நம்
விளைநிலம்
சாயப்பட்டறை மற்றும்
திடக் கழிவுகளால்
பழுதாகிக் கொண்டிருக்கிறது.
ஆலைப் புகைகளால்
காற்றின் கைகளில் விஷம்.
பாரம்பர்யமாய் உழுது
விவசாயம் செய்த நிலம்
வறுமையின் கோரப்பிடியில்
வலுத்தவனின் கையில்
அட்சயமாய்...
பறவைகள் வருவதற்கும்
வாய்க்கால்கள் ஓடுவதற்கும்
இடமின்றி
தற்போது நரகமயமாகும் கிராமம்.
இதில்
மாடு, கன்று, ஆடுகளுக்கும்
சாலைகளே உறைவிடம்.
பாலித்தீன் பைகளும்
போஸ்டர் தாள்களுமே உணவுகள்...
உரங்களில் இயற்கையின்றி
போனதால்
செயற்கை முறையில்
பயிர் பயருகளும்,
காய்கனிகளும்
பிளாஸ்டிக் வர்ண பொருட்களாய்...
இயற்கை விவசாயத்தைத்
தேடிப் போனவர்கள்
ஓரிருவரே
தென்படுகின்றனர்...
நம் மண்ணின் மணம்
நம் மண்ணின் நிறம்
தற்போது
அறுதலியாய்...
கோரிக்கைகளை விடுத்தே
பலமிழந்து போனார்கள்
விவசாயிகள்
அவர்களை
அலைக்கழித்தே
பணக்காரர்கள் ஆனார்கள்
பயனாளிகள்.
நான்கு பேர்
உண்ணும் உணவை
ஒருவன் உண்பதும்
ஒருவன் உழைத்த உழைப்பில்
நான்கு பேர்
பலனடைவதும்
துரதிர்ஷ்டத்தின் உச்சமல்லவா?
எங்கே
விளை நிலத்தின் கற்பு காக்கப்படுகிறதோ
அங்கே
பொருளாதார வளர்ச்சியும்
சமுதாய முன்னேற்றமும்
ஏற்றம் காணும்
என்பது உறுதி..
பொங்கல் வாழ்த்துகள்.