உலக ஒழுங்கின் நெருக்கடி-'அமைதிக் குழு'

உலக ஒழுங்கின் நெருக்கடி-'அமைதிக் குழு'

ஐக்கிய நாடுகள் சபை "செயலற்றது' என்று டிரம்ப் கூறுவது, அமெரிக்காவின் "வீட்டோ' அதிகாரங்கள், பொருளாதாரத் தடைகள் மற்றும் ராணுவத் தலையீடுகள்தான் ஐ.நா. அமைப்பை முடக்குவதில் முக்கியப் பங்கு வகித்தன என்ற உண்மையை வசதியாகப் புறக்கணிக்கிறது.
Published on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுப்பில் தொடங்கப்பட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான சர்வதேச அமைப்பான "அமைதிக் குழு' (போர்டு ஆஃப் பீஸ்), சமகால உலக அரசியலில் ஒரு கவலைக்குரிய தருணத்தைக் குறிக்கிறது. போருக்குப் பிந்தைய காஸாவை நிர்வகிப்பதற்கும், உலகளாவிய மோதல்களைத் தீர்ப்பதற்கும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் குழு, உண்மையில் இரண்டாம் உலகப் போரின் முடிவிலிருந்து மிகுந்த சிரமத்துடன் கட்டியெழுப்பப்பட்ட பலதரப்புவாதக் கொள்கைகளின் மீது தொடுக்கப்பட்ட ஒரு நேரடித் தாக்குதலாகும்.

"செயல்திறன்' மற்றும் "அமைதியைக் கட்டியெழுப்புதல்' என்ற சொல்லாடல்களுக்குப் பின்னால், உலகளாவிய முடிவெடுக்கும் செயல்முறையின் மீது அமெரிக்காவின் ஏகபோக ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான ஓர் அப்பட்டமான முயற்சி இதற்குப் பின்னால் மறைந்துள்ளது. பனிப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஒரு பலதுருவ உலக ஒழுங்கு உருவானதால், அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்க ஆதிக்கம் கணிசமாகச் சிதைந்துள்ளது. இந்த "அமைதிக் குழு' என்று அழைக்கப்படும் அமைப்பின் உருவாக்கம், இழந்த மேலாதிக்கத்தை அமெரிக்கா மீண்டும் பெறுவதற்கும், நிலைநிறுத்துவதற்குமான ஒரு தெளிவான முயற்சி என்றே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

பாலஸ்தீன சுயநிர்ணயத்தின் மையப் பிரச்னையை இந்தக் குழு வேண்டுமென்றே விலக்குகிறது. ஆக்கிரமிப்பு, நிறவெறி போன்ற நிலைமை மற்றும் சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறுவதை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, பிரச்னையை "நிர்வாகம்' மற்றும் "ஸ்திரத்தன்மை' என்று மறுவடிவமைக்கிறது. இந்தத் தொழில்நுட்ப மொழி பாலஸ்தீன போராட்டத்தை அதன் அரசியல், வரலாற்று உள்ளடக்கத்திலிருந்து அகற்றி, விடுதலை குறித்த கேள்வியை வெளிப்புறக் கட்டுப்பாட்டின் ஒன்றாக மாற்றுகிறது.

அமைதிக் குழுவின் நிறுவனக் கட்டமைப்பு இன்னும் அதிக கவலை அளிக்கிறது. டிரம்ப் "வாழ்நாள் தலைவராக' நியமிக்கப்பட்டு, உறுப்பினர்களை நியமிக்கவும், நிகழ்ச்சிநிரல்களைத் தீர்மானிக்கவும், கட்டுப்படுத்தும் தீர்மானங்களை வெளியிடவும் பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதால், இந்த "அமைதிக் குழு' ஒரு சர்வதேச அமைப்பைப்போல இல்லாமல், ஒரு தனிநபரின் சாம்ராஜ்யம் போலவே காட்சியளிக்கிறது.

மார்கோ ரூபியோ, ஜாரெட் குஷ்னர் மற்றும் டோனி பிளேர் போன்றோர் இதில் சேர்க்கப்பட்டிருப்பது, மேற்கத்திய ஏகாதிபத்திய ஆட்சியின் மிக மோசமான மரபுகளின் தொடர்ச்சியையே உணர்த்துகிறது. இவர்கள் ஒவ்வொருவரும் ராணுவவாதம், ஆட்சி மாற்ற அரசியல் அல்லது பேரழிவு தரும் தலையீடுகளுடன் தொடர்புடையவர்கள். இது கூட்டுத் தலைமை அல்ல; இது ராஜதந்திரம் என்ற போர்வையில் செயல்படும் ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டளை அமைப்பு ஆகும்.

அமைதிக் குழுவுக்கு உறுப்பினர்கள் பில்லியன் டாலர் பங்களிக்க வேண்டும் என்பது உலகளாவிய சமத்துவமின்மையை நிறுவனமயமாக்குகிறது. இதன்மூலம் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளைச் சேர்ந்த ஏழை நாடுகளை திறம்பட விலக்குகிறது; அதே நேரத்தில் அமெரிக்க மூலோபாய நலன்களுடன் இணைந்த மூலதனம் நிறைந்த நாடுகள் மற்றும் உயரடுக்கினரை அதிகாரம் செய்கிறது. இது மக்கள் அல்லது நாடுகளுக்காக அன்றி, பில்லியனர்கள் மற்றும் இணக்கமான ஆட்சிகளுக்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட உலகளாவிய நிர்வாகம்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு போட்டியாளராகவோ அல்லது சாத்தியமான மாற்று அமைப்பாகவோ தன்னை நிலைநிறுத்திக்கொள்வதன் மூலம், "அமைதிக் குழு' அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு என்ற கருத்துக்கே சவால் விடுகிறது. ஐக்கிய நாடுகள் சபைக்குப் பல குறைபாடுகளும் அதிகார ஏற்றத்தாழ்வுகளும் இருந்தாலும், சிறிய நாடுகள் குறைந்தபட்சம் பெயரளவிலாவது குரல் கொடுக்கும் ஒரே உலகளாவிய மன்றமாக அதுவே நீடிக்கிறது. "அமைதிக் குழு' இந்த வரையறுக்கப்பட்ட பன்மைத்துவத்தையும் நிராகரிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை "செயலற்றது' என்று டிரம்ப் கூறுவது, அமெரிக்காவின் "வீட்டோ' அதிகாரங்கள், பொருளாதாரத் தடைகள் மற்றும் ராணுவத் தலையீடுகள்தான் ஐ.நா. அமைப்பை முடக்குவதில் முக்கியப் பங்கு வகித்தன என்ற உண்மையை வசதியாகப் புறக்கணிக்கிறது.

ஆழமான சித்தாந்த மட்டத்தில், "அமைதிக் குழு' ஒற்றை துருவ உலக உருவாக்கத்துக்கு வெளிப்படையான திரும்புதலைக் குறிக்கிறது. 1991-இல் சோவியத் ஒன்றியத்தின் சரிவானது இராக், யூகோஸ்லோவியா, ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் போர்களால் வகைப்படுத்தப்பட்ட கட்டுப்படுத்தப்படாத அமெரிக்க ஆதிக்கத்தின் ஒரு குறுகிய, ஆனால் அழிவுகரமான காலத்துக்கு வழிவகுத்தது. அந்த சகாப்தம் அமைதியை உருவாக்கவில்லை, மாறாக நிரந்தர உறுதியற்ற தன்மை, லட்சக்கணக்கான இறப்புகள், சர்வதேச சட்டத்தின் செயல்படாதன்மையை உருவாக்கியது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக, மாற்று அதிகார மையங்களின் படிப்படியான எழுச்சி மற்றும் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு இந்த ஏகபோகத்துக்கு சவால் விடுக்கத் தொடங்கியுள்ளன. "அமைதிக் குழு' அந்த வரலாற்றுப் போக்கை மாற்றியமைக்க முயல்கிறது. இந்தக் குழுவின் ஆதரவாளர்களால் பயன்படுத்தப்படும் "குறுநிலை ஒத்துழைப்பு' என்ற சொல் உண்மையை வெளிப்படுத்துகிறது. செயல்திறன் என்ற போர்வையில், இது பலதரப்பு முடிவெடுப்பின் சிக்கலான, ஜனநாயகத் தன்மையை நிராகரித்து, சிறிய, உயரடுக்குக் கட்டுப்பாட்டில் உள்ள கட்டமைப்புகளுக்கு ஆதரவளிக்கிறது.

இந்தப் புதிய அமைப்பை செயல்படுத்துவதில் பொருளாதார வற்புறுத்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. வரி அச்சுறுத்தல்கள் மற்றும் நாடுகளை "அமைதிக் குழு'வில் சேர கட்டாயப்படுத்த நிதி அழுத்தம் ஆகியவை ஏகாதிபத்திய கருவித் தொகுப்புக்குள் சரியாகப் பொருந்துகின்றன. இறையாண்மை நிபந்தனைக்குள்பட்டதாகிறது; சந்தை அணுகலுக்காகவோ அல்லது பொருளாதார தடையிலிருந்து விடுபடுவதற்காகவோ வர்த்தகம் செய்யப்படுகிறது. வர்த்தகம் மற்றும் நிதியை ஆயுதமாக்குவது "அமைதிக் குழு' தன்னார்வமாகவோ அல்லது கருணையுடனோ செயல்படுகிறது என்ற எந்தவொரு கூற்றையும் குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது.

அமெரிக்காவின் பாரம்பரிய கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகளே இந்த அமைதிக் குழுவை சந்தேகத்துடன் பார்க்கின்றன. ஒரு தனிப்பட்ட தலைவரின் விருப்பங்களை மையமாகக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பு இயல்பாகவே நிலையற்றது என்பதைப் பலர் உணர்ந்துள்ளனர். இன்று விரும்பப்படும் கூட்டாளி, நாளை இலக்காக மாறக்கூடும். உலகின் தெற்குப் பகுதி நாடுகளுக்கு இந்த அபாயங்கள் இன்னும் தீவிரமானவை. இத்தகைய அமைப்பில் பங்கேற்பது, கொள்கை சுதந்திரத்தை இழப்பதற்கும், "அமைதி' என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் தலையீடுகளை சட்டபூர்வமாக்குவதற்கும் வழிவகுக்கும்.

இந்தியாவைப் பொருத்தவரை, இதன் விளைவுகள் குறிப்பாக மிகவும் தீவிரமானவை. பாலஸ்தீன உரிமைகளைப் புறக்கணித்து, ஐ.நா. சபையைத் தவிர்த்துச் செயல்படும் ஓர் அமைப்புடன் எந்தவொரு தொடர்பும் வைத்துக்கொள்வது, இந்தியாவின் காலனித்துவ எதிர்ப்புப் பாரம்பரியத்துக்குச் செய்யப்படும் ஒரு வரலாற்றுத் துரோகமாக அமையும். பாலஸ்தீனத்துக்கான இந்தியாவின் நீண்டகால ஆதரவும், மூலோபாய சுயாதிபத்தியத்துக்கான அதன் உறுதிப்பாடும், அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படும் ஓர் அமைதிப் பொறிமுறைக்கு ஒப்புதல் அளிப்பதுடன் இணைந்து பயணிக்க முடியாது.

"அமைதிக் குழு' அமெரிக்காவின் உலகளாவிய தலைமைத்துவம் எதிர்கொள்ளும் ஆழமான சட்டபூர்வ நெருக்கடியையும் வெளிப்படுத்துகிறது. ஒத்துழைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் மூலம் பலதுருவ உலகுக்கு ஏற்ப மாறுவதற்குப் பதிலாக, இதுபோன்ற அமைப்பு மூலம் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்கா முயல்கிறது. இந்த உத்தி நியாயமற்றது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. ஒருமித்த கருத்து இல்லாமல் திணிக்கப்படும் போட்டி அதிகார அமைப்புகள், மோதல்களின் சாத்தியக்கூறுகளைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரிக்கின்றன. அரசியல், ராணுவ அல்லது பொருளாதாரம் என எந்த வகை ஏகபோகங்களாலும் ஆளப்படும் ஓர் உலகம் இயல்பாகவே நிலையற்றது.

"அமைதிக் குழு' மீதான போராட்டம் என்பது சர்வதேச அமைப்பின் எதிர்காலத்துக்கான போராட்டமே ஆகும். உலகம் உண்மையான பன்முகத்தன்மை, இறையாண்மைக்கான மரியாதை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நோக்கி நகருமா அல்லது ஒரே ஒரு சக்தியால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு படிநிலை ஒழுங்குக்குள் மீண்டும் சரிந்து, வற்புறுத்தல் மற்றும் புறக்கணிப்பின் மூலம் "அமைதியை' திணிக்குமா?

பனிப்போருக்குப் பிந்தைய காலத்தின் அனுபவம் ஒரு தெளிவான எச்சரிக்கையை வழங்குகிறது. ஒற்றை வல்லரசின் ஆணவம் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதில்லை; அது எதிர்ப்பையும், குழப்பத்தையும், முடிவற்ற போர்களையும் உருவாக்குகிறது. எனவே, உலக சமூகம் "அமைதிக் குழு'வை ஒரு குறைபாடுள்ள அமைப்பு என்ற முறையில் மட்டுமல்லாமல், ஓர் ஆபத்தான யோசனை என்ற முறையிலும் நிராகரிக்க வேண்டும்.

கட்டுரையாளர்:

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்

மத்தியக் குழுவின் பொதுச் செயலாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com