கேரளாவில் உள்ள குருவாயூரப்பன் கோயில் அம்மாநில மக்கள் மட்டுமல்லாமல், வெளி மாநில, வெளி நாட்டுப் பயணிகளையும் அதிகம் ஈர்க்கும் கோயிலாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர் முருகன் கோயில்களைப் போல கேரளாவில் குருவாயூரப்பன் கோயில், பத்மநாபசுவாமி கோயில்கள் புகழ்பெற்றவை. பக்தர்களால் அதிகம் விரும்பப்படுவதும் வழக்கம்.
குழந்தைகளுக்கு அன்னமூட்டுவது போன்ற வைபவங்களையும் மலையாள மக்கள் குருவாயூரப்பன் கோயிலில் மேற்கொள்வது வழக்கம்.
தற்போது, குருவாயூரப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை விட, திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கும் பத்மநாபசுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக 2011ம் ஆண்டு பத்மநாபசுவாமி கோயிலில் விலை மதிப்பில்லாத தங்கப் பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்ட பிறகு, அந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த 2017ம் ஆண்டு, அதாவது கோயிலின் வரலாற்றிலேயே முதல் முறையாக குறைந்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு குருவாயூரப்பன் கோயிலுக்கு வந்து கிருஷ்ணரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை 21.38 லட்சமாகும். இது கடந்த 2016ம் ஆண்டு பக்தர்களின் வருகையான 23.36 லட்சத்தைக் காட்டிலும் 1.98 சதவீதம் குறைவாகும்.
அதே சமயம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாபசுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது, 2017ம் ஆண்டு இக்கோயிலுக்கு 12.17 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதுவே கடந்த 2016ல் 10.26 லட்சமாக இருந்துள்ளது. 2016ஐ ஒப்பிடுகையில் சுமார் 18,63 சதவீத பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அதாவது 2013ம் ஆண்டில் 8.27 லட்சமாக இருந்த பக்தர்களின் வருகை தற்போது 12 லட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும், ஆண்டு தோறும் பக்தர்களின் வரகை 47 சதவீதம் உயர்வதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
பத்மநாபசுவாமி கோயிலில் ஏராளமான பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், கோயிலின் புகழ் பலரையும் சென்றடைந்ததால், பக்தர்களின் வருகை அதிகரித்திருந்தாலும், குருவாயூரப்பன் கோயிலின் பக்தர்களின் வருகை பத்மநாபசுவாமி கோயிலின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக சுற்றுலாத் துறை கூறுகிறது.
இது குறித்து பத்மநாபசுவாமி திருக்கோயிலின் செயற்குழு அதிகாரி வி. ரதீசன் கூறுகையில், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, கோயிலில் பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பக்தர்களின் வருகை மிக அதிக அளவில் அதிகரித்திருப்பதாகவும், வட இந்தியர்களே அதிக அளவில் கோயிலுக்கு வருவதாகவும் கூறுகிறார்.
தீபாவளி, ராம நவமி போன்ற பண்டிகைகளின் போது கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் முதல் 30 ஆயிரமாக இருப்பதாகவும் கூறுகிறார்.
பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்தாலும், குருவாயூர் கோயிலின் வருவாயை பத்மநாபசுவாமி திருக்கோயில் எட்டுவது எளிதல்ல என்றும், பதமநாபசுவாமி திருக்கோயிலின் மாத வருவாய் 30 லட்சமாக இருக்கும் நிலையில், குருவாயூரப்பன் கோயிலின் மாத வருவாய் ரூ.4 கோடிகள் முதல் 5 கோடிகள் வரை இருப்பதாகவும் தெரிய வருகிறது.