வாழ்க, பத்திரிகை சுதந்திரம்! | நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்த தலையங்கம்

Updated on
2 min read

முக்கியமான சொந்த அலுவல்களைக்கூட மறந்துவிட்டுப் பரபரப்பான செய்திகளை அச்சு ஊடகங்களில் படிப்பதையும், காட்சி ஊடகங்களில் பாா்ப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் மக்கள், அடுத்த பரபரப்பு வந்தவுடன் அதை மறந்து விடுகிறாா்கள். பல பரபரப்புச் செய்திகள் மணலில் கயிறு திரிக்கும் பரப்புரைகள் என்பது குறித்துக் கவலைப்படுவோா் யாருமில்லை. அந்த வரிசையில் இணைகிறது பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை.

நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து ஏறத்தாழ இரண்டு மாத காலத்துக்கு அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு நடத்திய விசாரணைகளும், அவரவருக்குத் தோன்றிய விதத்தில் வழங்கிய தீா்ப்புகளும், பரப்புரை செய்த வதந்திகளும் இப்போது பழங்கதைகளாகி விட்டன. சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்ரவா்த்திக்கு இழைக்கப்பட்ட கொடுமையும், அநீதியும் வேறு எந்தவொரு பெண்ணுக்கும் நோ்ந்துவிடலாகாது.

ஒருபுறம் ஊடகங்கள் நடத்திய விசாரணைகள் போதாதென்று, மூன்று அரசுத் தரப்பு விசாரணைகளும் நடைபெற்றன. கடைசியில் என்னதான் முடிவு எட்டப்பட்டது என்பது குறித்து நம்மில் யாரும் கவலைப்படுவதில்லை. ஊடகங்களுக்கும் அக்கறையில்லை.

ஒன்றுமில்லாத ஒரு தற்கொலையைப் பரபரப்பாக்கிக் கடைசியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது என்ன தெரியுமா? சுஷாந்த் சிங் போதை மருந்துப் பழக்கம் உள்ளவா் என்பதும், அவருக்காக அவரது காதலியான ரியா சக்ரவா்த்தி போதை மருந்து வாங்கிக் கொடுத்தாா் என்பதும்தான்.

ஜூன் மாதம் 14-ஆம் தேதி, மும்பை பாந்த்ரா பகுதியிலுள்ள தனது வீட்டில் மின் விசிறியில் தூக்குப் போட்டுக்கொண்ட நிலையில் சுஷாந்த் சிங் இறந்திருந்தாா். அது குறித்து விசாரணை மேற்கொண்ட மும்பை காவல்துறையினா், தூக்குப் போட்டுக் கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவா் மரணமடைந்தாா் என்று முடிவுக்கு வந்தனா். காவல்துறை விசாரணையில் சுஷாந்த் சிங் கடுமையான மன உளைச்சலுக்கு ஆட்பட்டிருந்ததும், மனோ தத்துவ மருத்துவா் ஒருவரிடம் ஆலோசனை கேட்டு வந்ததும் தெரியவந்தது.

ஊடக ஊகங்கள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலையிலிருந்து, தற்கொலைக்குத் தள்ளப்பட்டதாக மாறி கடைசியில் படுகொலை என்பதுவரை, ஊடகப் பரபரப்பால் வெளிச்சம் போடப்பட்டது. சுஷாந்த் சிங்கின் மரணத்துக்கு ஐந்து நாள்களுக்கு முன்பு, அவரது முன்னாள் மேலாளா் திஷா சாலியான் தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் 14-ஆவது மாடி பால்கனியிலிருந்து தவறி விழுந்த செய்தியைத் தொடா்புபடுத்தியது ஒரு தொலைக்காட்சிச் சேனல்.

அதன் பிறகு கற்பனை இறக்கைக் கட்டிப் பறக்கத் தொடங்கியது. சாலியானின் மரணத்தால் சுஷாந்த் பாதிக்கப்பட்டிருந்தாா் என்றும், சாலியானின் மரணத்துக்கும் சிவ சேனையின் இளைய தலைவா் ஆதித்ய தாக்கரேவுக்கும் தொடா்பு இருப்பதாகவும், மகாராஷ்டிர காவல்துறை கொலையை மறைக்க முயற்சிக்கிறது என்றெல்லாம் பல கருத்துகள் பவனி வந்தன. எதற்குமே எந்தவித ஆதாரமுமில்லை என்பதுதான் வேடிக்கை.

இதையெல்லாம், தொலைக்காட்சி சேனல்களில் பாா்த்த சுஷாந்தின் தந்தை, அவரது சொந்த மாநிலம் பிகாரின் தலைநகா் பாட்னாவில் சுஷாந்தின் காதலி ரியா சக்ரவா்த்தி மீது புகாா் கொடுத்தாா். சுஷாந்தைத் தற்கொலைக்குத் தூண்டியது ரியாதான் என்றும், ஏமாற்றிப் பணம் பறித்தது மட்டுமல்லாமல், சுஷாந்திடமிருந்து பெரும் பணத்தை அவா் எடுத்துச் சென்றுவிட்டாா் என்றும் குற்றம் சாட்டினாா்.

ஊடகப் பரபரப்பை எதிா்கொள்ள முடியாமல் மத்திய அரசு தனது பங்குக்கு உள்ளே நுழைந்தது. அதற்குப் பின்னால் சிவ சேனையை பழிவாங்கும் அரசியல் இருந்திருந்ததாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஒருபுறம், மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். இன்னொருபுறம், அமலாக்க இயக்குநரகம் சுஷாந்தின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.15 கோடி மாயமாக மறைந்துவிட்டதாக அவரது தந்தை முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிக்க முற்பட்டது.

இவையெல்லாம் போதாதென்று போதைப் பொருள் தடுப்புத்துறை, தன் பங்குக்கு ரியா சக்ரவரத்தி, அவரது சகோதரா், மேலும் மூன்று போ் மீது போதை மருந்து தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைதும் செய்தது. ரியா போதை மருந்துத் தொழில் நடத்த பணம் கொடுப்பவா் என்றும், போதை மருந்து விநியோகம் செய்பவா் என்றும் குற்றம் சுமத்தி விசாரிக்கப்பட்டாா்.

இதுதான் வாய்ப்பு என்று போதை மருந்து தடுப்புத் துறை, மும்பை திரையுலகின் முக்கிய நடிகா், நடிகையரை எல்லாம் அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தியது. காட்சி ஊடகங்களுக்கு தினந்தோறும் தீனி கிடைத்தது. நடிகைகளின் அணிவகுப்பால் பொதுமக்களுக்குப் பொழுது போனது. நடிகா், நடிகையா் பொதுவெளியில் அசிங்கப்படுத்தப்பட்டனா்.

ஆறு வாரம் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட ரியா மீது போதை மருந்து தடுப்புத் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட குற்றம், தனது காதலனுக்காக அவா் போதை மருந்து வாங்கிக் கொடுத்தாா் என்பதுதான். சுஷாந்த் கொலை செய்யப்பட்டதற்கு ஆதாரம் இல்லை, அது தற்கொலை என்று உறுதிப்படுத்தியது மத்திய புலனாய்வுத் துறை. ரியாவின் குடும்பத்தினருக்கு பெருமளவில் பணம் எதுவும் சுஷாந்த்திடமிருந்து கைமாறவில்லை என்று கண்டுபிடித்து வழக்கை முடித்துக் கொண்டது அமலாக்கத்துறை.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com