க.நா.சு.வின் இலக்கியச் சாதனையாளர்கள்: நூல் அறிமுகம் | விமர்சனம்

க.நா. சுப்ரமண்யத்தின் இலக்கியச் சாதனையாளர்கள்  வரிசையில் எழுத்தாளர்களைப் பற்றி...
இலக்கியச் சாதனையாளர்கள்
இலக்கியச் சாதனையாளர்கள்

அறிஞர் வெ. சாமிநாத சர்மாவுக்குப் பிறகு ஏராளமான மொழிபெயர்ப்புகளைச் செய்து, இணைய தளங்களெல்லாம் இல்லாத காலத்திலேயே, தமிழுக்கு அயல் எழுத்துகளை அறிமுகப்படுத்திய சிலரில் க.நா. சுப்ரமண்யமும் ஒருவர்.

சிறப்பான நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியிருந்தபோதிலும் பல அயல்மொழி நாவல்களை மொழிபெயர்த்திருந்தபோதிலும் க.நா.சு. என்றதுமே நினைவுக்கு வருவன அவருடைய விமர்சனங்கள்தான். விமர்சனங்களை முதன்மைப்படுத்திதான் பெரும்பாலும் அவர் அறியப்படுகிறார்; அதனாலேயே அவர் விமர்சிக்கவும்படுகிறார்.

க.நா.சு. தில்லியிலிருந்து சென்னைக்குத் திரும்பிவந்து தங்கியிருந்தபோது, 1990-களின் தொடக்கத்தில் குங்குமம் வார இதழில், சாவிக்குப் பின், பாவை சந்திரன் பொறுப்பில் இருந்த காலத்தில், க.நா.சு. பக்கம் என வரிசையிட்டு, இலக்கியச் சாதனையாளர்களான எழுத்தாளர்கள் பற்றி எழுதிய அறிமுகமும் விமர்சனங்களும்தான் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு புதுப் பதிப்பாக வெளிவந்திருக்கிறது.

முதல் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில், ‘க.நா.சு.வின் பார்வை துல்லியமாகக் காணப்படுகின்றது. அவரது அணுகுமுறை தனித்தன்மை வாய்ந்தது. கருத்து வெளிப்பாடு சுயேச்சையானது’ என மிகச் சரியாகவே குறிப்பிடுகிறார் மணிவாசகர் பதிப்பக ச. மெய்யப்பன்.

‘உண்மை என்பது இருக்கிறதே அது பல முகங்களுடையது. ஒரே மனிதர் பற்றித்தான் பேசுகிறோம் என்றாலும் அவர் பல முகங்களை உடையவராக, பலருக்கும் வேறுவேறு முகங்களைக் காட்டியவராக இருக்கக் கூடும். இது உண்மை என்கிற தத்துவத்தின் குறையே தவிர ஆள்களின் குறையல்ல. என்னைப் பற்றிய வரையில், நான் நினைவுகூர்கிற வரையில் இதுதான் முழு உண்மை என்று சத்தியம் செய்யத் தயார்’ என்று குறிப்பிட்டு, தான் அறிந்த எழுத்தாளர்களைப் பற்றி ஏராளம் எழுதியிருக்கிறார் க.நா.சு.

‘தமிழ்நாட்டில் பலர், யாரைப் பற்றியும் தங்கள் அந்தரங்கத்தில் நினைப்பதைச் சொல்லத் தயாராக இருப்பதில்லை. அதில் அசௌகரியங்கள் இருப்பதை உணர்கிறார்கள்’ என்று குறிப்பிடும் க.நா.சு., கட்டுரைகளில் எழுத்தாளர்களைப் பற்றித் தான் நினைத்ததைத் தயக்கமின்றி – அவரவர் நிறைகுறைகளுடன் - பதிவு செய்திருக்கிறார்.

நூலின் முதல் கட்டுரை - ராஜாஜி பற்றியதில் ‘சாப விமோசனம்’ சிறுகதை வெளிவந்த மறுமாதத்தில், ‘ராமன் லட்சியபுருஷன், வால்மீகி மகரிஷி, அவர் எழுதிய காவியத்தில் எல்லாம் கைவைக்கப் புதுமைப்பித்தன் போன்ற நபர்களுக்கு இடம் கிடையாது’ என்று ராஜாஜி எழுதியதை, ‘எத்தனையோ கெட்டிக்காரரும் அறிவுபூர்வமான சிந்தனைகளைத் தொடக்கூடிய சக்தி வாய்ந்தவருமான அவர் (ராஜாஜி) எழுதியவற்றிலேயே மிகவும் அசட்டுத்தனமானதாகக் கருதினேன்’ என்று அதிரடிக்கிறார் க.நா.சு.

மேதை என்ற சொல்லுக்கு ஓர் இலக்கணமாக இருந்தவர் புதுமைப்பித்தன் என்று கசிந்துருகும் க.நா.சு., ‘ஒரு பத்து வருஷங்கள் அவருடைய அமைதி தராத நட்பு’  தமக்குக் கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார். ‘தமிழில் எழுத ஆரம்பித்திருந்த நான் தொடர்ந்து எழுதுவது என்கிற விஷயம் அவருடைய பாதிப்பினால்தான் ஏற்பட்டது’ என்று கூறும் க.நா.சு., அதேவேளை, தன்னுடைய முதல் கதைத் தொகுப்பு ‘அழகி’யைக் குருவினிடமிருந்து சிஷ்யனுக்கா? சிஷ்யனிடமிருந்து குருவுக்கா? என்று எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தபோது, வாங்கி அந்தப் பக்கத்தைக் கிழித்தெறிந்துவிட்டுப் புத்தகத்தைப் புதுமைப்பித்தன் வைத்துக்கொண்டதையும் தெரிவித்துவிடுகிறார்.

‘மருந்துச் செலவுக்குக்கூட சிரமப்படுகிறது. பண உதவி தேவை’ என்று எனக்கு ஒரு கார்டு எழுதி, அதை அடித்துவிட்டு ‘இன்று புதுமைப்பித்தன் காலமானார்’  என்று திருவனந்தபுரத்திலிருந்து நண்பர் ரகுநாதன் எழுதியிருந்ததை நினைவுகூர்கிறார் க.நா.சு.

மேதை என்ற வார்த்தைக்கு இலக்கணம் புதுமைப்பித்தன் என்றால் எழுத்தில் உற்சாகம் என்ற வார்த்தைக்கு வ.ரா. என்ற திருப்பயணம் வ. ராமசாமி அய்யங்கார் என்று குறிப்பிட்டு, மணிக்கொடி என்ற பத்திரிகையை ஆரம்பித்துவைத்து, தமிழ் மறுமலர்ச்சி மரமாக, வளர்ந்து, பூத்து, காய்த்து, கனிந்து வருவதற்கு வழிவகுத்தவர் என்று பாராட்டுகிறார்.

பாரிஸ் மாநாட்டில் சந்தித்த அமெரிக்க நாவலாசிரியர் வில்லியம் ஃபாக்னரின் குணங்களைப் பற்றிக் குறிப்பிடும்போதே, மற்றோர் எழுத்தாளரான கிளென்வே வெஸ்காட் பற்றியும் அவருடைய கருத்துகளையும் தெரிவிக்கிறார்.

கன்னடத்தின் பெருமையான மாஸ்தி வெங்கடேச ஐயங்காரை வீட்டில் தமிழ் பேசுகிறவர் என்று குறிப்பிடுகிறார்.  ‘பரிசுக்காக யாரும் நூல்கள் எழுதுவதில்லை... பரிசு பெறுவதனால் நூல்கள் சிறப்படைவதில்லை. சிறப்பான நூல்கள் பரிசு பெற வேண்டும்’ என்ற மாஸ்தியின் கருத்தைப் பதிவு செய்யும் க.நா.சு., தாய் உடல் நலமின்றி இருந்தபோது, ஒரு பத்தாண்டு காலம் பெங்களூரைவிட்டு வெளியே வரச் சம்மதிக்காதிருந்த மாஸ்தியின் உறுதியையும் ‘தாயார் பக்கத்தில் இல்லாமல் எனக்கு எங்கே என்ன பெரிய வேலை காத்துக்கிடக்கிறது?’ என்று அவர் சொன்னதையும் நினைவு கூர்கிறார்.

கு.ப. ராஜகோபாலனுடன் பேசுவது மிகவும் சுகமான அனுபவமாகவே ஒவ்வொரு தடவையும் அமையும் என்பது தம் அனுபவம் என்றதுடன், மற்றவர்களின் சிறுகதைகளைப் பலரிடமும் அவர் பாராட்டிச் சொல்வதைக் குறிப்பிட்டு, இது தமிழில் மற்றவர்களிடம் இல்லாத குணம் என்கிறார் க.நா.சு.

ழான் பால் சார்த்தர், ஆல்பர் காம்யூ, ஆண்ட்ரே மால்ரோ பற்றிக் குறிப்பிடும் க.நா.சு., பாரிஸில் காம்யூவின் வீட்டிலோர் அறையில் ஒன்பது மாதங்கள் தங்கியிருந்ததையும் உரையாடல்களில் இந்திய சமுதாய, தத்துவ, வாழ்க்கை விஷயங்கள் பற்றி அவருக்கிருந்த தாகத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.

யாரையும் அவ்வளவு எளிதில் புகழ்ந்துவிடாத புதுமைப்பித்தனே, மிகவும் சுவாரசியமான மனிதர் எனப் புகழ்ந்தவர் என மௌனியைக் குறிப்பிடும் க.நா.சு., மௌனிதான் புனைபெயரே தவிர அவருக்குப் பேச அதிகமாக, மிக அதிகமாகப் பிடிக்கும் என்பதுடன், மௌனி என்ற புனைபெயரும்கூட அவருக்கு சற்றுக்  கேலியாக ஒருவர் அளித்ததுதான் என்ற தகவலைக் கூறி, அவருடைய கதைகள் அமர இலக்கியத் தன்மை பெற்றவை என்று பாராட்டுகிறார்.

டி.எஸ். சொக்கலிங்கத்தைப் பற்றி எழுதும்போது மணிக்கொடியையும் நவயுகப் பிரசுராலயத்தையும் உருவாக்கி நடத்தியதில் பெரும் பங்கு சொக்கலிங்கத்துக்கு உண்டென்று நினைவுபடுத்தி, அவருடைய ஆதரவினால்தான் புதுமைப்பித்தன், இளங்கோவன், ஓரளவு ராமையாகூட தொடர்ந்து எழுதுவது சாத்திமாயிற்று என்கிறார்.

கல்கி, பி.எஸ். ராமையா, தி. ஜானகிராமன், எஸ்.வி.வி., ஏ.கே. செட்டியார், கம்பதாஸன், தி.ஜ. ரங்கநாதன், வை. கோவிந்தன், கிருஷ்ணன் நம்பி, மணிக்கொடி கி.ரா., கொத்தமங்கலம் சுப்பு என நாற்பதுக்கும் அதிகமானவர்களைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார் க.நா.சு.

நூல் முழுவதும் எழுத்தாளர்களைப் பற்றி மட்டுமின்றி, அவர்களுடைய எழுத்துகளையும் சிறந்த படைப்புகளையும், மேலதிகமாக அவர்களுடைய நுட்பமான பழக்கவழக்கங்களையும் வாசகர்கள் அறியத் தருகிறார் க.நா.சு.

தனது மொழிபெயர்ப்புகளின் மூலம் அயல்மொழி இலக்கியங்கள் பலவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தவரான க.நா.சு., இந்த நூலின்வழி  தமிழின் பெருமைகளான எழுத்தாளர்களைப் புதிய வாசகர்களுக்கு அடையாளம் காட்டுகிறார்.

நூலைப் படித்து முடிக்கும்போது, ஏதோ கால எந்திரத்தில் பின்சென்று எண்ணற்ற எழுத்தாளர்களுடன் கைகுலுக்கிக் கலந்துரையாடி மனமகிழ்ந்து திரும்பி வந்ததைப் போன்ற அனுபவத்தைத் தம் எழுத்துகள் வழியாக வாசகர்களுக்கு அளித்திருக்கிறார் க.நா. சுப்ரமண்யம்.

இலக்கியச் சாதனையாளர்கள் – க.நா. சுப்ரமண்யம், பக்கங்கள் – 192, விலை – ரூ. 200, கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், 5, முத்துக்கிருஷ்ணன் தெரு, முதல் தளம், பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை – 600 017, செல்போன்: 9791071218

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com