நடுவுல கொஞ்சம் காந்திய பக்கத்த காணோம்: எங்கே தமிழருவி மணியன்? 

தமிழக அரசியல் குறித்து இப்போது எதைப் பேசினாலும், முன்னாள்  முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு
நடுவுல கொஞ்சம் காந்திய பக்கத்த காணோம்: எங்கே தமிழருவி மணியன்? 
Updated on
2 min read

தமிழக அரசியல் குறித்து இப்போது எதைப் பேசினாலும், முன்னாள்  முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு என்றோ கருணாநிதி மட்டும் தீவிர அரசியலில் இருந்திருப்பாரேயானால் என்றோ குறிப்பிடாமல் எதையும் சொல்ல முடிவதில்லை.

அந்த அளவிற்கு இந்த இரண்டு தலைவர்களும் மக்கள் மத்தியில் மிகுந்த ஆளுமையுடன் ஜனரஞ்சகமான ஒரு வெற்றியை கண்டவர்கள், அதானால்தான் அந்த வெற்றிகளுக்குப் பிறகு ஒரு வெற்றிடத்தை உணரமுடிகிறது. 

அப்படி ஒரு ஜனரஞ்சக வெற்றி முகத்தைப் பெறப்போகும் இன்னொரு தலைவர் யார் என்ற தேடல் இருக்கின்ற வேளையில் தான் தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் அடுத்தவாரிசு நான் தான் என்று சசிகலா, தீபா, போன்றவர்கள், எழுந்து வந்தனர். ஆனால் புரட்டிப் போடும் அரசியல் புயலின் வேகத்திற்கு முன்னாள் இந்த இரண்டு தீபங்களுமே கிட்டத்தட்ட அணைந்து விட்ட நிலையில், இன்னும் சில புதிய முகங்கள், தங்களை மாற்று சக்தியாக அடையாளப்படுத்திக் கொள்ள முயன்று களத்தில் மெள்ள எட்டிப் பார்க்கின்றனர். 

அந்த வரிசையில், கமல்ஹாசன், ரஜினாகாந், ஆகியோரை மிக முக்கியமானவர்களாக  சொல்ல வேண்டும். ட்விட்டர் எனும் ஜன்னல் வழியே அரசியல் மைதானத்தை ஆழம் பார்த்த கமலால் தன் வார்த்தை ஜாலங்களால் மட்டுமே அரசியல் வர்ணம் பூசிக் கொள்ள முடிந்து. சிஸ்டம் கெட்டுவிட்டது என்று மேடையில் முழங்கி விட்டு தன் அரசியல் பயணம் குறித்து திட்டவட்டமாக எதையும் அறிவிக்காமல் தொடர்ந்து தன் ரசிகர்களையும் ஆதரவாளர்களையும் எதிர்பார்ப்புக்குள்ளேயே வைத்திருக்கும் ரஜினி.. அடுத்து என்னசெய்யப்போகிறார் என்று அவருக்கே தெரியாத நிலையில் இருப்பதாகவே தெரிகிறது.. 

ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான் என்ற பஞ்ச் டைலாக் போல் ஆண்டவனின் உத்தரவுக்கு காத்திருக்கும் அவரை நம்பி,  காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் சிலகாலம் ஊடகங்களில் தோன்றி, மாற்றம் வந்துவிட்டது. இனி தமிழகத்தை ரஜினிதான் ஆளப்போகிறார் என்பது போல் பேசி வந்தார். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளை தொடங்கி விட்டார். ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி. அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் திருச்சியில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் அவசியம் என்று வலியுறுத்தி அரசியல் விழிப்பு உணர்வு மாநாடு ஒன்றையும் நடத்தினார். 

கைநழுவிப் போனதா கடைசி வாய்ப்பு

அரசியல் விழிப்பு உணர்வு  மாநாட்டு மேடையில் பேசிய தமிழருவி மணியன், திமுகவும், அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இக்கட்சிகளைத் தமிழகத்திலிருந்து அகற்றவேண்டும் என காமராஜர் இறுதிமூச்சு உள்ளவரைக் கூறினார். அதை நிறைவேற்ற பல  முயற்சிகளை எடுத்தேன். ஆனால் எதுவுமே பலனளிக்கவில்லை. கடைசிக் கருவியாக ரஜினி கிடைத்துள்ளார் என்று கூறினார்.

ஆனால், அந்த மாநாட்டுக்குப் பிறகு தமிழருவி மணியன் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. தமிழருவி மணியன் கடைசி வாய்ப்பாக கருதியதும் கைநழுவிப் போனதா..! ரஜினிக்காக அவர் முன்னெடுத்த ஒவ்வொரு அடியும் புதிய அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கியதாக இருந்தது, ஆனால் அந்த முன்னெடுப்பு முன்னேற்றத்தை கண்டிருந்தால்.. இடைவேளை எதற்கு.. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் என்பது போல தமிழருவி மணியன் செயல்பாடுகள் குறித்து எந்த செய்தியும் இல்லாமல் இருப்பது ஏன்...? 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் நடிகர் விஷால் கூட எதிர்பாராத ஒரு பரபரப்பை ஏற்படுதிச் சென்றுவிட்டார். எதிர்பார்த்து, ஆவலை தூண்டி, மக்களை காத்திருக்க வைத்திருக்கும் ரஜினியோ, திமுகவையும் அதிமுகவையும் முற்று முழுதாக தோற்கக்கடிக்க வேண்டும் என நினைக்கும் தமிழருவி மணியனோ ஏன் இந்த நிலையிலும் மெளனமாக உள்ளனர். 

மாற்றத்தை ஏற்படுதியே ஆக வேண்டும் என முனைப்போடு செயல்படும் தமிழருவி மணியன், காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்தல் களத்தில் நின்ற வேட்பாளர்கள், 2 ஆயிரம் வாக்குகள் கூட பெறமுடியாமல் இருப்பதால் பொதுவாழ்விற்கு முற்றுப் புள்ளி வைப்பதாக கடந்த ஆண்டில் அறிவித்தார். தூய்மையான அரசியல் வாழ்வையும் தன்னிகரற்ற காந்திய கொள்கையையும் மூச்சாக  கொண்ட அவருக்கு முட்டுக்கடையாக இருப்பது எது..? கெட்டுப் போய்விட்டதாக ரஜினி சொல்லும் அந்த சிஸ்டமா, அல்லது, தமிழருவி மணியன் எடுக்கும் முடிவுகளா..? என்ற கேள்வி சாமானியனுக்கும் எழுகிறது. 

நெருங்குகிறது ரஜினியின் பிறந்த நாள்

தமிழகத்தில் மாறி மாறி கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டு  கொண்டிருக்கிற இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒர் புதிய நாகரிகமான மக்கள் நலன் சார்ந்த மாற்று அரசியல் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர பாடுபடும் அவர் ரஜினியை முன்னிறுத்தி மீண்டும் பொதுவாழ்வில் இறங்கினார்.

இப்போது வந்துவிடும், அப்போது வந்துவிடும் ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு என்று ஆவல் காட்டியவர்கள் அனைவருமே ரஜினியின் பிறந்த நாள் தினம் வரும் வேளையில் கூட மெளனமாகவே இருக்கிறார்கள் என்றால் என்னவென்று புரிந்து கொள்வது.. இவர்களின் சொல்லாட்சி உள்ளாட்சிக்கு முன்பாவது பலிக்குமா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com