Enable Javscript for better performance
இதுதான் சரியான தருணம்! | விமானிகளுக்கான தகுதிகாண் தேர்வு குறித்த தலையங- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இதுதான் சரியான தருணம்! | விமானிகளுக்கான தகுதிகாண் தேர்வு குறித்த தலையங்கம்

    By ஆசிரியர்  |   Published On : 21st July 2020 02:19 AM  |   Last Updated : 21st July 2020 02:19 AM  |  அ+அ அ-  |  


    அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தானியர்களைத் திரும்ப அழைத்துச் செல்ல, பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்துக்கு, 12 விமானங்களை இயக்குவதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.  

    அமெரிக்கா மட்டுமல்ல, ஐரோப்பியக் கூட்டமைப்பும் பாகிஸ்தான் சர்வதேச விமான இயக்கத்தைத் தடை செய்திருக்கிறது. ஏனைய பல விமான நிறுவனங்கள், பாகிஸ்தானிய விமானிகளும், பொறியியல் வல்லுநர்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிவதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டிருக்கின்றன. அவர்களுடைய உரிமம் குறித்த விசாரணைக்குப் பிறகுதான் அவர்களைப் பணியில் தொடர அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து சர்வதேச விமான நிறுவனங்கள் பலவும் முடிவெடுக்க இருக்கின்றன.

    கடந்த மே மாதம், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் நடந்த விமான விபத்தில் 97 பேர் உயிரிழந்தனர். விமானம் விபத்தில் சிக்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை, அதன் விமானிகள் கொவைட்-19 நோய்த் தொற்று குறித்து விவாதித்துக் கொண்டிருந்ததாகவும், விமானம் தரையைத் தொடும் நேரத்தில், ஏதோ ஞாபகத்தில் "கியரை' தவறாகப் பிரயோகப்படுத்திவிட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. அந்த விமானிகளின் ஓட்டுநர் உரிமம் போலியானது என்றும் கூறப்படுகிறது. விபத்துக்கு விமானிகள்தான் காரணம் என்று விசாரணை நடத்தியவர்கள் தெரிவித்திருப்பது பிரச்னையை மேலும் கடுமையாக்கியிருக்கிறது. 

    பாகிஸ்தான் அரசு, ஏற்கெனவே பதிவேட்டிலுள்ள விமானிகளில் மூன்றில் ஒரு பகுதியினரை, அதாவது 262 பேரை போலி உரிமம் காரணமாக, தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. அவர்களது உரிமங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. 

    பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மூன்று மிகப்பெரிய விமான விபத்துகள் குறித்த விசாரணைகள், விமானிகள்தான் விபத்துக்குக் காரணம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அந்த விமானிகள் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்பது மட்டுமல்ல, கவனக்குறைவாக இருக்கிறார்கள் என்பதும் பலமுறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

    அரசு அவசரப்பட்டு முடிவெடுத்து சர்வதேச அளவில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக  பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. கராச்சி விமான விபத்து குறித்த விசாரணையை அவசரப்பட்டு வெளியிட்டிருக்க வேண்டியதில்லை என்றும்,  850-க்கும் அதிகமான பாகிஸ்தான் விமானிகளில் ஒரேயடியாக 262 பேரை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்திருக்க வேண்டாமென்றும் கூறுகின்றன. ஆனால், சர்வதேச அழுத்தத்தை பாகிஸ்தான் தவிர்த்துவிட முடியாது என்று அரசு தெரிவிக்கிறது. 

    கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம், கடுமையான இழப்பை மட்டுமே எதிர்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் அதன் மொத்த இழப்பு 3.8 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 28,411 கோடி). வெறும் 30 விமானங்களை மட்டுமே இயக்கும் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் 14,000-க்கும் அதிகமான ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறது. இவையெல்லாம் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கியிருக்கின்றன.

    பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன விமானிகளின் உரிமம் கேள்விக்குள்ளாகியிருப்பது பாகிஸ்தானுக்கு வெளியேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆசியாவில் பாகிஸ்தான் மட்டுமல்லாமல் ஏனைய பல நாடுகளிலும்கூட விமானிகளின் போலி ஓட்டுநர் உரிமம் பிரச்னைக்குள்ளாகி இருக்கிறது. புதிய குறைந்த கட்டண விமான சேவைகள் அதிகரித்த நிலையில், எல்லா நாடுகளிலுமே விமானிகளுக்கான தேவை கடுமையாக உயர்ந்தது. ஆங்காங்கே பல தனியார் விமான ஓட்டுநர் பயிற்சிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அதன் விளைவாக, போலி ஓட்டுநர் உரிமங்கள் வெளிவரத் தொடங்கின.

    இந்தோனேஷியா, பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளில் நடத்தப்படும் விமான ஓட்டுநர் பயிற்சிக் கல்லூரிகள் மாணவர்களிடமிருந்து மிக அதிகக் கட்டணங்களை வசூலிக்கின்றன. ஆனால், விமானம் ஓட்டும் பயிற்சி மிகக் குறைந்த மணி நேரங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. உரிமம் வழங்கும்போது நிறைய நேரம் விமானம் ஓட்டிய பயிற்சி இருப்பதாகப் போலிச் சான்றிதழ் வழங்கப்படுவதால், ஆசியாவிலிருந்து வரும் விமானிகள் என்றாலே சர்வதேச அளவில் மிகவும் கவனமாகத்தான் வேலைக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். 

    இந்தியாவிலும்கூட பல குற்றச்சாட்டுகள் எழாமல் இல்லை. 2011-இல் முறையாக விமானம் ஓட்டிய அனுபவம் இல்லாத பல நூறு விமானிகள் தனியார் விமானங்களில் பணிக்குச் சேர்ந்திருப்பது தெரியவந்தது. எந்தவிதக் கேள்வியும் இல்லாமல் அவர்கள் வேலைக்குச் சேர்க்கப்பட்டிருந்தனர். உடனடியாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் அறிமுகப்படுத்தியது. தீவிரமான தேர்வுகளுக்குப் பிறகு, மருத்துவப் பரிசோதனை, மன அழுத்தம் இல்லாமை ஆகியவை உறுதி செய்யப்பட்டன. குறைந்தது 200 மணி நேரமாவது ஓட்டுநர் பயிற்சி மேற்கொண்டவர்கள் மட்டுமே சிவில் விமான போக்குவரத்து ஆணையத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் 70% க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

    கொவைட்-19 காரணமாக விமான சேவை முடங்கியிருக்கும் இந்த நிலையில், இந்திய விமானிகள் அனைவருக்கும் தகுதிகாண் தேர்வு நடத்தப்பட்டு, அவர்களுடைய தகுதி மறு உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாமும் பாகிஸ்தானைப்போல உலக நாடுகளின் ஏளனத்துக்கு ஆளாகிவிடக் கூடாது!
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp