிகழாண்டு வருவாய் பற்றாக் குறை ரூ.41,635 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் தமிழகத்தின் மொத்த வரு வாய் செலவினத்தில் பெரும் பகுதி அதாவது, ரூ.1,53,724 கோடி உதவித் தொகைகளுக்கும் மானியங்களுக்கும் செலவி டப்படுவதாக இந்த நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. இதில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ.13,807 கோடி யும், கட்டணம் இல்லா மகளிர் பேருந்து பயண சேவைக்கு ரூ.9/682 கோடியும், இலவச வேஷ்டி, சேலைக்கு ரூ. 673 கோடியும், பொது விநியோகத் திட்டமானியமாக ரூ. 14,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கண்ணை விற்று சித்திரம் வாங்குவதால் என்ன பயன்? மார்ச் 31, 2026 நிலவரப் படி நிலுவையில் உள்ள கடன் ரூ. 9,29959 கோடியாக இருக்கும் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

அதுபோல் கடன்சுமை இருக்கும்போது இலவச அறிவிப்புகளை வெளியிட்டு, அதை நிறைவேற்றும் வகையில் கடன் சுமையை மேலும் அதிகரிக்க வேண்டுமா?

தமிழகத்தில் நியாயவிலைக் கடை கள் மூலம் வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசுத் தொகை இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. இதனால் யாரும் பாதிக்கப்படவில்லை.

இதையே ஒரு பாடமாக கொண்டு வரும் தேர்தலில் இலவச வாக்குறுதிகளை நிறுத்தினால் அடுத்த தேர்தலிலும் அதை தொடரவேண்டிய அவசியம் ஏற்படாது. இலவசங்கள் கோரி யாரும் அரசுக்கு கோரிக்கை விடுக்கவில்லை. அரசியல் செய்யும் கட்சிகள்தான் தங்கள் வாக்கு வங்கிக்காக இலவசங்களை வலிந்து திணிக்கின்றன என்பதே நிதர்ச னம்.

நாட்டை ஆட்சி செய்வோர் தன்னலத்தைப் பெரிதாகக் கொண்டு நாட்டு வளங்களைச் செழிக்கச் செய்யாமல், கிடைத்த பொருளை வீணாகச்செலவிட்டு பொருள் அனைத்தும் தீர்ந்த பிறகு, அரசை நடத்த மீண்டும் மக்களிடமே, பொருள்வேண்டுவது என்பது வழிப்போக்காகச் செல்பவரிடம், வேல் எனும் ஆயுதம் கொண்டு வழிப்பறி செய்வது போன்றதாகும் என இடித்துரைக்கிறது திருக்குறள் (குறள்-552).

இலவச அறிவிப்புகளைத் தவிர்த்து தேர்தல் அறிக்கையைத் தயாரித்தால், அது வாக்கு வங்கியைப் பாதிக்கும் என அரசியல் கட்சிகள் கருதுவதைப் புறந்தள்ள வேண்டும்.

ஏற்கெனவே சமத்துவ சமுதாய நிலையை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் ஒதுக்கீடுகள் நடைமுறையில் உள்ளன. வருவாய் மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்றும் திட்டங்களுடன், இலவசங்களுக்கு வசப்படுத்தாத தேர்தல் அறிக்கையை உரக்கக் கூறி வெளியிடும் கட்சியால்தான் வல்லமையான அரசை அமைக்க இயலும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com