இதுவும் ஒரு போராட்டம்தான்.. காவிரிக்காக குரல் கொடுக்கும் திரையுலகினர் கவனத்துக்கு!

இதுவும் ஒரு போராட்டம்தான்.. காவிரிக்காக குரல் கொடுக்கும் திரையுலகினர் கவனத்துக்கு!

விவசாயத்தை, குறிப்பாக குறு சிறு விவசாயிகளை அழிப்பதற்காக  மிகப்பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது பெரும்பாலான பேருக்கு நன்கு தெரிந்திருக்கின்றது.  அந்த ஆதங்கம் பல வழிகளில்

விவசாயத்தை, குறிப்பாக குறு சிறு விவசாயிகளை அழிப்பதற்காக  மிகப்பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது பெரும்பாலான பேருக்கு நன்கு தெரிந்திருக்கின்றது.  அந்த ஆதங்கம் பல வழிகளில் வெளிப்பட்டு வருகின்றது. ஆனால், ஆதங்கமே போதுமானதா? கோபத்தை போராட்டங்களின் வாயிலாக வெளிப்படுத்தினால் மட்டுமே பிரச்னை தீர்ந்துவிடுமா என்றால் நிச்சயம் இல்லை என்பது நிதர்சனம்.

விவசாயத்தில் ஏற்பட்டிருக்கும் அத்தனை பிரச்னைகளுக்குமான மூல காரணங்கள் 

  • 1. விவசாயம் லாபகரமானதாக இல்லாமல் போனது, குறிப்பாக சிறு குறு விவசாயிகளுக்கு. 
  • 2. பயிர்மேலாண்மை செய்வதில் உள்ள கடினத்தன்மை.

விவசாயத்தில் அப்படி என்னதான் பிரச்சனை? 

  • 1. தண்ணீர் இல்லாமல் அல்லது பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னை.  
  • 2. தண்ணீர் இருந்தும், உற்பத்திக்குறைவு, விளைபொருள் தரமின்மை, தரமான இடுபொருள்கள் கிடைப்பதில் உள்ள தடைகள், சிறந்த பயிர் மேலாண்மைக்கான உகந்த தகவல்களை பெறுவதில் உள்ள இடைவெளி, அதிகரித்து வரும் உற்பத்திச்செலவு, பல நிலை இடைத்தரகர்கள் மூலம் விளை பொருளை விற்பனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம், விலை வீழ்ச்சி போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகள்.
  • 3. பருவகால மாற்றங்களால் ஏற்படும் இழப்புகள்

இவற்றில் தண்ணீர் பற்றாக்குறையினால் ஏற்படும் சிக்கல்கள்  காவிரி நீர் பிரச்னை வாயிலாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. எனவே இந்த பதிவில் அது தொடர்பான விஷயங்களுக்கான தீர்வை பற்றி பார்ப்போம்.

காவிரி போராட்டத்துக்கும் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கும் என்ன சம்பந்தம்? இல்லை என்று சொல்லிவிட முடியாது. தமிழ்நாடு ஒரு முக்கியப் பிரச்னையில் இருக்கிறது. விவசாயிகள் வாழ்க்கையை பற்றிய பயத்தில், துக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில் பிரம்மாண்டமான கேளிக்கைகள் என்பது அவர்களை மேலும் வருத்தப்படுத்தும், காயப்படுத்தும் என்பதுதானே. அதுதான் உண்மையென்றால் விவசாயிகளின் தண்ணீர்ப் பிரச்னைக்கு நீண்டகால தீர்வை நம்மால் ஏற்படுத்த முடியும்.

காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை பெற்றுத்தரும் முயற்சிகள் ஒருபுறம் தொடரட்டும். ஆனால், தமிழகத்தின் பல பகுதிகளில் இருக்கும் கண்மாய், ஏரிகள், குளங்கள் என சிறு நீர்நிலைகள் மூலமாக தமிழக விவசாயம் மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டிருந்தது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை இன்று  மிக மோசமான நிலையில் உள்ளன. பல கைவிடப்பட்டிருக்கின்றன.  பல காணாமல் போயிருக்கின்றன. விவசாயத்தின் முக்கியத்துவம் மறந்திருந்த காலங்களில் விளைந்த நிகழ்வே இது. ஆனால் இன்று விவசாயத்தின் முக்கியத்துவம் உணரப்பட ஆரம்பித்திருக்கிறது. இது நல்ல அறிகுறி என்றாலும், அந்த உணர்வு, ஆர்வம், ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட்டு விவசாயத்தின் மறுசீரமைப்பிற்கு வழி வகுப்பதாக இருக்கவேண்டுமே தவிர, வெறும் போராட்டங்களில் நமது சக்தியை வீணடிப்பதாக இருக்கக் கூடாது. அதற்கான வழிமுறை ஒன்றைக்காண்போம். செயல்படுத்துவோம்.

தமிழக கிராமத்தினருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு வேண்டுகோள்:

தங்கள் கிராமத்தில் உள்ள நீர் நிலைகளை பட்டியலிடுங்கள். கிராமத்தில் இருக்கும் பெரியவர்களின் துணையோடு அந்தந்த நீர்நிலைகளுக்கான நீர்வரத்து பற்றிய வழித்தடங்களை குறித்துக்கொள்ளுங்கள். நீர்நிலையை சரிசெய்தல் மற்றும் மழை பெய்யும் போது நீர் எளிதில் நீர்நிலைகளைச் சேர்வதற்கான மராமத்து பணிகளுக்கான செலவுகளை மதிப்பீடு செய்யுங்கள். பெரும்பாலான கிராமங்களில் உள்ள இளைஞர்கள் கிராம நல நிதி சேகரித்து வைத்துள்ளனர். அவற்றை இதற்கு உபயோகப்படுத்துங்கள். இல்லையெனில், மக்களிடம் இந்த இயக்கத்திற்கான முக்கியத்துவத்தை கூறி நிதி சேகரியுங்கள். சில இடங்களில் அது சாத்தியமில்லையெனில் தேவைப்படும் நிதியை பொதுநலம் கொண்டவர்களிடம் அமைப்புகளிடம் கோருங்கள். விவசாயத்தின் மறுசீரமைப்பு அவசியம் என்று நாடு உணர்ந்திருக்கும் நிலையில், நல்லவர்களின் பங்களிப்பு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு நிச்சயம் இருக்கும். அதற்கு தேவைப்படும் இணையத்தள சேவையை Mission  IT - Rural விரைவில் ஏற்படுத்தும்.  நீர்நிலை வாரியாக தேவைப்படும் நிதியை திரட்டுவது மற்றும் செய்யப்பட்டுவரும் வேலைகளின் நிலையை தொடர்ந்து பதிவு செய்வது நம்பகத்தன்மையையும், வேலை சிறப்பாக செய்து முடிக்கப்படுவதற்கும் இது துணைபுரியும். திரட்டப்படும் தொகையை அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த தலைவர்களே நிர்வகிக்கவும் வழி செய்து கொள்ளலாம்.

நாம் எப்படி ஐபிஎல் போட்டி வேண்டாம் என்று சொல்கிறோமோ, அதே அடிப்படையில், கிராமங்களில் நடைபெறும் மிகப்பெரிய கொண்டாட்டங்களை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைத்து அதற்கு திரட்டப்படும் அல்லது செலவிடப்படும் தொகையை நீர் நிலைகளுக்கு உயிர்கொடுக்க பயன்படுத்தலாம்.

இந்த ஒரு ஆண்டு மட்டும் கிராம அளவில் செய்யப்படும் பொது செலவினங்களை தவிர்த்து, குறைத்துகொள்வது மிகுந்த பலனைத்தரும். ஐபிஎல் மற்றும் இன்று காவிரிக்காக குரல் கொடுத்திருக்கும் திரையுலகத்தினர் போன்ற பெரும் நிதி வலிமை பெற்றிருக்கும் அமைப்புகள் தங்கள் லாபத்தில் இந்த இயக்கத்திற்கு உதவ முன்வருவார்களேயானால் கிராம மக்கள் நம்பிக்கையுடன் நன்றியுடன் பெருமையுடன் கிராம நீர்நிலைகளை குறுகிய காலத்தில் சீர்படுத்தி, வரும் மழைக்காலத்திலேயே அதன் பயனை பெறுவதற்கு துணைபுரியும்.

இதற்கு முதல் படியாக சிவகங்கை மாவட்டம், கல்லால் ஒன்றியம், வேப்பங்குளம் பஞ்சாயத்தில் இந்த அணுகுமுறை செயல்பட உள்ளது. திட்ட அறிக்கை தயாரிப்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் திட்ட அறிக்கை வெளியிடப்படும்.  தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் இந்த அணுகுமுறை செயல்படுவதற்கு உந்துதலாகவும், முன்னுதாரணமாகவும் அமையும்.

எனவே, நமக்குத் தெரியாமல் நாமே தொலைத்த நீர் ஆதாரங்களை இந்த ஆண்டுக்குள் தேடிக் கண்டெடுத்துவிட்டால், விவசாயத்துக்குத் தேவையான பெரும்பகுதி நீரை நாமக்கு வருண பகவானே கொடுத்து விடுவார். அதற்காக எந்த வாரியத்திடமும் நாம் கெஞ்சத் தேவையில்லை. 

ஒரு தேவைக்காக நாம் போராடிக் கொண்டிருக்கும் போது, அதற்கான தீர்வு நம் கையிலேயே இருக்கிறது என்றால்.. இன்னமும் போராடுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போன்றது. எனவே இன்றே இறங்குவோம். நீர் நிலைகளை மீட்போம்.

மாடுகளை அழிப்பதன் மூலம் விவசாயத்தை முடக்க நடந்த முயற்சியை தமிழ்நாடு எப்படி முறியடித்தது என்பதை உலகம் அறியும். இப்போது தண்ணீர் மூலம் அந்த முயற்சி நடக்கிறது. புதிய அணுகுமுறை மூலம் இதையும் முறியடிக்கலாம். கிராமங்களில் இருந்துகொண்டே.

Thiruchelvam Ramu
Originator & Project Director
Mission IT-Rural
www.it-rural.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com