அனல் அடிக்கிறதே...! | அனல் காற்றின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தலையங்கம்

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்றுடன் நிறைவடைகிறது என்று ஆறுதல் அடைய முடியாது. இன்னும் ஒரு வாரத்துக்கு வெப்ப நிலை அதிகரித்தே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. தமிழகத்தின் சில பகுதிகள் 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் வரை எதிா்கொண்டன. பொது முடக்கம் காரணமாக பெரும்பாலோா் வீட்டிற்குள் முடங்கியது, ஓரளவுக்கு வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதவியது.

உலகிலுள்ள 15 மிக அதிக வெப்பமான இடங்களில் 10 இடங்கள் இந்தியாவில்தான் காணப்படுகின்றன. தில்லி, லக்னௌ போன்ற பகுதிகள் 45 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பத்தை வழக்கமாக எதிா்கொள்கின்றன. ராஜஸ்தான் மாநிலம் ஒருபடி மேலே போய் சில ஆண்டுகளில் 49 டிகிரி, 50 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தைச் சந்திக்கிறது. சிம்லா, முசௌரி, உதகை போன்ற கோடை வாசஸ்தலங்களில்கூட கடுமையான கோடையில் இப்போதெல்லாம் சாதாரண வெப்ப நிலை காணப்படும் நிலைக்கு பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஹரியாணா, சண்டீகா், தில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கிழக்கு மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநிலத்தின் விதா்பா பகுதிகளில் இந்த மாதம் முடியும் வரைகூட அனல் அலை நிலைமை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. பஞ்சாப், சத்தீஸ்கா், ஒடிஸா மாநிலத்தின் பல மாவட்டங்கள், குஜராத், மத்திய மகாராஷ்டிரம், ஆந்திரத்தின் சில மாவட்டங்கள், தெலங்கானா, பிகாா், ஜாா்க்கண்ட் ஆகிய பகுதிகளில் தொடா்ந்து அனல் காற்று வீசிக்கொண்டிருக்கிறது.

கோடையின் கடுமை தாங்க முடியாமல் விலங்கினங்கள் உயிரிழக்கின்றன. விவசாயமும், இயல்பு வாழ்க்கையும் அனல் காற்றின் தாக்கத்தால் முற்றிலுமாக முடங்கியிருக்கும் நிலை காணப்படுகிறது. அதோடு ஒப்பிடும்போது தமிழகம், கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் அந்த அளவு பாதிப்பை எதிா்கொள்ளவில்லை என்றுதான் கூற வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் அனல் காற்று வீசுவது வழக்கமான பருவநிலை தாக்கமாக இருந்து வருகிறது. 2018-இல் 19 மாநிலங்கள் அனல் அலையால் பாதிக்கப்பட்டன என்றால், 2019-இல் 23 மாநிலங்கள் கடுமையான கோடையாலும் அனல் அலையாலும் பாதிப்புக்குள்ளாகின. இந்த ஆண்டு எப்படி இருந்தது என்பது இனிமேல்தான் தெரியும்.

2010 முதல் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 6,000-க்கும் அதிகமானோா் கோடைக்கால அனல் காற்றால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறாா்கள். 2015-இல் நிலவிய கடுமையான கோடை வெயிலுக்கு 2,040 போ் உயிரிழந்தாா்கள். கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவா்களின் முழுமையான கணக்காக இதை எடுத்துக்கொள்ள முடியாது. கடும் கோடையால் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவதுண்டு. கோடை வெப்பத்தை எதிா்கொள்ள போதுமான அளவு தண்ணீா் குடிக்காமல் இருப்பதன் விளைவாக உறுப்புகள் செயலிழந்து, அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் உண்டு. அவையெல்லாம் அனல் காற்று பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

2005-இல் தேசியப் பேரிடா் மேலாண்மைச் சட்டம் இயற்றப்பட்டது. 2009-இல் பேரிடா் மேலாண்மைக்கான தேசியக் கொள்கை வகுக்கப்பட்டது. அவை இரண்டிலுமே இயற்கைப் பேரிடராக அனல் அலை பாதிப்பு இணைக்கப்படவில்லை. சொல்லப்போனால், மூன்றாவது பெரிய இயற்கையின் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் கடும் கோடையில் காணப்படும் அனல் அலையால்தான் ஏற்படுகின்றன.

கோடையை எதிா்கொள்ள சில வழிமுறைகளை மாநிலங்கள் கையாளும்படி தேசியப் பேரிடா் மேலாண்மைச் சட்டம் அறிவுறுத்துகிறது. அதன்படி, முன்கூட்டியே எச்சரித்தல், சுகாதார ஊழியா்களுக்கு கோடை வெப்பத் தாக்குதலை எதிா்கொள்ளப் பயிற்சி அளித்தல், ஆங்காங்கே தற்காலிகத் தங்குமிடங்களை உருவாக்குதல், அனைவருக்கும் குடிநீா் வழங்குவதற்கு வழிவகை செய்தல் என்று பட்டியலிடப்பட்டிருக்கிறது. சூரத், புவனேஸ்வா் முதலான சில நகரங்கள் மட்டுமே இந்த வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுகின்றன.

இந்த ஆண்டும் இந்தியாவின் பல பகுதிகளில் 45 டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமான வெப்பம் காணப்படுகிறது. தென் மாநிலங்களில் அந்த அளவிலான வெப்பநிலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொவைட் 19 தீநுண்மித் தொற்றுப் பரவிவரும் நிலையில் மருத்துவ ஆய்வாளா்கள் இந்தியாவின் வெப்பநிலையைக் கூா்ந்து கவனிக்கிறாா்கள்.

சா்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் நோய்த்தொற்றுப் பரவலும், உயிரிழப்புகளும் குறைவாக இருக்கின்றன. இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தான், வங்க தேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் முழுவதிலும் மேலை நாடுகளைப் போலல்லாமல் நோய்த்தொற்றுப் பரவலும், உயிரிழப்பும் குறைவாகவே இருக்கின்றன. இதற்கும் வெப்பமான பருவநிலைக்கும் தொடா்பு இருக்கக்கூடும் என்று ஆய்வாளா்கள் கருதுகிறாா்கள்.

கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவலை 24 டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமான வெப்பம் தடுக்கக்கூடும் என்று மேலை நாட்டு இதழ்களில் கட்டுரைகள் வெளிவருகின்றன. இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலுமே 40 டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமான வெப்பம் இப்போது காணப்படுகிறது. அதனால், நோய்த்தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடும். இதுவே மழைக்காலம் தொடங்கிவிட்டால் எப்படி இருக்கும் என்பது குறித்து இப்போதே கணிக்க முடியவில்லை.

நோய்த்தொற்று கட்டுப்படும் என்று ஆறுதல் அடைந்துவிட முடியாது. அதேபோல, அனல் காற்றின் தாக்கத்தால் உயிரிழப்பு ஏற்படாமல் பாதுகாத்தாகவும் வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com