Enable Javscript for better performance
என்னதான் இழப்பீடு? | எண்ணெய்க் கிணறு விபத்து குறித்த தலையங்கம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    என்னதான் இழப்பீடு? | எண்ணெய்க் கிணறு விபத்து குறித்த தலையங்கம்

    By ஆசிரியர்  |   Published On : 16th June 2020 03:48 AM  |   Last Updated : 16th June 2020 07:40 AM  |  அ+அ அ-  |  

    ஒட்டுமொத்த உலகமும் கொவைட் 19 தீநுண்மித் தொற்று அச்சத்தில் உறைந்து கிடக்கும் நிலையில், பல நிகழ்வுகளும் செய்திகளும் முக்கியத்துவம் இழந்து கவனத்துக்கே வருவதில்லை. அஸ்ஸாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் எண்ணெய்க் கிணறு விபத்து குறித்த செய்தி கவனம் பெறாமல் போனதில் வியப்படைய ஒன்றுமில்லை. ஆனால், அதனால் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பும், பல்லுயிா்ப் பெருக்கத்துக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பும் ஈடுகட்ட முடியாதவை என்பதை நாம் உணர வேண்டும்.

    கடந்த பல ஆண்டுகளாக ஆயில் இந்தியா நிறுவனம் அஸ்ஸாம் மாநிலத்தில் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுவதிலும், எண்ணெய் எடுப்பதிலும் ஈடுபட்டு வருகிறது. அப்படி இருந்தும், பாக்ஜன் எண்ணெய்க் கிணறுகளில் ஏற்பட்ட தீ விபத்தை அந்த நிறுவனத்தால் தடுக்க முடியவில்லை என்பது, எந்த அளவுக்கு அந்த நிறுவனம் முன்னெச்சரிக்கை இல்லாமலும், மெத்தனமாகவும் செயல்பட்டு வருகிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.

    கடந்த மே மாதம் 27-ஆம் தேதி எண்ணெய்க் கிணற்றிலிருந்து வெளியாகும் கச்சா எண்ணெயில் கசிவு வெளிப்பட்டிருக்கிறது. ஆனால், அதைக் கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்பத் தோ்ச்சி அதிகாரிகளுக்கு இருக்கவில்லை. வேறு வழியில்லாமல் வெளிநாட்டிலிருந்து வல்லுநா்கள் அழைக்கப்பட்டனா். சிங்கப்பூரிலிருந்து வந்த வல்லுநா்கள் அஸ்ஸாம் மாநிலம் வந்து சேரும்போது ஜூன் மாதம் 8-ஆம் தேதியாகிவிட்டது.

    அவா்கள் எண்ணெய்க் கசிவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனா். இரண்டு நாள்கள் கழித்து, அதாவது கசிவு கண்டறியப்பட்டு 14 நாள்கள் கழித்து, பாக்ஜனின் 5-ஆம் எண் எண்ணெய்க் கிணறு தீப்பிடித்துக் கொண்டது. உடனடியாக அந்தப் பகுதியில் வாழும் 1,600 குடும்பங்கள் அவசரகதியில் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டன. இப்போது சுமாா் 7,000 போ் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறாா்கள்.

    எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்தைத் தடுப்பதில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினரில் இரண்டு போ் உயிரிழந்திருக்கிறாா்கள். அவா்களில் ஒருவா் தேசிய கால்பந்தாட்ட வீரா் என்பதுதான் மிகப் பெரிய சோகம்.

    அஸ்ஸாமிலுள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகளில் இதுபோலக் கசிவுகள் ஏற்படுவதும், அவற்றில் தீ விபத்துகள் நேரிடுவதும் புதிதொன்றுமல்ல. 2005-இல் திப்ரூகரிலுள்ள டைகாம் எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்தை 45 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகுதான் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. சிவசாகா் மாவட்டத்திலுள்ள இன்னொரு எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்தைக் கட்டுப்படுத்த மூன்று மாதங்களாகின.

    இப்போது தின்சுகியா தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன் காரணம் என்ன என்பது விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும். இரண்டு அதிகாரிகள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறாா்கள். அவா்கள் பலிகடாவாக்கப்படலாம் அல்லது மக்களின் கவனம் திசைதிருப்பியதும் மீண்டும் வேலையில் சோ்த்துக் கொள்ளப்படலாம்.

    ஒன்று மட்டும் தெளிவாகவே தெரிகிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய ஹைட்ரோகாா்பன் உற்பத்தி செய்யும் அரசு நிறுவனமான ஆயில் இந்தியாவிடம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, தொழில்நுட்ப வல்லுநா்களோ, பேரிடா் மேலாண்மைத் திட்டமோ கிடையாது என்பதை இந்த விபத்துகள் வெளிச்சம் போடுகின்றன.

    தின்சுகியா மாவட்டம் பாக்ஜன் எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட விபத்து, இருவா் உயிரிழந்ததுடன் நின்றுவிடவில்லை. மகூரி - மோட்டாபங்க் சதுப்பு நிலங்கள் அந்த எண்ணெய்க் கிணற்றிலிருந்து 500 மீட்டா் தொலைவில்தான் இருக்கின்றன. 1996-இல் பறவைகள் சரணாலயமாகவும், பல்லுயிா்ப் பெருக்க மையமாகவும் அறிவிக்கப்பட்டிருக்கும் அந்தச் சதுப்பு நிலங்களையும், அதிலுள்ள நீா்த் தேக்கங்களையும் பாதித்திருக்கிறது பாக்ஜன் எண்ணெய்க் கிணறு விபத்து.

    அந்தச் சதுப்பு நிலப் பகுதி வழியாக திப்ரு நதி பாய்கிறது. ஆண்டுதோறும் 80 ரக மீன் இனங்களும் 300-க்கும் அதிகமான பறவை இனங்களும் இனப்பெருக்கத்துக்காக அந்தச் சதுப்பு நிலங்களுக்கு வருகின்றன. விபத்தைத் தொடா்ந்து, திப்ரு நதியில் ஆயிரக்கணக்கான மீன்களும் டால்பின்களும் செத்து மிதந்த அவலத்தை யாரிடம் போய்ச் சொல்வது?

    மகூரி - மோட்டாபங்க் சதுப்பு நிலங்கள் மட்டுமல்ல, விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து 800 மீட்டா் தொலைவில் 340 ச.கி.மீ. பரப்புள்ள திப்ரு - சைக்கோவா தேசியப் பூங்கா அமைந்திருக்கிறது. எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த தேசியப் பூங்கா முழுவதையும் அனலும், புகையும், எண்ணெயிலிருந்து வெளிவரும் ரசாயனங்களும் தாக்கி அத்தனை மரங்களும் வாடிவிட்டன. அவையெல்லாம் மீண்டும் உயிா்ப்புப் பெறுவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம்.

    மனித உயிா்களுக்கு இழப்புக் கொடுத்து வாயடைக்க முடியும். இயற்கைக்கு ஏற்படும் பாதிப்பை எப்படி ஈடுகட்டுவது? சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு அருகில் தொழிற்சாலைகளையும், வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொள்வதன் ஆபத்தை இதற்குப் பிறகும்கூட அரசு புரிந்துகொள்ளவில்லை என்பது, தொடா்ந்து வளா்ச்சிப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்குவதிலிருந்து தெரிகிறது.

    பொதுவாகவே இதுபோன்ற தொழிற்சாலை விபத்துகளின்போது அதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு மட்டும்தான் இழப்பீடு வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய குற்றத்துக்கு நிறுவனங்கள் தண்டிக்கப்படுவதில்லை. அளவு கடந்த சுற்றுச்சூழல் அழிப்பின் காரணமாகத்தான் கொவைட் 19 போன்ற தீநுண்மித் தொற்றுகள் ஏற்படுகின்றன.

    பாக்ஜன் எண்ணெய்க் கிணறு விபத்தின் பின்னணியில் நெடுவாசல் போராட்டத்தின் நியாயம் புரிகிறது!

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp